மணற்கடிகை நாவல் வாசிப்பனுபவம்
ஏதேனும் இரைச்சல்
அல்லது தொடர் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குத் தூக்கம் நன்கு வரும். உறக்கமற்ற
இரவுகளில் நிசப்தபே பெரும் அச்சமாகச் சூழ்ந்து கொள்ளும். சூழ இருக்கும் நிசபத்தின்
பேரிரைச்சலைக் களைய ஏதேனும் ஒலியைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். மணற்கடிகை நாவலை
வாசித்து முடிக்கும் வரை ஓயாத சிறு இரைச்சலொன்று ஒலித்துக் கொண்டிருந்ததாகவே இருந்தது.
குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செல்கிற தறிச்சத்தமாகவும் இயந்திரங்களின் கலவையொலிகளாகவும்
இருந்தன. திருப்பூர் எனும் இந்தியாவின் மாபெரும் தொழிற்நகரொன்றின் பாரம்பரியத் தொழிற்முறையிலிருந்து
நவீனத் தொழில் உலகுக்குள் செல்லும் காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுந்திருக்கிறது.
சிறு வயதில் நகரங்களைப் பார்க்கும் போது வியப்பில் ஆழ்த்துவது அதன் ஒழுங்கும் பிரம்மாண்டமும்தான்.
கார்கள் ஓயாமல் எதையோ நோக்கி விரைவதும், கட்டிடங்கள் உயர்ந்து செறிவாக, சாலைகள் மேல்
கீழாக இருப்பது பயத்தையும் வியப்பையும் ஆழ்த்தும். அதே நகரில் வந்து இருக்கும் போது
அதன் பிரம்மாண்டங்கள், ஒழுங்குக்குள் அமைகிற வாழ்வு குறித்த விசாரமே இந்நாவலை எல்லா
நகருக்குமானதாக எல்லா மனிதர்களுக்குமானதாக ஆக்குகிறது.
நாவலின் முதன்மைப்
பாத்திரங்களாக வளரிளம் பருவத்தில் சிவா, சண்முகம், பரந்தாமன், அன்பழகன், திரு ஆகியோர்
வருகின்றனர். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னதாக நீளும் அலைவுகளும் தடுமாற்றங்களும்
நடுத்தர வயது வரையில் சொல்லப்படுகிறது. என்னுடைய வயதையும் கடந்து செல்கின்ற வாழ்வு
என்பதால் பலமுறை என்னையும் நாவலில் பார்வையாளனாக இருத்திக் கொள்ள முடிந்தது. தமிழ்
சமூகக் கட்டுமானம் என்பது பெரும்பாலும் இயங்கும் தொழிற்முறையிலிருந்து உருவாவதே. அந்த
இறுக்கமான கட்டுமானமே சமூக நிலை, பொருளியல் நிலை ஆகியவற்றை உறுதி செய்கிறது. நிலப்பிரப்புதவக்
காலத்துக்குப் பிந்தைய முதலாளித்துவக் காலக்கட்டத்தில் நிகழும் மாற்றங்களான கல்வி வாய்ப்பு,
தொழிற் புரட்சி போன்றவற்றால் மரபாக வரும் சமூகக்கட்டுமானம் தலைக்கீழாக்கம் அடைகின்றன.
இறுக்கமான வருக்கப்படிநிலையிலிருந்து கல்வி பெற்று வரக்கூடியவர்கள் தொழிற்சாலைகளில்
வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தப் பாய்ச்சல் நிகழும் போது சமூகக்கட்டுமானம் நிச்சயமாக
உடைந்து போகிறது. ஆனால், வழிவழியாகத் தொடர்ந்து வரும் சமூக, ஒழுக்கவியல் மதிப்பீடுகள்
ஆழ்மனத்தில் அப்படியே தங்கி போகின்றன. இந்தச் சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்வதன் வாயிலாகவே,
மணற்கடிகை நாவலை அணுக இயலும்.
மனித மனத்தில்
இருக்கும் ஆழ்மன உணர்வுகள் நவீன சமூக உருவாக்கத்தின் போது எதிர்கொள்கிற முரண்களையும்
திரிபுகளையுமே இந்நாவலின் முதன்மை தரிசனமாகத் திரட்டிக் கொள்ள முடிகிறது. இந்தத் தொழிற்
வளர்ச்சியில் நில்லாமல் ஒடிக்கொண்டிருக்கிற சிவராஜ் தன்னுடைய காமத்தையும் ஓயா அலைகழிதலாகவே
காண்கிறான். எதுவுமே நிறைவு செய்ய முடியாத வெறுமையை அடைகிறான். அந்த வெறுமையின் ஆழத்தில்
இளமையில் எழுந்த உமாவின் மீதான காதலே உறைந்திருக்கிறது. அதைப் போலவே, சண்முகமும் காமத்தைக்
கொண்டாட்டமாகக் கருதுகிறான். அந்தக் காமம் பெண் குழந்தை பிறந்தவுடன் முழுவதுமாய் மாறுவதென்பது
நாடகீயத்தருணமாக அமைந்திருந்தது. வாழ்வின் தொடரோட்டத்தில் காமத்திலிருந்து விலகி செல்கிறான்
அன்பழகன். தன்னுடைய ஆணவம் தோற்றுப் போகுந்தருணத்தில் காமத்திலிருந்து ஓட முயல்கிறான்
பரந்தாமன். காமம் என்பதை வெறும் இச்சையாக, இயந்திரம் ஓடுவதற்கான மசகு எண்ணெயாக மாறி
போகும் தருணத்தையும் இந்நாவல் அளிக்கிறது.உடல் வெறும் பொருளாக மாறுகிறது. அதன் மூலமாகப்
பெறும் பணத்தில் தனக்கான சமூகப்பொருளியல் நிலையை அடைகிறாள்………………
இந்த நாவலில் இளமைக்கே உரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தேடலையும் சொல்கிறது. காத்திரமான இலக்கியப்படைப்புகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் எனச் சண்முகம் சில முன்முடிவுகளுடன் இருக்கிறான். கம்யூனிச இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு அரசியல் முடிவுகளால் வெளியேறுகிறான் பரந்தாமன். இந்த அடையாளங்களை விரும்பி அணிந்து பின்னர் மனம் கொள்கிற வெறுமையை இந்நாவலில் காண முடிகிறது. இளமையில் சாகசமும் அருஞ்செயலாகத் தோன்றுபவை மெல்ல திரிபடைந்து பொருள்ளில்லாத வெறும் செயலாக மாறுகிறது.
எழுந்துவரும்
தொழிற்புரட்சி காலத்தில் கூடவே கம்யூனிசமும் தேவையென உணரப்படுகிறது. தொழிலாளிகளின்
மீதான முதலாளித்துவத்தின் சுரண்டலைப் பற்றிய தேவையினால் அவ்வியக்கம் திருப்பூரில் அல்லது
அதைச் சமானமான வேறு நகரங்களிலும் வேறு பெயர்களில் தேவைபடுகிறது. ஆனால், மக்கள் உள்ளுக்குள்
கனவுகாண்பது சமநிலையை அன்று…எதிரில் இருப்பவனை முன்னேறிச் செல்லும் கனவுகளையே. அந்தக்
கனவுகளைச் சுமந்து கொண்டு கம்யூனிசத்தைப் பேசுவது முரணாக அமைகிறது. அந்த முரனில் கம்யூனிசமும்
முதலாளித்துவத்துடன் சற்றே கடுமையான சமரசத்தைச் செய்து கொள்ளும் அடையாள அரசியலாக மாறுகிறது.
கம்யூனிசம் போன்ற இயக்கங்களின் பங்களிப்பு என்பது தேவையானதாகவே இருந்தாலும் இதுமாதிரியான
சமரங்களின் வாயிலாகவே நீடித்திருக்க இயலுகின்றன எனும் சமூக யதார்த்ததை முன்வைக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக