முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதுகள் நாவல் வாசிப்பனுபவம்

 

தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் இளவயதில் பள்ளி முடிந்து தனித்திருக்கும் மாலைப் பொழுதுகளில் உருவானது என எண்ணுகிறேன். காண்கின்ற படம், நாள்தோறும் வாசிக்கின்ற நாளிதழ் செய்திகள், பள்ளியில் நடந்த சம்பவங்கள் இப்படியாகப் பலராகவும் உருமாறிப் பேசி, வாதிட்டுக் கொள்வேன். இதைத் தவிர, எதைச் செய்தாலும் உள்ளிருந்து உற்றுநோக்கிக் குரல் எழுப்பும் உள்ளுணர்வின் குரலும் அங்கிருந்தே உருவானது. பொதுவாகவே, மற்றவர்களிடம் அதிகமும் பேசாத இயல்பினாலும் வெளியுலக வாசம் குறைவாக இருந்ததாலும் இவை உருவாகியிருந்தது. சமயங்களில் பேச வேண்டிய அல்லது எதிர்வினையாற்ற தவறுகின்ற பொழுதுகளில் நேரும் குற்றவுணர்ச்சியை நேர் செய்யும் தப்பித்தல் வழிமுறையாகவும் இதை உணர்ந்து குறுகிப் போயிருக்கிறேன். ஆனால், எதோ ஒரு பொழுதில் உள்ளிருந்து ஒலிக்கும் குரலை இயல்பானதாக அனுமதிக்கவே செய்திருக்கிறேன். காதுகள் நாவலின் மையப்பாத்திரமான மகாலிங்கத்தின் காதுகளில் ஒலிக்கும் அந்நியர்களின் குரல்களை என்னுடைய உள்ளுணர்வு குரலுடன் தான் தொடர்புறுத்தி வாசித்தேன். அந்த அனுபவத்தை வாசிக்கும் போதே உள்ளூர நடுக்கமெழுந்தது.

வணிகக்குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம் தன்னுடைய நடுவயதை எட்டியப் போது ஏற்படும் பொருளியற் சரிவு, வறுமையாலே தன்னுடைய காதுகளில் விநோதமான ஆபாசமான அந்நியக் குரல்களைக் கேட்கின்றான். அந்த அனுபவங்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அவனுடைய ஆழுள்ளம் தேக்கியிருக்கும் அனுபவங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாட்டாக உணர முடியும். இளவயதிலே திருமணம் புரிந்து கொள்கின்ற மகாலிங்கத்தைக் கூடலுக்கு அழைக்கின்ற பெண்ணை மறுக்கின்றார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், தன்னை வணங்க மறுத்தத்தற்காய்க் காளி அவரின் காதுகளில் ஏசுகிறாள்; மன்றாடுகிறாள். பல பாத்திரங்களை ஏற்று காளி நடத்தும் அபத்த நாடகங்களை நாள்தோறும் மகாலிங்கம் கேட்க நேரிடுகிறது. வறுமை பீடித்திருக்கும் குடும்பச் சூழலில் தன்னுடைய குழப்பமான மனநிலையால் எதையும் செய்ய முடியாத சோர்வு மகாலிங்கத்தை அழுத்துகிறது. அதிலிருந்து மீளத் தன்னுடைய ஆன்மீகக் குருவான முருகனைத் துணையாகக் கொள்கின்றார். முருகனும் ஒரு பாத்திரமாக மாறி மாலியின் நிலைக்காய் வருந்தத்தான் முடிகின்றது. எழுத்தாளர் எம்.வி.வெங்கடராமின் வாழ்வில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையிலே இந்நாவலை எழுதியிருக்கிறார். இளவயதிலே கற்பனை வளமும் மாற்றுச் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவனாக வளரும் மாலி தான் அடைய நேரிடும் நிகர்வாழ்வின் துன்பங்களில் இருந்து மீள்வதற்காய்க் கொள்ளும் வழிமுறையே முடிவில்லாச் சுழலாக மாறியிருக்கிறது என இந்த அனுபவத்தைக் கொள்ளலாம். எழுத்தாளரின் மனம் கொண்டவரின் கற்பனையும் உணர்வு அலைக்கழிப்பும் அந்த அனுபவத்தை வளர்த்தெடுத்து உளத்திரிபுநிலைக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து மீள்வதற்கான மீட்பாக ஆன்மீகக் குருவான முருகனை நாடுவதன் மூலம் அதை ஆன்மீக அனுபவமாகவும் அவரால் மாற்றிக் கொள்ள முடிகின்றது. இவ்வாறான விநோதமான அந்நியக் குரல்களைக் கேட்க நேரிடும் அனுபவத்தை ஆடிட்டரி ஹலுசினேஷன் என உளவியல் அடிப்படையில் சொல்லப்படுகின்றது.பாரதி, காளிதாசன், வான் கோ போன்ற கலைஞர்களுக்கும் இவ்வாறாக உருவாகியிருக்கும் அனுபவங்களுடன் இதை ஒப்பீட்டுப் பார்க்க முடிகின்றது, பிரசவ வலியால் வேதனைப்படும் மனைவியை ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னர் ஏற்படும் பதற்றமான தருணத்தில் அவரைப் பிடித்திருக்கும் அக இரைச்சல் சற்றே ஒய்ந்திருக்கிறது. இவ்வாறாக மனம் உச்சக்கணங்களாக எண்ணுகின்ற தருணங்களில் தன்னை மறந்த சூழலில் காதிரைச்சல் ஒய்ந்திருக்கிறது.  இவ்வாறாக மகாலிங்கத்தின் அனுபவங்களுக்குத் தருக்கப்பூர்வமான விளக்கங்களை அளித்தாலும் அதன் கற்பனை நிரம்பிய மூளையின் செயற்பாட்டின் மர்மத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல்தான் போகிறது.


காதுகள் உணரக்கூடிய அனுபவத்துக்கேற்ப மூக்கில் மணம் எழுகிறது. நேர் அனுபவத்துக்கு மாறாகப் புலன்கள் மாற்று அனுபவங்களால்  மெய்நிகர் உலகொன்றை  உருவாக்கிக் கொள்கின்றன, அந்த மாற்று அனுபவங்களில், முற்பிறவியில் காளியை வணங்கி வந்தவன் இப்பிறவியில் முருகனை வணங்குவதற்காய்ச் சிற்றம் கொள்கிறது. அவனுடன் கூடுவதற்கும் தயாராய் இருக்கும் தெய்வத்தின் குரலாக ஒலிக்கின்றது. அவனுடைய வாழ்வின் அபத்தங்களுன் முன்னால் பரிகசித்துச் சிரிக்கிறது. அவனுடைய தருக்கப்பூர்வமான முடிவுகளின் போது எதாவது அபத்தமான சிந்தனைக்கும் செயலுக்கும் உந்தித் தள்ளுகின்றது.  இந்த மாற்றனுபவங்களால் வாழ்வின் நெருக்கடிகளிலும் போதமற்றவனாக மாலி விளங்குகின்றான். பசி, காமம், தூக்கம் போன்ற இயற்கையான அழைப்புகள் தவிர்த்தவற்றுக்கு மாலியால் கவனம் செலுத்த முடியவில்லை. மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து வீடு திரும்புகின்ற அவசத்தருணத்தில் குடும்ப நிலை அறியாமல் முரண்டு பிடிக்கின்ற மகனைக் கண்டமாதிரியாக அடித்துவிட்டுக் காலையில் அவனுடைய முகத்தில் படிந்திருக்கின்ற ரோசக்களையை  கண்டு சிரிக்கின்றான். மாற்று அனுபவங்கள் அலைகழிக்கும் சூழலிலும் எழும் இவ்வாறான நுண்ணிய தருணங்களை மாலியால் உணரவே முடிகின்றது.

ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிராகரித்து வேறொன்றைக் கற்பிதம் செய்யும் தருணங்களிலெல்லாம் இவ்வாறாக நுண்ணுணர்வுடன் கூடிய தருணங்களை எண்ணிக் கொள்வதொன்றே முற்றிலும் இங்கிருந்து விலகாமல் இருப்பதற்கான வழியாக இருக்கக்கூடும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற