2023 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு விருந்தினராகச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பின் ஊடே இன்னொரு முக்கியமான பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. அவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மலாய் மொழி எழுத்தாளர் எஸ்.எம்ஷாக்கிரின் அவைக்கு மட்டுறுத்துணராகப் பொறுப்பேற்று நடத்துவது. முன்னரே ஷாக்கிரை ஒரு முறை சந்தித்து அவருடைய படைப்புலக அறிமுகத்தைக் குறித்து உரையாடியதைத் தவிர பெரிய முன் தயாரிப்புகள் இல்லாமல்தான் அந்த அவையை வழிநடத்தினேன். அந்த அவையில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் வழியேதான் மலேசியாவில் இருக்கும் பன்மொழி இலக்கியச் சூழல் எவ்வித உரையாடல்களும் இன்றி தத்தம் தனித்தனித் தீவாந்திரங்களாகச் செயற்படுகிறதென்ற உணர்வு உறுதிபட்டுக் கொண்டே வந்தது. அதற்கடுத்த என்னுடைய அவையிலும் கூட மலாய் மொழி இலக்கியத்தை வாசிக்கிறீர்களா… அதன் செல்திசை குறித்துச் சொல்லுங்கள் போன்ற கேள்விகளுக்குத் தெரியாதென்ற பதிலை அளிக்க மிகுந்த குற்றவுணர்வாக இருந்தது. நேரடி அனுபவங்களிலிருந்தும் செய்திகளிலிருந்தும் பெறும் தகவல்களைக் கொண்டு மற்ற மொழி இலக்கியங்களை அணுகுவதும் அபத்தமாக இருந...