மலேசியாவில் தேசிய இலக்கியவாதி என்னும் விருதே இலக்கியத்துக்காக அளிக்கப்படும் உயரிய விருது. இந்த விருதைப் பல எழுத்தாளர்கள் பெற்றிருந்தப்போதிலும் எழுத்தாளர் அ.சமாட் சைட்டே தேசிய இலக்கியவாதியாக பெருமளவில் நினைவுக்கூரப்படுவராக இருக்கிறார். அதற்கு முதன்மையான காரணம் இலக்கியத்துறைச் செயற்பாடுகளைத் தாண்டியும் சமாட் சைட்டின் செயற்பாடுகள் விரிந்திருப்பதே எனலாம். ( தமிழ்விக்கிப் பதிவு ) இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி அறிவியல், கணிதப்பாடங்கள் ஆங்கிலமொழியில் கற்பிக்கப்படும் முடிவை எதிர்க்கும் போராட்டம், தேர்தல் அரசியல் சீர்திருத்தம் கோரிய பெர்சே பேரணி எனப் பல போராட்டங்களை அ.சமாட் சைட் முன்னெடுத்திருக்கிறார்;பங்கெடுத்திருக்கிறார். அவருடைய முதல் நாவலான சலினா 1958 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1961 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. சலினா நாவல் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சிங்கப்பூரைக் களமாகக் கொண்டது. இந்தியத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பொதுப்பணித்துறைக் குடியிருப்பொன்றின் அடுத்து இருக்கும் ஆட்டுக்கொட்டகைகளை அறைகளாகத் தடுத்து உருவாகியிருக்கும் கம்போங் கம்பிங் (ஆட்டுக் கம்பம்) தான் சலினா ந...