முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 தண்ணீர் நாவல் வாசிப்பனுபவம்

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தப்போது தண்ணீர் சிக்கலைப் பற்றிய நாவலாகவே எண்ணினேன். பித்தளைத் தவலையொன்றின் அடியில் வண்டலாகப் படிந்திருக்கும் துருவேறிய கலங்கிய நீரை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்கின்ற போது துருவேரிய நீர், கோடைக்காலத்துத் தூறல், பெருமழை, சாக்கடை நீர் எனத் தண்ணீரின் வண்ண மாற்றத்தையும் எல்லாவற்றிலும் தன்னை இருத்திக் கொள்கிற நீரின் தன்மையையும் ஒருங்கே கண்முன்னால் கொண்டு வருகிறது.

சென்னை போன்ற பெருநகரொன்றின் ஒண்டு குடித்தனத்தில் தன் தங்கையுடன் ஜமுனா வாடகைக்கு இருக்கிறாள். சினிமாவில் நடிக்கும் ஆசையினால் பாஸ்கர் ராவ் எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவனிடம் சேர்ந்து தயாரிப்பாளர்களையும் வினியோகஸ்தர்களையும் சந்தித்து வருகிறாள். அவ்வாறான சந்திப்பில், அவர்களை மகிழ்விக்க பாலியல் சார்ந்த கேளிக்கைகளுக்கு இணங்குகிறாள். பாஸ்கர் ராவினால் ஜமுனா ஏமாற்றப்படுவதாகவே சாயா எண்ணுகிறாள். அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறாள். அவளது கணவன் ராணுவத்தில் வேலை செய்கிறான்.  எப்பொழுதும் நீடிக்கும் தண்ணீர் சிக்கலும் அக்காவின் சினிமா ஆசையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அவளது மகன் முரளியை மாமா வீட்டில் வளரச் செய்கிறாள். மனப்பிறழ்வு அடைந்த தாயும், தாய் வழி பாட்டியும் மாமாவும் அவரது குடும்பமும் தனியே இருக்கின்றனர். ஜமுனாவின் குடியிருப்பைச் சுற்றிலும் வாழ்கின்ற மக்கள் தண்ணீருக்காகப் பெரும்பாடு அடைகின்றனர், கோடைக்காலத்தில் கைபம்பை விடாமல் அடித்து வரும் சொற்ப நீருக்காக அல்லாடுகின்றனர். பல மைல் தூரம் நடந்து சென்று பாத்திரங்களிலும், குடங்களிலும் நீரைக் கொண்டு வருகின்றனர். நீரின்மையால் துளையிட்டுத் தண்ணீர் கிணறு தோண்டுகின்றனர். உறை இறக்கிக் கிணறுகளை ஆழப்படுத்துகின்றனர். மழைக் காலத்தில் வீட்டில் கிடக்கும் பாத்திரங்களில் எல்லாம் நீர் சேமிக்கின்றனர். சாலைத் தெருவில் இருக்கும் கேபிள்கள், சாக்கடைகள், நீர்க்குழாய்கள் என ஏதாவதொன்றுக்காகத் தோண்டப்படுகிற பள்ளத்தால் சேறு நிறைந்து கிடக்கிறது. சாக்கடை நீரும் குடி நீரும் கலந்து வருகிறது. இவ்வாறாக நாவல் முழுவதுமே நீர் சிக்கல் விரவிக்கிடக்கிறது.

இந்த நீர் சிக்கல் மிகுதியிலும், மனிதர்கள் தங்களுக்கான வாழ்வைத் தகவமைத்துக் கொள்கின்றனர். இந்த நாவலின் மொத்த பாத்திரங்களையும் வாழ்க்கைக்குள் ஒழுங்கொன்றைக் கட்டமைக்க எண்ணுகிறவர்கள், வாழ்வுக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்வோர் எனப் பிரிக்கலாம். கணவன் மகன் இணைந்து தனியாக வாழ வேண்டும் எனக் கறாரான நடுத்தர வாழ்வொன்றை எண்ணியப்படியே இருக்கிறாள் சாயா. அதற்கு நேர்மாறாக, வயதான நோயாளி கணவன், கரித்துக் கொட்டும் நோயாளி மாமியார், பணிவிடைகள், வேலைகள் என சாயா போன்ற கறாரானவர்களின் பார்வையில் வாழ்வதற்கான சொற்ப நியாயங்களையும் கொள்ளாத திச்சரம்மா போன்றவர்கள் வாழ்க்கைக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர். ஜமுனாவின் உள்ளொடுங்கிய பார்வையை திச்சரம்மா திட்டுகிறாள். பிறர் மீதான கருணையும் மேலான வாழ்வு என்ற எளிய நிறைவும் கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்கிறாள். நெருக்கடிகள் மிகுந்த வாழ்வில் கைகொள்ளும் தப்பித்தல்களாக இருந்தாலும், வாழ்வதற்கான நியாயம் என்பது எல்லாவற்றையும் தாண்டியதாக இருக்கிறது. தன் பிள்ளைகளின் பிரிவும் அவர்களின் போக்கை ஏற்றுக் கொள்ளாமலும் தன் சகோதரனுடனும் தாயுடனும் இணைந்து கொள்கிற ஜமுனாவின் தாய் மனப்பிறழ்வுக்கு ஆளாகிறாள்.  தன் திருமண வாழ்வின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட பயறு அரைக்கும் வேலையை இயந்திரம் போலத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள். திருமணம், குடும்பம் என நேர்த்தியான வாழ்வொன்றை ஜமுனாவும் சாயாவும் அமைத்துக் கொள்ளவில்லை என்பதே அவளை மகள்களுக்கு எதிரானவளாக ஆக்கியிருக்கிறது, நோய்மையும் மகள்களின் பிரிவும் சேர்ந்து மனப்பிறழ்வடைந்தளாக்குகிறது. இந்த இரு வேறு மனநிலைகளின் ஊசலாட்டமே ஜமுனாவிடம் காண முடிகிறது. மெல்ல தான் வாழ்வதற்கான நியாயங்களை உருவாக்கியப்படி நகர்ந்து செல்கிறாள்.

ஜமுனாவின் தாயைப் போல ஆசாரம், ஒழுங்கு என உள்ளொடுங்கி போயிருக்கும் மனிதர்களையும் நிறைய இடங்களில் அடையாளம் காட்டுகிறார். வெகு தொலைவிலிருந்து நீரைப் பித்தளைக் குடத்தில் கொண்டு வருகிறாள் தெலுங்கு பிராமண விதவை கிழவி. அந்தத் தவலையைக் காலில் போட்டு மயங்கி விழுந்து விடுகிறாள். ஜமுனா அவளைப் பிடித்து ஆசுவாசப்படுத்துகிறாள். கீழே விழுந்த தவலையை யாரோ ஒருவர் எடுத்து வந்து தருகின்றனர். மற்றவர்களின் பிடியிலிருந்து தன்னை விலக்கித் தவலையிலிருந்த சொற்ப நீரையும் ஊற்றிவிட்டுச் செல்கிறாள். நோய்மையால் முடங்கி கிடக்கும் திச்சரம்மாவின் மாமியார் ஜமுனாவைக் கண்டு இரைகிறாள். படவாய்ப்பு வாங்கிதருவதாக ஜமுனாவை அழைத்துச் சென்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் பாஸ்கர் ராவே, உட்காரும் நாற்காலி மேல் கைகுட்டை ஒன்றை விரித்திருக்கிறான். இவ்வாறாகச் சமூகத்தில் தங்களுக்கான இடமென்று ஒன்றை உருவகித்துக் கொண்டு விடாப்பிடியாக நிற்கும் போலிப்பாவனைகளைச் சுட்டுகிறார்.

இந்த நாவலில் கதைமாந்தர்களின் தன்மைகளை மிக அசாதராணமாகப் பல இடங்கிளில் ஒரிரு சொற்களில் சொல்லிவிட்டுச் செல்கிறார். அந்த ஒவ்வொரு வரிகளுக்குப் பின்னால் மிகப்பெரும் சொற்களை இட்டு நிரப்பும் இடைவெளிகள் இருக்கின்றன. சாலை தெருவில் பள்ளம் தோண்டுபவர்களின் தினக்கூலியைக் கேட்டு ஏனென பரிதாபத்தோடு கேட்கும் போது ‘நாங்களெல்லாம் டெம்பவரரிதானே’ என்கிறார்கள். அதற்கு முன்பதாகத்தான், டெம்பவரரி ஆட்கள் முன்யோசனை இல்லாமல் பள்ளம் தோண்டுகின்றனர் என்ற வரி வருகிறது.  இன்னொருவரிடம் சம்பளம் வாங்கும் அனைவருமே எதோ ஒரு வகையில் வாழ்வுக்குள் சமரசம் செய்து கொள்பவர்களாகவே இருக்கின்றனர் என திச்ச்சரம்மா ஜமுனாவிடம் சொல்கிறாள். வாழ்வுக்குள் ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் சாயாவின் நடையைப் பார்த்து ‘ செருப்பின் குதிகால் உயரம் குறைவாக இருந்தால் இவ்வளவு நெளிவு இருக்காது’ என ஜமுனா எண்ணிக்கொள்கிறாள். கீழ் நடுத்தரவர்க்கது மக்களின் வாழ்வின் இக்கட்டுகள் நாவல் முழுதும் இழையோடுகிறது. மழை பெய்யும் இரவில் பாத்திரங்களில் நீர் சேமிக்க சென்று முற்றிலும் நனைந்து விடுகிற மனைவி, ஒன்று போலவே இருக்கும் தெருக்களின் வேறுபாட்டை உணர்கிற குழந்தைகள் என 1970களில் இருந்த சென்னை நகரின் குறுகலான தெருவொன்றுக்குள் நுழைந்த அனுபவத்தை இந்நாவல் தருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...