முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

இமயத்தியாகம் நாவல் வாசிப்பனுபவம்

 

எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய இமயத்தியாகம் நாவலை வாசித்தேன். என்னுடைய வளரிளம் பருவத்தில் ஜப்பானியர் ஆட்சிக்காலக் கொடுமைகளை வயது முதிர்ந்த பாட்டிகள் சில சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். விநோதமான தண்டனைகள், புரியாத ஒரிரு ஜப்பானிய சொற்கள், பஞ்சக்கால உணவு வகைகள், ஜப்பானியரின் உடைகள், பெரிய வாள்கள் ஆகியவற்றைச் சிறுவர்களுக்கே உரிய வியப்புடன் சொல்ல கேட்டிருக்கிறேன். பள்ளிப்பாட வரலாறு என்பதும் ஜப்பானியாராட்சியை இருண்ட காலக்கட்டமாகவே வகைப்படுத்துகிறது.  

 இந்த வரலாற்றை முப்பரிமாண அனுபவமாக இமயத்தியாகம் அளித்தது. ஜப்பானியர்கள் மலாயாவைக் கைபற்றுவதில் இருந்து நாவல் தொடங்குகிறது. மலாயா நிலப்பரப்பை முழுவதும் அங்குலம் அங்குலமாய் அளந்ததைப் போன்ற துல்லிய அறிவும், பிரிட்டன் படைகளின் பலத்தையும் வேவுபார்த்து முழுவதுமாய் அறிந்து வைத்திருக்கின்றனர். பாங்காக்கில் செயல்பட்டு வரும் இந்திய சுதந்திரச் சங்கத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தித் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். அதன் நீட்சியாகவே, ராஷ் பிகாரி போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தையும் கிழக்காசியாவைக் கைபற்றுவதற்கான முயற்சியில் இணைத்துக் கொள்கின்றனர். நாவல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில், ஜப்பானியர் படைகளுக்கும் பிரிட்டன் மலாயா படைகளுக்கும் இடையிலான போரைச் சொல்லிச் செல்கிறார். போர் நடந்த இடங்கள், திசைகள், தேதிகள் எனத் துல்லியமான வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். பிரிட்டன் படைகளும் அதன் நேசநாட்டுப் படைகளும் ஜப்பான் படையிடம் சரணடைவதில் முதல் பாகம் முடிகிறது. இரண்டாம் பாகம், இந்தியச் சுதந்திரச் சங்கம், இந்தியத் தொண்டர் படை ஆகியவை இணைந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் படைப்பயிற்சி பெறுவதைக் குறிப்பிடுகிறது. மூன்றாம் பாகத்தில் மலாயாவிலிருந்து இந்தியாவின் கிழக்கெல்லையான பர்மிய நாட்டுக்குச் சென்று இந்தியத் தேசிய ராணுவத்தினர் செய்யும் போரின் சித்திரிப்பாகத் தொடங்குகிறது. அந்தப் போரில் ஏற்படுகிற பின்னடைவும் ஜப்பானியர் படைகள் சரணடைவதும் நேதாஜியின் மரணத்துடன் நாவல் முடிவடைகிறது. ஜப்பானியர் படைகளின் எழுச்சியுடன் மேலோங்குகின்ற இந்தியாவுக்கான ஆயுத வழியிலான விடுதலைப் போராட்டமும் அதன் வீழ்ச்சியையுமே நாவல் பதிவு செய்திருக்கிறது எனச் சொல்லலாம். இந்தப் பெருஞ்சித்திரத்தின் ஊடே மலாயாவில் காப்பார் கலகத்தில் பங்குபெற்றதற்காக நாடு கடத்தப்பட்டு தாய்லாந்தில் இருக்கும் இளங்கோ எனும் கதைமாந்தரின் கதைச்சரடு அமைகிறது. பிரிட்டன் இந்தியா படைகளிடம் பிரச்சாரம் செய்து இந்தியத்தேசிய ராணுவத்துக்குப் பக்கம் இணையச் செய்கிறான். தோட்டத்தில் இருக்கும் இளைஞர்களையும் படையில் சேர்க்கிறான். நேதாஜியின் மீதும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மீதும் பெருநம்பிக்கை வைத்து இயங்கி கொண்டிருக்கிறான். ஒரு இலட்சியவாதத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுததவனாகவே நாவலில் வருகிறான்.



இந்த நாவலுக்காக ஆசிரியர் பலரையும் நேர்காணல் செய்து, பல நூல்களையும் தரவுகளையும் வாசித்து அக்காலக்கட்டத்தினை நாவலின் பல இடங்களிலும் கண்முன் நிகழ்த்தியிருக்கிறார். அந்தக் கொந்தளிப்பான காலக்கட்டத்தை வரலாற்றுப்பதிவாக ஆக்க வேண்டும் என்ற உந்துதலே பல இடங்களில் வெளிப்பட்டது.தமிழ் சூழலில் வரலாறு என்பது பெரும்பாலும் வீரநாயகப் பிம்பமும் புளங்காங்கிதங்களுமாகவே இருக்கின்றன. இந்த நாவல் ஒருவகையில் நேதாஜி போன்ற பெருந்தலைவர்களை மட்டுமின்றி வரலாற்றின் முன் எளியவர்கள் எப்படி பொருள் கொள்ளப்பட்டிருக்கின்ரனர் எனும் மாற்று வரலாற்றைப் பதிவு செய்கிறது. இந்த நாவலில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்தியத் தேசிய ராணுவத்தின் மூலமாக மலாயா-சிங்கப்பூர் இந்தியர்களை இந்தியாவுக்கான விடுதலைப் போரில் உள்ளிணைக்கிறார். இந்தியாவைப் பார்த்திராத ஒரு தலைமுறையினரிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்துகிறார். கண்முன் பார்த்திராத தங்கள் முன்னோர்களின் நாட்டுக்காக அனைத்தையும் இழந்து படையில் ஆயிரக்கணக்கில் வந்து இணைகின்றனர். ரத்ததால் விண்ணப்பப்பாரம் எழுதுதல், நகைகளையும் பணத்தையும் போர் செலவினங்களுக்காகக் கொடுத்தல், வயதைக் கூட்டிச் சொல்லிப் படையில் பங்குபெறுதல் எனப் பித்துநிலைக்குச் சற்றும் குறையாத பல செயல்களைச் செய்கின்றனர். இந்திய விடுதலை எழுச்சி தரும் நேர்நிலையிலான பித்துச் செயற்பாடுகளைக் காண முடிகிறது.

போர் என்பது மனித மனத்தில் இருக்கும் அச்சம், ஐயத்தையும் ஊதிப் பெருக்குகின்றது. பிரிட்டன் படைகளில் இருக்கும் இந்தியப்படையினரைச் சரணடையச் செய்து இந்தியத் தேசிய ராணுவத்தில் சேர்வதற்காகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இந்தியப்படையினரிடம் இருக்கும் பிரிட்டன் படைகள் மீதான சந்தேகங்களையும் நிறைவின்மையையும் பிரச்சாரத்தின் மூலம் பெருக்குகின்றனர். கடுங்குளிரிலும் முறையான உணவின்மையாலும் போர்களத்தில் பலியாகிக் கொண்டிருக்கும் இந்தியராணுவத்தினர் அணிமாறுகின்றனர். பிரிட்டனுக்கு அடிமையானதைப் போல ஜப்பானுக்கும் அடிமையாகிவிடுவோம் எனச் சிலர் உள்ளூர எண்ணுகின்றனர். எனவே, இந்தியத் தேசிய ராணுவத்திலும் முழுமையான நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றனர். ராணுவத்தில் வந்து சேரும் தொண்டூழியர்களை இளக்காரமாக எண்ணுகின்றனர். நேதாஜி ஜப்பானியர்களுடன் சேர்ந்து இந்தியாவைக் கைபற்ற முனைகிறார் என்ற அச்சத்தை வானொலி வாயிலாக இந்திய மக்களுக்கு பிரிட்டன் பரப்புகிறது. ஐ.என்.ஏ படைகளால் பயிற்றுவிக்கப்பட்டு இந்தியாவுக்குச் செல்கின்ற உளவாளிகள் பிரிட்டனுக்கு ஆதரவானவர்களாக ஆகின்றனர். இந்தியாவின் எல்லையோர பூர்வக்குடி மக்களும் பிரிட்டனுக்கு ஆதரவாக உளவாளிகளாக இருக்கின்றனர்.

போர் என்பது அறுதியாக எந்த அதிகாரம் வலிமையானது என்பதை முடிவுசெய்வதற்கான முயற்சியாகவே இருக்கிறது. அதன் கருவிகளாக மட்டுமே சித்தாந்தங்கள் தேவைபடுகின்றன. இந்தியாவுக்கான விடுதலைப் போரை நிகழ்த்தும் ஐ.என்.ஏ வைக் கூட்டு சேர்ப்பதன் மூலம் கிழக்காசியாவைத் தங்கள் குடைக்குக் கீழ் கொண்டு வரும் கனவை ஜப்பான் கொண்டிருக்கிறது. ஐ.என்.ஏ படைகளுக்குச் செய்யும் போர்தளவாட உதவிகள், போர்பயிற்சிகளின் பின்னால் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வேட்கையைக் கொண்டிருக்கிறது. இந்தியச் சுதந்திரச் சங்கத்தின் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் அரிசி மூட்டையில் இருக்கும் சுதந்திரச் சங்கத்தின் முத்திரையை ஜப்பானிய வீரனொருவன் வெட்டுகிறான், இந்தியத் தேசிய ராணுவத்தின் அதிகாரிகளை தங்களுக்கு மரியாதை செலுத்த ஜப்பானிய கீழ்நிலைத்தளபதிகள் கட்டாயப்படுத்துகின்றனர். அதைப் போல ஐ.என்.ஏவின் சேர்ந்திருக்கும் தொண்டூழியப்படையினரை மூத்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழானவர்களாக நடத்துகின்றனர். விடுதலை என்னும் இலட்சியவாதம் இவர்களனைவரையும் பிணைக்கிறது.

போர்சித்திரங்களைத் தாண்டி இந்தியாவுக்கு வெளியே நிகழ்ந்திருக்கும் விடுதலைப் போரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை இந்நாவல் அளிக்கிறது. இந்தியத் தேசிய ராணுவத்தின் உருவாக்கம், சுபாஸ் சந்திரபோஸின் பங்களிப்பு ஆகியவற்றை விரிவாக முன்வைக்கிறது. அந்த வரலாற்றை ஆவனப்படுத்தும் தன்மையும் கூட புனைவாகக் கூடிய சில தருணங்களை இந்நாவல் தவறவிட காரணமாக அமைகிறது. பெருங்காடுகளில் நிகழும் போரில் காடுகள், வனவிலங்குகள் குறித்த விவரனைகள் மிகக் குறைவாகவே அமைகின்றன. பிரிட்டனின் தோல்வியால் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாட்டிலிருந்து மலாயாவுக்கு வருகின்ற படைகள் நிர்க்கதியான சூழலுக்கு ஆளாகின்றனர். ஆஸ்திரேலியா படைத்தளபதி இந்தோனேசியாவுக்குத் தப்பித்துச் செல்கின்றனர். இவ்வாறாகச் சூழல் நெருக்கடியால் சிக்கிக் கொள்கின்றவர்களைப் பற்றிய விவரிப்பு தவறவிடப்பட்டிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் முயற்சியால் சில கதைமாந்தர்களைச் சம்பவங்களைச் சொல்வதற்கான தூதுவர்களாகவே இருக்கின்றனர்.

வெற்றியடைந்தவர்களின் வாழ்வையும் போராட்டத்தையுமே கவனப்படுத்தும் வரலாற்றுச் சூழலில் தங்கள் நம்பி ஏற்ற இலட்சியவாதம் ஒன்றுக்காக போரிட்டவர்களையும் அதன் வரலாற்றுச்சுவடுகளையும் புனைவனுபவமாக எழுத்தாளர் அ.ரெங்கசாமி கடத்தியிருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற