வாடிவாசல் நாவல் வாசிப்பனுபவம்
சி. சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் ஒரு நிறைவான சிறுகதையை வாசித்த உணர்வை அளித்தது. மாட்டுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது மனிதனுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது என்கிற நாவலின் இறுதி வரி இந்நாவலின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தின் தரிசனமாக இருக்கிறது. தன் தந்தையைக் குத்திக் கிழித்த மாட்டை அடக்குவதற்காக பிச்சி எனும் இளைஞன் செல்லாயி ஜல்லிகட்டுக்கு வருகிறான். அந்தக் காளை ஜமினின் பெருமைக்குரிய சின்னமாகவும் இருக்கிறது. இன்னொருவகையில் நிலப்பிரபு ஒருவரின் செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றின் வடிவாகவே அதன் திமிறல், பேரூரு இருக்கிறது என ஊகிக்கலாம். அந்த மாட்டை அடக்கும் சாகசத்தின் சித்தரிப்புகளாகவே நாவல் விரிகிறது. வாடிவாசலில் நின்று கண்முன்னே ஜல்லிக்கட்டைப் பார்க்கும் உணர்வை இந்நாவலின் சித்தரிப்பின் வாயிலாக சி.சு.செல்லப்பா அளிக்கிறார். நாவலின் பிச்சியின் நண்பனாக வரும் மருதன், ஊர் கிழவரின் பாத்திரம் நன்றாக அமைந்திருந்தது. ஊர் கிழவன் ஒவ்வொரு மாட்டையிம் பற்றிக் குறிப்பிடும் நுட்பங்கள், அவன் தந்தையைப் பற்றியும் மாடணைவது பற்றிச் சொல்லும் குறிப்புகளும் போர்ச்சூழலில் இருக்கும் வீரனுக்கு உரைக்கும் உரைகளாக இருந்தன.
ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள் மனிதனுள் ஊறியிருக்கும்
ஆதியுணர்ச்சியான வன்முறையினை ஏதோ ஒருவகையில் ஆற்றுப்படுத்த அமைந்தவையாக இருக்கிறது.
இந்த நாவலின் விவரிப்பும் போர்ச்சூழலில் நின்றிருக்கும் வீரனின் உள்ளுணர்வாகவும் போர்க்களப்
பின்னணியாகவுமே உருமாறியிருந்தது. ஊர் கிழவனின் வாஞ்சையான பேச்சு என்பது முதுவீரன்
ஒருவன் நல்ல உறுதியான வீரனொருவனைப் பார்த்தப் பின் அவனுக்குத் துணையாக இருக்கவேண்டும்
என்கிற எழுகிற உந்துதலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிற பாத்திரமாகவே அமைந்திருந்தது.
இந்த மாட்டை அணைந்தப் பின், ஜமீனின் பெருமைக்குரிய சின்னம்
பாழ்பட்டதாக அமைகிறது. பிச்சியை அழைத்து நூறு ருபாய் கொடுத்து ஜமீன் கவுரவிக்கிறார்.
பத்துப் பேரைக் காயமுறுத்தி இருவரைக் கொன்றும் தன்னை அணைந்தவன் மீதான சினம் அடங்காமல்
காளை அலைகிறது. அதனை ஜமீந்தார் துப்பாக்கியால் கசந்த சிரிப்புடன் கொல்கிறார். மனிதனுள்
இருக்கும் மிருக உணர்வும் மாட்டின் இயல்பை மீறிய உணர்வு கொந்தளிப்பும் சந்தித்துக்
கொள்கிற புள்ளியாக அவ்விடம் அமைகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக