முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள்

 போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள்

பழங்குடிச் சமூகத்தின் ஒழுங்குகளைப் பேணும் ஈபான் சமூகத்தில் நாகரீக அடையாளத்துடன் வரும் ஆசிரியரின் பாலியல் தடுமாற்றத்தையும் பழங்குடி அறத்தையுமே போயாக் சிறுகதையில் காண முடிகிறது. விநோதமான மாந்தீரிகச் சடங்குகள், தாய்வழிச் சமூகம் என்பதால் பெண்களைப் பிற இனத்தவர்களுக்குத் திருமணம் புரிந்து வைப்பதைத் தடுக்கின்றனர். இதைப் போன்ற தகவல்களைத் தாண்டி சிறுகதையில் மிகவும் கவர்ந்தவை முதலைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒப்பந்தம். ஒருவகையில் மனிதன் முதலையைத் தின்றும் மீண்டும் முதலை மனிதனையும் தின்றும் இயற்கையான அறமொன்றை நிலைநாட்டிக் கொள்கின்றனர். ஒருவேளை இவற்றை மதம் தீண்டுகிற போது அவை சடங்குகளாக, புனிதமாகக் கட்டமைக்கப்படும். புனிதமாகக் கட்டமைக்கப்படுபவற்றை மீறும் சுதந்திரத்தைக் குற்றவுணர்ச்சி மூலம் மனிதன் பெற்றுக் கொள்ளலாம். கதைசொல்லியும் பாலியல் மீறல் செய்து வெளியேற பார்க்கிறான். அவனே முதலையாக மாறி ஒப்பந்தத்தை மீறுகிறான். படகில் செல்லும் போது பிரதி மாற்றம் செய்யப்பட்டவனாய், அறமொன்றின் முன்னாலான தவிப்புடன் நிற்கிறான்.




மூன்று தலைமுறை ஆண்களின் மனத்தில் பலநிலைகளில் வளர்கிற பெண்ணின் ஆற்றல் பேச்சி சிறுகதையில் காண முடிகிறது. மகனின் பார்வையில் அப்பா எதிர்நிலையிலும் தாய் தெய்வத்தன்மை பொருந்தியவளாக இருக்கிறாள். அதைத்தான் அவனது மனம் உண்மை என ஏற்றுக்கொள்ளத் தயாராகிறது. தருக்கத்துடன் அணுகினாலும் தந்தையை எதிர்நிலையில் வைத்துத் தாய்மையைத் தருக்கத்தை மிஞ்சிய ஆற்றலாகவே மனம் உருவகிக்கிறது. கணவனின் பார்வையில், மூர்க்கமும் வெறியும் அடக்கும் காதல் பொருந்தியத் தெய்வமொன்று பொன்னியில் இருந்தது. அது தாய்மையுடன் அள்ளி அணைக்கவும் செய்கிறது. அந்தத் தாயை மறந்த சிறுவனாகவே கதைசொல்லியின் தாத்தா இருக்கிறார். இந்த மூவரிலும் இருக்கும் குழந்தைமையைத் தொட்டெடுத்து அணைத்துக்கொள்பவளாக அன்னை மாறுகிறாள்.

யாக்கை கதையில் மனத்தில் தோன்றுகின்ற பொருந்தாக் காமத்துக்காகக் கடலில் குதித்து உடலை மீன்களுக்கு உணவாக்கிக் கொள்ளும் தந்தையும் வாழ்வுக்காக உடலின் வாயிலாகக் காமத்தை கொஞ்சகொஞ்சமாக உணவாக்கிக் கொண்டிருக்கும் மகளும் வருகின்றனர். விடுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளியின் கதைகளின் வாயிலாகக் கதை நகர்கிறது. தான் உடலைப் பிறருக்கு அனுபவிக்கக் கொடுக்கும் விடுதியறையிலிருந்து அப்பா குதித்து இறந்த கடற்பகுதியும், படகையும் மகள் பார்ப்பது அற்புதமான குறியீடாக விரிகிறது. இருவரும் காமத்தின் வெவ்வேறு முனைகளின் தங்களை இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவளின் உடலைக் கொஞ்ச கொஞ்சமாகத் தின்னும் பல நூறு மீன்களில் தானும் ஒருவன் எனும் குற்றவுணர்வைக் கதைசொல்லி அடைகிறான்.

வெள்ளைப் பாப்பாத்தி கதை குழந்தைக் கனவுகளின் வழியே விடுதலையைப் பேசும் கதை. கணவன் இறந்தபின் வறுமையில் ருக்கு தன் மகள் கொடிமலரை வளர்க்கிறாள். மர ஆலையில் நிகழும் பாலியல் மீறலைச் சகிப்பதும் ( எதை மீறல் என எடுத்துக்கொள்வது எனக் குழப்பம்) மற்றவர்களின் உதவிகளின் மூலமும் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். கொடிமலருக்கு மனமெல்லாம் வெண்ணிறப் பாப்பாத்தியாகப் பறந்தலையும் விடுதலையுணர்வு மேலோங்கி நிற்கிறது. அந்த வெண்ணிறப்பாப்பாத்தியில் வண்ணங்களைத் தடவச் சமூகம் முயல்கிறது. வறுமையைக் காரணம் காட்டி இலவச உணவுக்காக தாவோயிச வகுப்புகளுக்குச் செல்ல வைப்பதும், வறுமை கோலத்தைக் கிண்டலடிக்கிறது. வெண்ணிற பாப்பாத்தியின் வண்ணம் தீட்டப்படாத சிறகுகளைக் கண்டுகொள்ள மறுக்கிறது.

தன்னைத் தானே அஞ்சும் காமத்தின் கதை நாகம். தெய்வத்தன்மையுடன் இருக்கும் முத்தம்மாவின் காமமே நாகமாக மாறுகிறது. அந்த நாகம் தன் முன்னால் பணிந்திருக்கும் காசியை அணைத்துக் கொள்கிறது. காசியின் அச்சமடங்கிய உடலில் நாகம் வளரத்தொடங்குகிறது. கண்களில் அச்சம் தெரியத் தொடங்கும் போது இன்னொரு உடலில் பாய்கிறது. அதன் நீட்சியாகவே பக்கிரியின் உடலிலும் தாவுவதற்குத் தயாராய் இருக்கிறது. தன்னை அஞ்சாத மனிதனின் உடலில் நாகம் குடியேறுகிறது. நாகத்தைக் கொல்லத் துணியும் காசி, கொன்றுவிடும் பக்கிரி என ஒவ்வொருவரையாகத் தன் இரையாக்கி வாசம் செய்கிறது.

தீண்டாமையால் தன் அடையாளங்களையும் நினைவுகளையும் புறக்கணிக்க துணிபவனின் பிரக்ஞையை மீறி எழும் உணர்வெழுச்சியை வண்டி சிறுகதை வெளிப்படுத்துகிறது. குழந்தைமையின் இயல்பான மகிழ்ச்சியையும் பரவசத்தையும் தீண்டாமைக்குப் பலிகொடுப்பதால், மரியதாஸ் தன் அடையாளங்கள் அனைத்தையும் ஒழிகிறான். ராமச்சந்திரன் எனும் பெயர் மரியதாஸாகிறது. தாய்தந்தையரையும் குடும்பத்தையும் இடமிருந்து மனவிலக்கம் ஏற்படுகிறது.  ஆனால், எம்.ஜி.ஆரின் மீதான அப்பாவின் பற்றும் குழந்தைமையின் நினைவுகளாக இருக்கும் வண்ணக்காகிதத்தால் மடித்துத்தரப்பட்ட   அப்பாவின் பரிசுகளும் மனத்தில் நிலையாக நிற்கின்றன. எம்.ஜி.ஆர் என்பது நாயகச்சித்திரம் என்பதைத்தாண்டி, ஒடுக்குமுறைச் சமூகச் சூழலைத் தாண்ட எண்ணும் விடுதலையின் குறியீடாகவே காண முடிகிறது. இன்னொரு நிலையில் புறக்கணிப்புச் சூழலைத் தாண்டி குழந்தைமையைக் கடத்தச் செய்த அப்பாவின் சித்திரமுமாகவும் இருக்கிறது. அவ்விடமே அப்பாவும் எம்.ஜி.ஆரும் ஒன்றேயாகும் இடமாகிறது. அப்பாவின் எம்.ஜி.ஆர் எனும் சித்திரம் மரியதாஸிடம் வளர்கிறது. எம்.ஜி.ஆரின் இறப்பே அப்பாவின் இறப்பாக மரியதாஸுக்குத் தோன்றுகிறது. தோமஸ் உற்சாகத்துடன் மாட்டு வண்டியின் நுகத்தடியை இழுப்பதில் எம்.ஜி.ஆர் உயிர்தெழுகிறார்.  குப்பை அள்ளும் வண்டி, அப்பாவின் நகரச்சுத்தி வேலை, அம்மாவின் மலவாளி தூக்கும் வேலை, சமூகப்புறக்கணிப்புகள் ஆகிய அடையாளங்களை தாண்டிய குழந்தைமையின் பரவசத்தில் அப்பாவை மரியதாஸ் அடையாளம் கண்டு கொள்கிறான்.

ஜமால் சிறுகதையில் தொழிற்சாலையில் ஜமால் என்னும் வங்காளதேச இளைஞனுடன் இணைந்து கதைசொல்லி வேலை செய்கிறான். அம்மா இறந்தப்பின் சித்தியுடன் திருமணம் செய்துகொள்கிற அப்பாவின் மேல் வெறுப்புணர்வு கொள்கிறான். தொழிற்சாலையில் வேலை செய்யும் மஸ்துராவும் ஜமாலும் உறவு கொண்டதை மேலாளரிடம் சொன்னதால் ஜமாலின் வெறுப்பைப் பெற்றுக் கொள்கிறான். அந்த வெறுப்பை ஒரு வகை இனிய ஆடலாக் இருவரும் நிகழ்த்திப் பார்த்துக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் நோக்கிச் செய்கின்ற செயல்களை உள்ளூர விரும்புகின்றனர். அம்மாவின் இழப்பால் உணரும் தனிமையுணர்வையும் அப்பாவின் மீதான வெறுப்புணர்வையும் ஜமாலின் மீது வெறுப்பாகச் செலுத்தி நிகர் செய்து கொள்கிறான். சுற்றிலும் இருப்பவர்களை இறுக்கத்துடனும் வெறுப்புடனும் அணுகுகிற ஜமாலும் கதைசொல்லியுடனான வெறுப்பை விளையாட்டாக மாற்றிக் கொள்கிறான். சொல்லப்படாத எல்லையொன்றில் ஒருவரையொருவர் சீண்டி இன்புறும் ஆடலாக அதைக் கண்டுகொள்கின்றனர். கதைசொல்லியின் கைகள் இயந்திரத்தில் சிக்கிக் காயமுறும் போது ஜமாலின் கண்கள் அம்மாவுடையதாய்க் கனிவு கொள்கின்றன. ஒருவரையொருவர் சீண்டும் வெறுப்பின் ஆடல் விபத்தாக மாறும் போது அன்பு பிறக்கும் தருணமது. அந்த அன்பு இருவருக்குமிடையில் இருந்த ஆடல் முடிந்துவிடுமோ என்பதன் துயரில் பிறந்ததாகக் கூட இருக்கலாம். அந்த வெறுப்பின் ஆடலில் தனது பிரதியாகவே கதைசொல்லி மாறியிருப்பதையே ஜமால் உணர்கிறான். அன்பின் மொழிகளில் வெறுப்பின் ஆடலும் ஒன்றாக மாறும் அழகிய தருணமது.

மசாஜ் சிறுகதையில் கதைசொல்லியின் தந்தை கூத்தில் ரதியாக வேடம் கட்டி ஆடுகிறார். வயதின் காரணமாக ரதி வேடம் மறுக்கப்படுகிறது. அதில் பெரிதும் வருத்தமடைகிறார். சாகும் நாளுக்கு முன்வரையில் மனத்தை வருத்துகிறது. கதைசொல்லி கோலாலம்பூருக்குச் சென்று நகரின் நுட்பங்களை……….கற்றுக்கொள்கிறான். புதிய சூழலில் அனைவரும் உணரும் பாதுகாப்பின்மையை உணர்கிறான். சூழ இருப்பவர்களின் தந்திரங்களை விழிப்பாகக் கவனிக்கிறான். மசாஜ் மையத்தில் சந்திக்கும் ஷாஷாவின் வேடத்தைக் களைகிறான். வேறொரு அடையாளத்தைத் தாங்கியிருப்பவளின் நாடு, குடும்பம் என ஒவ்வொன்றையும் வெளிக்கொணர்ந்து தன் விழிப்புணர்வை நிலைநாட்டுகிறான். பால் சுரந்து பெருத்திருக்கும் மார்புடன் உடலோடு உடல் ஒட்டி மசாஜ் செய்யும் போது சிந்துகின்ற கண்ணீரில் தந்தையின் கண்ணீரை நினைத்துக் கொள்கிறான். கூத்தில் காமனை இழக்கப்போகும் ரதியாகவே மாறி கதைசொல்லியின் தந்தை நடிக்கிறார். வேடம் மறுக்கப்பட்டப்பின் எஞ்சிய வாழ்நாளெல்லாம் பாடும் கதைசொல்லியின் தந்தை தன்னைத்தான் இழந்ததாய் உண்ர்கிறான்.

போரில் குடும்பத்தை இழந்த ஷாஷா, பால் வற்றிய மார்புடன் குழந்தைக்குப் பாலூட்ட முடியாதவளாகிறாள். அந்நிய நாட்டில் வேறொரு அடையாளத்துடன் பால் கனக்கும் மார்பை முதுகுடன் அணைத்து மசாஜ் செய்கிறாள். தாய்மையின் வெற்றடையாளமாக மாறிப்போயிருக்கும் மார்பும் திரிந்த தன்னடையாளமும் சேர்ந்து ஷாஷாவும் தன்னைத்தான் இழந்திருக்கிறாள். அந்த இழத்தலின் துயரையே கதைசொல்லி உணர்கிறான். சுற்றியிருப்பவர்களின் தந்திரம் கூடிய நடிப்பை விழிப்புடன் கவனித்துவருபவன், மெய்யான துயரொன்றைப் புரிந்து கொள்ளும் தருணத்தைச் சிறுகதை வெளிப்படுத்துகிறது. நினைவில் பதிந்திருக்கும் தந்தையின் கண்ணீரும் தாயொருத்தியின் ஏக்கக் கண்ணீரையும் இணைத்துப் பார்த்துப் பொருள் கொள்கிறான். முதுகின் மேல் படியும் மார்பின் அணைப்பில் நடிப்புகளுக்குப் பின்னான மெய்துயரை அடையாளம் காண்கிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற