முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 வாடிவாசல் நாவல் வாசிப்பனுபவம்

சி. சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் ஒரு நிறைவான சிறுகதையை வாசித்த உணர்வை அளித்தது. மாட்டுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது மனிதனுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது என்கிற நாவலின் இறுதி வரி இந்நாவலின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தின் தரிசனமாக இருக்கிறது. தன் தந்தையைக் குத்திக் கிழித்த மாட்டை அடக்குவதற்காக பிச்சி எனும் இளைஞன் செல்லாயி ஜல்லிகட்டுக்கு வருகிறான். அந்தக் காளை ஜமினின் பெருமைக்குரிய சின்னமாகவும் இருக்கிறது. இன்னொருவகையில் நிலப்பிரபு ஒருவரின் செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றின் வடிவாகவே அதன் திமிறல், பேரூரு இருக்கிறது என ஊகிக்கலாம். அந்த மாட்டை அடக்கும் சாகசத்தின் சித்தரிப்புகளாகவே நாவல் விரிகிறது. வாடிவாசலில் நின்று கண்முன்னே ஜல்லிக்கட்டைப் பார்க்கும் உணர்வை இந்நாவலின் சித்தரிப்பின் வாயிலாக சி.சு.செல்லப்பா அளிக்கிறார். நாவலின் பிச்சியின் நண்பனாக வரும் மருதன், ஊர் கிழவரின் பாத்திரம் நன்றாக அமைந்திருந்தது. ஊர் கிழவன் ஒவ்வொரு மாட்டையிம் பற்றிக் குறிப்பிடும் நுட்பங்கள், அவன் தந்தையைப் பற்றியும் மாடணைவது பற்றிச் சொல்லும் குறிப்புகளும் போர்ச்சூழலில் இருக்கும் வீரனுக்கு உரைக்கும் உரைகளாக இருந்தன.

 


ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள் மனிதனுள் ஊறியிருக்கும் ஆதியுணர்ச்சியான வன்முறையினை ஏதோ ஒருவகையில் ஆற்றுப்படுத்த அமைந்தவையாக இருக்கிறது. இந்த நாவலின் விவரிப்பும் போர்ச்சூழலில் நின்றிருக்கும் வீரனின் உள்ளுணர்வாகவும் போர்க்களப் பின்னணியாகவுமே உருமாறியிருந்தது. ஊர் கிழவனின் வாஞ்சையான பேச்சு என்பது முதுவீரன் ஒருவன் நல்ல உறுதியான வீரனொருவனைப் பார்த்தப் பின் அவனுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்கிற எழுகிற உந்துதலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிற பாத்திரமாகவே அமைந்திருந்தது.

இந்த மாட்டை அணைந்தப் பின், ஜமீனின் பெருமைக்குரிய சின்னம் பாழ்பட்டதாக அமைகிறது. பிச்சியை அழைத்து நூறு ருபாய் கொடுத்து ஜமீன் கவுரவிக்கிறார். பத்துப் பேரைக் காயமுறுத்தி இருவரைக் கொன்றும் தன்னை அணைந்தவன் மீதான சினம் அடங்காமல் காளை அலைகிறது. அதனை ஜமீந்தார் துப்பாக்கியால் கசந்த சிரிப்புடன் கொல்கிறார். மனிதனுள் இருக்கும் மிருக உணர்வும் மாட்டின் இயல்பை மீறிய உணர்வு கொந்தளிப்பும் சந்தித்துக் கொள்கிற புள்ளியாக அவ்விடம் அமைகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...