முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்

 சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்

 

எழுத்தாளர் சை.பீர் முகம்மதுவின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். 2008 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 20 சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.



சை.பீர் முகம்மதுவின் கதைகளில் கதைசொல்லியின் குரல் உரத்து ஒலிக்கிறது. கதைக்குள் இந்த உரத்தக் குரல் சில இடங்களில் சமூகத்தின் பொது மனநிலையை விமர்சனம் செய்வதாகவும் அதையே நகல் செய்து இறுதியில் அதிலிருந்து நழுவி உணர்வெழுச்சித் தருணங்களைக் கண்டடைவதாகவும் அமைந்திருக்கிறது. சை.பீர்.முகம்மதுவின் கதைகளின் பொதுத்தன்மையாக கதையின் இறுதியில் நிகழ்ந்துவிடும் உணர்வெழுச்சித்தருணங்களையே குறிப்பிடலாம்.

தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் கதையில் தமிழ்நாட்டிலிருந்து தோட்டங்கள்தோறும் மேடை நாடகம் அரங்கேற்ற மலேசியாவுக்கு வரும் குழுவிலிருக்கும் மாரி என்பவன் உள்ளூர் பெண்ணைக் காதலித்து மலேசியாவிலே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறான். தமிழ்நாட்டில் கற்றுக் கொண்ட பயாஸ்கோப் காட்டும் தொழிலைக் கொண்டு தோட்டங்கள்தோறும் திருவிழாக்களில் பயாஸ்கோப் படம் காட்டிச் செல்கிறான். எவ்விடத்திலும் நிரந்தரமாகத் தங்காமல் மிகவும் மகிழ்ச்சியாகப் பாகவதர் பாடலைப் பாடிச் செல்லும் கணவன் மனைவி இருவர் மூலம் ஒரு வாழ்க்கைக்கோணத்தை ஆசிரியர் முன்வைக்கிறார். அவனுக்கு முரணாக, குத்தகைத் தொழிலில் ஈடுபட்டுப் பெரும்பணம் ஈட்டும் ஆசை கொண்ட கோபால் அவ்வாறே செல்வந்தனாக மாறி பின்னால் கடன் கட்ட முடியாதச் சூழலில் சொத்துகள் கையை விட்டுச் செல்ல இருக்கிறான். இந்தச் சூழலில் மாரி, தான் இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு கோபாலின் கடனைக் கட்டி முடித்து மீண்டும் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே செல்வதாகக் கதை முடிகிறது. மகிழ்ச்சிக்கான மனநிலையை விளக்கும் இருவேறுபட்ட மனநிலைகளின் முரண்பாட்டை ஒரு தருணத்தின் வாயிலாகக் கதை அணுக முயல்கிறது. ஆனால், கதையின் தொடக்கம் முதலே ஆசிரியரின் குரலில் வாழ்க்கைப்பார்வையாகவே முன்வைக்கப்பட்டுவரும் எதிலும் ஒட்டாமல் ஒரிடம் நில்லாமல் சென்று கொண்டே இருக்கும் மாரியின் மனநிலையின் மேன்மையை நிறுவுகின்ற இடமாகவே கதை அமைந்துவிடுகிறது.

இதைப்போல கதையின் இறுதி திருப்பங்கள் அமைந்துவிடுகின்ற இன்னும் சில கதைகளும் இத்தொகுப்பில் அமைந்திருக்கின்றன. வெடித்த துப்பாக்கிகள் கதையில் கம்யூனிசப் போராளிகளின் ஆயுதத்தாக்குதலை முறியடிக்க காட்டுக்கு நான்கு வீரர்கள் கொண்ட சிறிய படையொன்று அனுப்பப்படுகிறது. அப்படைக்குத் தளபதியாக இருக்கும் யாக்கோப் என்பவரின் மீது மற்ற மூவருக்கும் உள்ளூர பகையொன்று இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கொல்லத் திட்டமிடும் போது எதிர்பாராவிதமாக அவர் எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகி மற்ற மூவரையும் காப்பாற்றுவதாகக் கதை முடிகிறது. உக்கிரப்பாம்பு கதையிலும் தோட்டப்புறத்தில் பணிபுரியும் தங்கம்மாவுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் பணிபுரியும் தனலெட்சுமியின் வேலை நேர்த்தி, விரைவு ஆகியவற்றின் மீது ஏற்படும் காழ்ப்பைக் கதை சொல்கிறது. அவளைப் பழிவாங்கிட அவள் சேகரித்து வைத்திருக்கும் ரப்பர் பாலைத் தட்டிவிட்டு மலைப்பாம்பின் மீது பழிபோட்டு தப்புகிறாள் தங்கம்மா. அந்த மதியமே, தன் கணவர் வாங்கியிருக்கும் புதிய டேக்சியில் படம் பார்க்க தனலெட்சுமி தங்கம்மாவை அழைத்துச் சென்று திரும்பும் போது அவளது மனவிகாரத்தைக் குறியீடாக்கிப் பாம்புகள் மறைந்தன எனக் கதை முடிகிறது. இவ்வாறாக உணர்வெழுச்சித் தருணங்களால் மனம் மாற்றம் அடையக்கூடும். அந்த மாற்றத்தைச் சென்றடைய மனம் அடையும் சஞ்சலங்கள், கொந்தளிப்பு என்பதைச் சொல்லாமல் ஒரு தருணத்தில் மாற்றமடையும் போது கதை இலக்கு தவறிவிடுகிறது.

இவ்வாறாக திடிர் இறுதித் திருப்பங்கள் கொண்ட கதை வரிசையில் ஆண்டவனுக்கு ஆண்டவன் கதை சிறப்பாக இருந்தது. ஜப்பானியர் காலக்கட்டத்தில் சயாம் மரண ரயில்வே நிர்மாணிப்பில் தப்பிப் போக முயன்று ஜப்பானிய ராணுவத்திடம் சந்தானம் எனும் தொழிலாளி சிக்கிக் கொள்கிறான். ராணுவப்பிரிவில் மிகவும் கடுமையானவன் எனப் பெயரெடுத்த இம்மாசாகி எனும் அதிகாரி சந்தானத்தை விசாரணை செய்து காரணங்களைக் கேட்கிறான். குடும்பத்தைப் பார்க்கத்தான் தப்பினேன் எனச் சொல்லும் சந்தானத்தின் காரணம் இம்மாசாகியைத் தணியச் செய்திருக்க வேண்டும். கதையின் இறுதியில் இம்மாசாகியே சந்தானம் தப்பிச் செல்ல உதவுதாகக் கதை முடிகிறது. ஆனால், இந்தக் கதையிலும் இம்மாசாகியின் உள்ளத்தை நெருங்குவதற்கான எந்தப் பாதையும் கதையில் விடப்படவில்லை.

இந்தத் தொகுப்பில் விளிம்பு நிலை மனிதர்கள் அல்லது சமூகத்தில் அவ்வளவாகக் கவனிக்கப்படாத தரப்பினரின் கதைகளையும் சை.பீர் எழுதியிருக்கிறார். பிச்சைக்காரர்களைப் பற்றி உண்டியல். சிவப்பு விளக்கு, நெஞ்சின் நிறம் ஆகிய கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் வெளிப்படும் பிச்சைக்காரர்களைச் சித்திரிக்கும் போது அழுக்கு உடை, துர்நாற்றம் இவ்வாறாகப் பொதுப்பார்வையில் அவர்களைக் காட்டுவதாக முன்வைக்கப்படும் சித்திரம் உண்மையில் கதைக்கு எந்தளவு உதவுகிறது என்பது அவசியமாகிறது. இவ்வாறான தோற்றம் கொண்டவர்கள் இறுதியில் ஏதேனும் நெகிழ்ச்சியான செயலை நிகழ்த்துவதால் அவர்கள் மேன்மைப்படுத்த முயல்வது பொருத்தமற்றதாகவே இருக்கிறது. சிவப்பு விளக்கு எனும் கதையில் எவ்வித லட்சியமும் இல்லாத தமிழ்ப்பிச்சைக்காரர் ஒருவர் கள் குடித்து அன்றன்றைக்கான வாழ்க்கை வாழ்ந்து இறந்து போகிறார். அவருக்கு முரணாகச் சீனப் பிச்சைக்காரர் உழைத்து முன்னேறிப் பணக்காரராகி இறக்கின்றார். இவர்கள் இருவரின் இறப்பும் கதையின் இறுதியில் வருகிறது. சமூகம் குடும்ப அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்டு அல்லது அதிலிருந்து வெளியேறி வாழும் பிச்சைக்காரர்களின் மன அமைப்பு உழைத்து முன்னேறி பணம் ஈட்டும் பொது மனநிலையிலிருந்து விலகியதாகவே இருக்கக்கூடும். அவ்வாறிருக்க அவர்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அலட்சியம் செய்வதாகக் கதை எழுதுவது பொருத்தமாக இல்லை.

அதைப் போல பிச்சைக்காரர் நூலகம் அமைக்க உண்டியல் பணம் தருவது, பேருந்து கட்டணம் கட்ட இயலாத சிறுவனுக்குப் பணம் செலுத்துவது என பிச்சைக்காரர்களை மேன்மைப்படுத்தும் திருப்பங்கள் அவர்களைப் பற்றிய மேலதிகப் புரிதலுடன் நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்னும் வலுவானதாக அமைந்திருக்கும். ஆண்மை எனும் சிறுகதையில் பெண் தன்மையுள்ள அப்துல் ரஹிம் பாத்திரத்தை வீட்டில் செயற்படாமல் போன கடிகாரத்துடன் ஒப்பீடுவதும் கூட உள்ளூர இத்தகைய மனிதர்களின் மீதான ஆசிரியரின் புரிதலின்மையே வெளிப்படுத்துகிறது.

 இந்த வரிசைக் கதையில் அந்த மரங்களும் பூப்பதுண்டு என்ற கதை சிறப்பானதாக இருந்தது. பதினைந்து வயதாகியும் பூப்பெயதாமல் இருக்கும் பாக்கியமும வயிறு உப்பிப் போய் இருக்கும் ராமசாமி எனும் சிறுவனுக்கும் இடையிலான நட்பைப் பேசுகிறது. மற்றவர்களின் பார்வைக்குக் கேலிக்கு ஆளாகும் பாக்கியத்தை ராமசாமி ஆதரிப்பதும் ராமசாமியின் துணையாகப் பாக்கியம் மாறுவதும் என உடற்குறையுடைய இருவர் தங்களுக்குள் உணரும் துணையைக் கதை வெளிப்படுத்துகிறது. ராமசாமி இறந்ததும் பாக்கியம் அடையும் துயரும் அதன் பின்னால் அவளுக்குள் உண்டாகும் மாற்றமென்பதும் முக்கியமானது.

சை.பீரின் கதைகளில் சமூகத்தின் மீதான விமர்சனம் மிக உரத்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. இந்த உரத்த குரல் கலையாகாமல் பதிவுகளாக மாறும் அபாயம் கதையில் அமைந்திருக்கிறது. பினாங்கு மாநிலத்தில் 1970 களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்சாதியினர் இடுகாட்டில் புதைக்கப்போய் நீதிமன்றம் வரைக்கும் வழக்கு தொடுத்து இறுதியில் புதைக்கப்பட்ட இடத்திலே உடலைப் புதைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தக் கதையைப் புதைக்கப்பட்ட நபரே ஆவியாகச் சொல்வதாக அமைந்த எலும்புகூடு எனும் கதை முழுக்க முழுக்க அவர் அடைந்த துயரைச் சொல்லும் நேரடிப்பதிவாகவும் அரசியல், சமூக விமர்சனக் கருத்துகளால் ஆனதாக அமைகின்றது. ஆவியே தன் கதையைக் கூறும் உத்தி மலேசியச் சிறுகதை உலகில் யாரும் கையாளாதது. சிறுகதைகளில் எழுத்தாளனின் குரல் என்பது நிச்சயமாக எல்லாவிதமான கலையமைதி கோட்பாடுகளைத் தாண்டியும் மெல்லிய குரலில் ஒலிக்கக்கூடியதுதான். ஆனால், புனைவின் அடிப்படைக் கோட்பாடான மொழிக்குள் இயங்கும் இன்னொரு மொழியின் வாயிலாக ஒன்றை உணர்த்தும் தன்மையை உரத்த குரல் கலைக்கிறது. வெளிப்படையான கூற்றுகளைச் சொல்கின்ற போது கதைகள் புனைவுத்தன்மையை இழந்து கட்டுரை வடிவை அடைகின்றன. இக்கதை கலையாகாமல் குறுக்கிவிடும் நேரடியான கூற்றுகள் தாண்டி  சமூக அவலத்தைக் கதையாக்க எண்ணும் எழுத்தாளனின் எண்ணம் முக்கியமானதே.

இதைப் போல திரைப்படக் காட்சி மொழியைப் போல காமிரா கோணங்கள் வாயிலாக கணவன் விட்டுச் சென்ற பெண் மலிவு விலை வீட்டுக்காக அலைவதையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் மிக நுட்பமாகக் காட்டும் குருதி கசியும் கேமிரா கதையும் சிறப்பானதாக இருந்தது.

வயதானவர்களின் புலம்பலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் அக்கினி ஸ்தம்பனம் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்துக்குப் புதிதாக வந்திருக்கும் முதியவருக்கு இன்னொரு முதியவர் சொல்லும் புலம்பல் கதை. தங்களைப் புறக்கணித்த பிள்ளைகளைக் கொள்ளி வைக்கக் கூட அனுமதிக்கக் கூடாது எனச் சொல்லும் கதைசொல்லி முதியவரின் மனநிலை புதிதாக வந்தவருக்கும் தொற்றிக் கொள்ளும் புலம்பலாகக் கதை அமைகிறது. வெண்மணல் எனும் கதையில் வெள்ளைக்காரர்கள் காலத்தில் பெரும் பணக்காரரான இரட்டைக்குதிரை பூட்டிய வண்டியில் கம்பீரமாக வரும் தன் அப்பாவின் கதையை நாள்தோறும் பெருமாள் கிழவன் சொல்கிறார். இப்பொழுது தனியனாய் வாழ்பவனுக்குத் தந்தையின் கதைகள் ஒருவகையில் வாழ்வைக் கடப்பதற்கு உதவுகின்றன.  ஈயம் உறிஞ்சப்பட்ட வெண்மணலாக அவன் வாழ்க்கை அமைவதாகச் சொல்லப்படும் படிமம் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது.

காலங்காலமாக இருந்துவரும் நீதிக்கதைகள், இதிகாசங்கள் ஆகியவற்றை மீளாக்கம் செய்யும் போது அதன் நுட்பமான இடைவெளிகளை நிரப்பும் புதிய கோணம் ஒன்றைக் கதை கண்டடைய வேண்டியிருக்கிறது. கதையைத் தன்மொழியில் எழுதிப்பார்த்த முயற்சியாகவே தேவத்தேர் என்ற மகாபாரதக் கதையையும் பொற்காசுகள் என்ற நீதிக்கதையையும் கருத வேண்டியிருக்கிறது.  

சை.பீர் முகம்மதுவின் கதைகளின் ஆகப்பெரும் பலமாக அவரின் கதைக்கூறல் தன்மையும் மொழியையும் குறிப்பிடலாம். அவரின் கதைகளில் தெளிவான மொழியில் அனைத்தையும் சீராகச் சொல்லிச் செல்லும் போக்கையே காணமுடிகிறது. பாதுகை சிறுகதையில் தோட்டத்தில் வசிக்கும் ஏழ்மை மிகுந்த குடும்பப்பின்னணியிலிருக்கும் சிறுமிக்குப் புதிதாக அணியும் பள்ளிக் காலணி வெள்ளை முயல்களாக மாறி ‘ பள்ளிக்குத் தாவித் தாவி நடந்தாள்’ எனக் கவித்துவத்துடன் எழுதுகிறார். அசுணப்பறவை சிறுகதையில் தன் நாதசுவரக் கலையை இறைவன் முன் மட்டுமே ஒலிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருக்கும் கலைஞனின் திறனைக் காட்டும் இடங்களும் கவித்துவ உச்சத்துடன் அமைந்திருக்கின்றன. அதைப் போல மிக இயல்பான வசனங்களையும் குறிப்பிடலாம். வசனங்களின் மூலமாகவே நகரும் வெண்மணல், அக்கினி ஸ்தம்பனம் போன்ற கதைகளில் கதைமாந்தர்களின் உணர்வை நன்கு வெளிப்படுத்திக் கதையையும் நகர்த்திச் செல்லும் வசனங்கள் அமைந்திருக்கின்றன. அத்துடன், அவரின் கதைகளில் வெளிப்படும் தகவல்களைக் குறிப்பிடலாம். சிறுகதைகள் நிகழும் களத்தை இன்னும் நம்பகமானதாக தகவல்களும் நுண்விவரணைகளும் ஆக்குகின்றன. கம்யூனிசக் கால ராணுவத்தாக்குதலை நம்பகமான முறையில் குறிப்பிடும் வெடித்தத் துப்பாக்கிகள், கலைஞர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் அசுணப்பறவை ஆகிய கதைகள் அவரின் நேரடி அனுபவத்தையும் தாண்டி கலைஞர்களுக்கே உரிய நுண்ணுணர்வுகள் வெளிப்படும் இடங்களாக அடையாளப்படுத்த வேண்டியவை.

சை.பீர் முகம்மது வெவ்வேறு உத்திகளின் வாயிலாகக் கதையைக் கூறும் தன்மைக்ககாவும் சமூக விமர்சனத்தைக் கலைத்தன்மையுடன் முன்வைக்கும் கதைகளுக்காகவும் நிச்சயமாக மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற