இமயத்தியாகம்
நாவல் வாசிப்பனுபவம்
எழுத்தாளர் அ.ரெங்கசாமி
எழுதிய இமயத்தியாகம் நாவலை வாசித்தேன். என்னுடைய வளரிளம் பருவத்தில் ஜப்பானியர் ஆட்சிக்காலக்
கொடுமைகளை வயது முதிர்ந்த பாட்டிகள் சில சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். விநோதமான தண்டனைகள்,
புரியாத ஒரிரு ஜப்பானிய சொற்கள், பஞ்சக்கால உணவு வகைகள், ஜப்பானியரின் உடைகள், பெரிய
வாள்கள் ஆகியவற்றைச் சிறுவர்களுக்கே உரிய வியப்புடன் சொல்ல கேட்டிருக்கிறேன். பள்ளிப்பாட
வரலாறு என்பதும் ஜப்பானியாராட்சியை இருண்ட காலக்கட்டமாகவே வகைப்படுத்துகிறது.
இந்த நாவலுக்காக ஆசிரியர் பலரையும் நேர்காணல் செய்து, பல நூல்களையும் தரவுகளையும் வாசித்து அக்காலக்கட்டத்தினை நாவலின் பல இடங்களிலும் கண்முன் நிகழ்த்தியிருக்கிறார். அந்தக் கொந்தளிப்பான காலக்கட்டத்தை வரலாற்றுப்பதிவாக ஆக்க வேண்டும் என்ற உந்துதலே பல இடங்களில் வெளிப்பட்டது.தமிழ் சூழலில் வரலாறு என்பது பெரும்பாலும் வீரநாயகப் பிம்பமும் புளங்காங்கிதங்களுமாகவே இருக்கின்றன. இந்த நாவல் ஒருவகையில் நேதாஜி போன்ற பெருந்தலைவர்களை மட்டுமின்றி வரலாற்றின் முன் எளியவர்கள் எப்படி பொருள் கொள்ளப்பட்டிருக்கின்ரனர் எனும் மாற்று வரலாற்றைப் பதிவு செய்கிறது. இந்த நாவலில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்தியத் தேசிய ராணுவத்தின் மூலமாக மலாயா-சிங்கப்பூர் இந்தியர்களை இந்தியாவுக்கான விடுதலைப் போரில் உள்ளிணைக்கிறார். இந்தியாவைப் பார்த்திராத ஒரு தலைமுறையினரிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்துகிறார். கண்முன் பார்த்திராத தங்கள் முன்னோர்களின் நாட்டுக்காக அனைத்தையும் இழந்து படையில் ஆயிரக்கணக்கில் வந்து இணைகின்றனர். ரத்ததால் விண்ணப்பப்பாரம் எழுதுதல், நகைகளையும் பணத்தையும் போர் செலவினங்களுக்காகக் கொடுத்தல், வயதைக் கூட்டிச் சொல்லிப் படையில் பங்குபெறுதல் எனப் பித்துநிலைக்குச் சற்றும் குறையாத பல செயல்களைச் செய்கின்றனர். இந்திய விடுதலை எழுச்சி தரும் நேர்நிலையிலான பித்துச் செயற்பாடுகளைக் காண முடிகிறது.
போர் என்பது
மனித மனத்தில் இருக்கும் அச்சம், ஐயத்தையும் ஊதிப் பெருக்குகின்றது. பிரிட்டன் படைகளில்
இருக்கும் இந்தியப்படையினரைச் சரணடையச் செய்து இந்தியத் தேசிய ராணுவத்தில் சேர்வதற்காகப்
பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இந்தியப்படையினரிடம் இருக்கும் பிரிட்டன் படைகள் மீதான
சந்தேகங்களையும் நிறைவின்மையையும் பிரச்சாரத்தின் மூலம் பெருக்குகின்றனர். கடுங்குளிரிலும்
முறையான உணவின்மையாலும் போர்களத்தில் பலியாகிக் கொண்டிருக்கும் இந்தியராணுவத்தினர்
அணிமாறுகின்றனர். பிரிட்டனுக்கு அடிமையானதைப் போல ஜப்பானுக்கும் அடிமையாகிவிடுவோம்
எனச் சிலர் உள்ளூர எண்ணுகின்றனர். எனவே, இந்தியத் தேசிய ராணுவத்திலும் முழுமையான நம்பிக்கையும்
ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றனர். ராணுவத்தில் வந்து சேரும் தொண்டூழியர்களை இளக்காரமாக
எண்ணுகின்றனர். நேதாஜி ஜப்பானியர்களுடன் சேர்ந்து இந்தியாவைக் கைபற்ற முனைகிறார் என்ற
அச்சத்தை வானொலி வாயிலாக இந்திய மக்களுக்கு பிரிட்டன் பரப்புகிறது. ஐ.என்.ஏ படைகளால்
பயிற்றுவிக்கப்பட்டு இந்தியாவுக்குச் செல்கின்ற உளவாளிகள் பிரிட்டனுக்கு ஆதரவானவர்களாக
ஆகின்றனர். இந்தியாவின் எல்லையோர பூர்வக்குடி மக்களும் பிரிட்டனுக்கு ஆதரவாக உளவாளிகளாக
இருக்கின்றனர்.
போர் என்பது
அறுதியாக எந்த அதிகாரம் வலிமையானது என்பதை முடிவுசெய்வதற்கான முயற்சியாகவே இருக்கிறது.
அதன் கருவிகளாக மட்டுமே சித்தாந்தங்கள் தேவைபடுகின்றன. இந்தியாவுக்கான விடுதலைப் போரை
நிகழ்த்தும் ஐ.என்.ஏ வைக் கூட்டு சேர்ப்பதன் மூலம் கிழக்காசியாவைத் தங்கள் குடைக்குக்
கீழ் கொண்டு வரும் கனவை ஜப்பான் கொண்டிருக்கிறது. ஐ.என்.ஏ படைகளுக்குச் செய்யும் போர்தளவாட
உதவிகள், போர்பயிற்சிகளின் பின்னால் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வேட்கையைக் கொண்டிருக்கிறது.
இந்தியச் சுதந்திரச் சங்கத்தின் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் அரிசி மூட்டையில் இருக்கும்
சுதந்திரச் சங்கத்தின் முத்திரையை ஜப்பானிய வீரனொருவன் வெட்டுகிறான், இந்தியத் தேசிய
ராணுவத்தின் அதிகாரிகளை தங்களுக்கு மரியாதை செலுத்த ஜப்பானிய கீழ்நிலைத்தளபதிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
அதைப் போல ஐ.என்.ஏவின் சேர்ந்திருக்கும் தொண்டூழியப்படையினரை மூத்த அதிகாரிகள் தங்களுக்குக்
கீழானவர்களாக நடத்துகின்றனர். விடுதலை என்னும் இலட்சியவாதம் இவர்களனைவரையும் பிணைக்கிறது.
போர்சித்திரங்களைத்
தாண்டி இந்தியாவுக்கு வெளியே நிகழ்ந்திருக்கும் விடுதலைப் போரைப் பற்றிய முழுமையான
சித்திரத்தை இந்நாவல் அளிக்கிறது. இந்தியத் தேசிய ராணுவத்தின் உருவாக்கம், சுபாஸ் சந்திரபோஸின்
பங்களிப்பு ஆகியவற்றை விரிவாக முன்வைக்கிறது. அந்த வரலாற்றை ஆவனப்படுத்தும் தன்மையும்
கூட புனைவாகக் கூடிய சில தருணங்களை இந்நாவல் தவறவிட காரணமாக அமைகிறது. பெருங்காடுகளில்
நிகழும் போரில் காடுகள், வனவிலங்குகள் குறித்த விவரனைகள் மிகக் குறைவாகவே அமைகின்றன.
பிரிட்டனின் தோல்வியால் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாட்டிலிருந்து மலாயாவுக்கு வருகின்ற
படைகள் நிர்க்கதியான சூழலுக்கு ஆளாகின்றனர். ஆஸ்திரேலியா படைத்தளபதி இந்தோனேசியாவுக்குத்
தப்பித்துச் செல்கின்றனர். இவ்வாறாகச் சூழல் நெருக்கடியால் சிக்கிக் கொள்கின்றவர்களைப்
பற்றிய விவரிப்பு தவறவிடப்பட்டிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் முயற்சியால்
சில கதைமாந்தர்களைச் சம்பவங்களைச் சொல்வதற்கான தூதுவர்களாகவே இருக்கின்றனர்.
வெற்றியடைந்தவர்களின்
வாழ்வையும் போராட்டத்தையுமே கவனப்படுத்தும் வரலாற்றுச் சூழலில் தங்கள் நம்பி ஏற்ற இலட்சியவாதம்
ஒன்றுக்காக போரிட்டவர்களையும் அதன் வரலாற்றுச்சுவடுகளையும் புனைவனுபவமாக எழுத்தாளர்
அ.ரெங்கசாமி கடத்தியிருக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக