முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதுகள் நாவல் வாசிப்பனுபவம்

 

தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் இளவயதில் பள்ளி முடிந்து தனித்திருக்கும் மாலைப் பொழுதுகளில் உருவானது என எண்ணுகிறேன். காண்கின்ற படம், நாள்தோறும் வாசிக்கின்ற நாளிதழ் செய்திகள், பள்ளியில் நடந்த சம்பவங்கள் இப்படியாகப் பலராகவும் உருமாறிப் பேசி, வாதிட்டுக் கொள்வேன். இதைத் தவிர, எதைச் செய்தாலும் உள்ளிருந்து உற்றுநோக்கிக் குரல் எழுப்பும் உள்ளுணர்வின் குரலும் அங்கிருந்தே உருவானது. பொதுவாகவே, மற்றவர்களிடம் அதிகமும் பேசாத இயல்பினாலும் வெளியுலக வாசம் குறைவாக இருந்ததாலும் இவை உருவாகியிருந்தது. சமயங்களில் பேச வேண்டிய அல்லது எதிர்வினையாற்ற தவறுகின்ற பொழுதுகளில் நேரும் குற்றவுணர்ச்சியை நேர் செய்யும் தப்பித்தல் வழிமுறையாகவும் இதை உணர்ந்து குறுகிப் போயிருக்கிறேன். ஆனால், எதோ ஒரு பொழுதில் உள்ளிருந்து ஒலிக்கும் குரலை இயல்பானதாக அனுமதிக்கவே செய்திருக்கிறேன். காதுகள் நாவலின் மையப்பாத்திரமான மகாலிங்கத்தின் காதுகளில் ஒலிக்கும் அந்நியர்களின் குரல்களை என்னுடைய உள்ளுணர்வு குரலுடன் தான் தொடர்புறுத்தி வாசித்தேன். அந்த அனுபவத்தை வாசிக்கும் போதே உள்ளூர நடுக்கமெழுந்தது.

வணிகக்குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம் தன்னுடைய நடுவயதை எட்டியப் போது ஏற்படும் பொருளியற் சரிவு, வறுமையாலே தன்னுடைய காதுகளில் விநோதமான ஆபாசமான அந்நியக் குரல்களைக் கேட்கின்றான். அந்த அனுபவங்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அவனுடைய ஆழுள்ளம் தேக்கியிருக்கும் அனுபவங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாட்டாக உணர முடியும். இளவயதிலே திருமணம் புரிந்து கொள்கின்ற மகாலிங்கத்தைக் கூடலுக்கு அழைக்கின்ற பெண்ணை மறுக்கின்றார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், தன்னை வணங்க மறுத்தத்தற்காய்க் காளி அவரின் காதுகளில் ஏசுகிறாள்; மன்றாடுகிறாள். பல பாத்திரங்களை ஏற்று காளி நடத்தும் அபத்த நாடகங்களை நாள்தோறும் மகாலிங்கம் கேட்க நேரிடுகிறது. வறுமை பீடித்திருக்கும் குடும்பச் சூழலில் தன்னுடைய குழப்பமான மனநிலையால் எதையும் செய்ய முடியாத சோர்வு மகாலிங்கத்தை அழுத்துகிறது. அதிலிருந்து மீளத் தன்னுடைய ஆன்மீகக் குருவான முருகனைத் துணையாகக் கொள்கின்றார். முருகனும் ஒரு பாத்திரமாக மாறி மாலியின் நிலைக்காய் வருந்தத்தான் முடிகின்றது. எழுத்தாளர் எம்.வி.வெங்கடராமின் வாழ்வில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையிலே இந்நாவலை எழுதியிருக்கிறார். இளவயதிலே கற்பனை வளமும் மாற்றுச் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவனாக வளரும் மாலி தான் அடைய நேரிடும் நிகர்வாழ்வின் துன்பங்களில் இருந்து மீள்வதற்காய்க் கொள்ளும் வழிமுறையே முடிவில்லாச் சுழலாக மாறியிருக்கிறது என இந்த அனுபவத்தைக் கொள்ளலாம். எழுத்தாளரின் மனம் கொண்டவரின் கற்பனையும் உணர்வு அலைக்கழிப்பும் அந்த அனுபவத்தை வளர்த்தெடுத்து உளத்திரிபுநிலைக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து மீள்வதற்கான மீட்பாக ஆன்மீகக் குருவான முருகனை நாடுவதன் மூலம் அதை ஆன்மீக அனுபவமாகவும் அவரால் மாற்றிக் கொள்ள முடிகின்றது. இவ்வாறான விநோதமான அந்நியக் குரல்களைக் கேட்க நேரிடும் அனுபவத்தை ஆடிட்டரி ஹலுசினேஷன் என உளவியல் அடிப்படையில் சொல்லப்படுகின்றது.பாரதி, காளிதாசன், வான் கோ போன்ற கலைஞர்களுக்கும் இவ்வாறாக உருவாகியிருக்கும் அனுபவங்களுடன் இதை ஒப்பீட்டுப் பார்க்க முடிகின்றது, பிரசவ வலியால் வேதனைப்படும் மனைவியை ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னர் ஏற்படும் பதற்றமான தருணத்தில் அவரைப் பிடித்திருக்கும் அக இரைச்சல் சற்றே ஒய்ந்திருக்கிறது. இவ்வாறாக மனம் உச்சக்கணங்களாக எண்ணுகின்ற தருணங்களில் தன்னை மறந்த சூழலில் காதிரைச்சல் ஒய்ந்திருக்கிறது.  இவ்வாறாக மகாலிங்கத்தின் அனுபவங்களுக்குத் தருக்கப்பூர்வமான விளக்கங்களை அளித்தாலும் அதன் கற்பனை நிரம்பிய மூளையின் செயற்பாட்டின் மர்மத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல்தான் போகிறது.


காதுகள் உணரக்கூடிய அனுபவத்துக்கேற்ப மூக்கில் மணம் எழுகிறது. நேர் அனுபவத்துக்கு மாறாகப் புலன்கள் மாற்று அனுபவங்களால்  மெய்நிகர் உலகொன்றை  உருவாக்கிக் கொள்கின்றன, அந்த மாற்று அனுபவங்களில், முற்பிறவியில் காளியை வணங்கி வந்தவன் இப்பிறவியில் முருகனை வணங்குவதற்காய்ச் சிற்றம் கொள்கிறது. அவனுடன் கூடுவதற்கும் தயாராய் இருக்கும் தெய்வத்தின் குரலாக ஒலிக்கின்றது. அவனுடைய வாழ்வின் அபத்தங்களுன் முன்னால் பரிகசித்துச் சிரிக்கிறது. அவனுடைய தருக்கப்பூர்வமான முடிவுகளின் போது எதாவது அபத்தமான சிந்தனைக்கும் செயலுக்கும் உந்தித் தள்ளுகின்றது.  இந்த மாற்றனுபவங்களால் வாழ்வின் நெருக்கடிகளிலும் போதமற்றவனாக மாலி விளங்குகின்றான். பசி, காமம், தூக்கம் போன்ற இயற்கையான அழைப்புகள் தவிர்த்தவற்றுக்கு மாலியால் கவனம் செலுத்த முடியவில்லை. மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து வீடு திரும்புகின்ற அவசத்தருணத்தில் குடும்ப நிலை அறியாமல் முரண்டு பிடிக்கின்ற மகனைக் கண்டமாதிரியாக அடித்துவிட்டுக் காலையில் அவனுடைய முகத்தில் படிந்திருக்கின்ற ரோசக்களையை  கண்டு சிரிக்கின்றான். மாற்று அனுபவங்கள் அலைகழிக்கும் சூழலிலும் எழும் இவ்வாறான நுண்ணிய தருணங்களை மாலியால் உணரவே முடிகின்றது.

ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிராகரித்து வேறொன்றைக் கற்பிதம் செய்யும் தருணங்களிலெல்லாம் இவ்வாறாக நுண்ணுணர்வுடன் கூடிய தருணங்களை எண்ணிக் கொள்வதொன்றே முற்றிலும் இங்கிருந்து விலகாமல் இருப்பதற்கான வழியாக இருக்கக்கூடும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...