முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 11

பெளத்தநாத் ஸ்தூபி அமைந்திருக்கும் பகுதியிலே இருந்த சீனபாணி கடையொன்றில் வாத்துகறி சாப்பிட்டோம். நாளைக்குச் சென்று பார்க்கவிருக்கும் குமாரி கோவிலின் தலேஜு தெய்வத்தின் இஷ்டதேவதையான பத்ரகாளியம்மன் ஆலயமும் நபராஜைச் சந்திக்கவிருக்கும் பீர்குடி பகுதியில்தான் இருப்பதாகத் தெரிந்தது. அங்குச் செல்வதற்கு உள்ளூரில் பிரபலமாக இருந்த பாத்தோவ் எனப்படும் வாடகைக்காரை எடுக்கக் கைப்பேசியில் செயலியைப் பதிவிறக்கம் செய்தேன். உள்ளூர் எண்ணிருந்தால் தான் அதைப் பதியமுடியும் எனக் கடையில் வேலை செய்யும் பணியாளர் குறிப்பிட்டார். நாங்கள் தமிழர்கள் என்பதும் தமிழ் மொழியில் பேசுகிறோம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. கடை முதலாளி என்னை அனுமதித்தான், முச்சந்தி வரையில் வந்து உங்களைக் காரிலேற்றிவிட்டு வந்திருப்பேன்….ஆனால், கடையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்றார். ஆனாலும், என் கைப்பேசியை வாங்கி செல்ல வேண்டிய இடத்தைப் பதிவு செய்து ஓட்டுநருக்கும் அழைத்துச் சொல்லி எங்களை முச்சந்தியில் நிற்கச் சொன்னார். மிக நன்றாக ஆங்கிலம் பேசியவரிடம் நன்றியைக் குறிப்பிட்டு விடைபெற்று முச்சந்திக்கு ஓடினோம்.


                                        காட்மாண்டு புறநகர் பயணம்

நேபாளின் கார் எண்கள் நீளமாகவும் ஓரே மாதிரியாகவும் இருந்ததால் காரைக் கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. காரிலேறியப் பின் சந்துகளில் கார் சென்று கொண்டிருந்தது. ஒட்டுநரும் விடாமல் யாரிடமோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். சொன்ன இடத்துக்குத்தான் செல்கிறாரா எனச் சந்தேகமாக இருந்தது. நகரின் மையத்தைத் தாண்டி சாலையோரத்தில் இறக்கிவிட்டு 480 ரூபாய் பயணத்துக்கு 510 ரூபாய் வாங்கி கொண்டு வலப்புறம் கைகாட்டிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன இடத்தில் கோவிலொன்று இருந்தது. அந்தக் கோவில்தான் பிர்குடி பத்ரகாளி கோவில். கோவில் கருவறை சென்று பக்தர்களே பூசை செய்யும் வழக்கத்தை நேபாளின் பல கோவில்களிலும் காணமுடிகின்றது. இங்கேயும் குங்குமம் சகிதமாகவே காளிதேவி வீற்றிருந்தாள்.  கோவிலின் பழமைக்கு அடையாளமாய் பெரிய மணியொன்று கோவில் இருந்தது.



நேபாளில் இருக்கும் சக்திபீடங்களில் பீரிகுடி பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. அந்தக் கோவிலின் பின்னால், திருமணச் சடங்கொன்று நடந்து கொண்டிருந்தது. மணமகன் மணமகளைத் தூக்க முயன்று கொண்டிருந்தார். மணமகள் கையளிப்புச் சடங்கென நினைத்தேன். அதனைப் படமெடுக்க முயன்றேன். அங்கிருந்தவர்களில் வேண்டாமென்பதைப் போல கையசைத்தார். தலையசைத்து பின்னாலில் திரும்பி கொண்டேன். நபராஜ் கோவிலுக்குப் பின்புறமிருந்து வந்தார். இப்பொழுது ஓரளவு மலாயை நன்றாக்ப் பேசினார். எங்களைப் பார்த்ததிலிருந்து மலேசியாவுக்கு திரும்ப வேண்டுமென்ற என்ற எண்ணம் வேரூன்றியிருக்க வேண்டும். எனக்கு மலேசியா வேண்டும் என மலாயில் சொல்லிக் கொண்டிருந்தார். புத்தர், தாரா சிலைகளை விலை மலிவாக வாங்க எதாவது இடம் அருகிலிருக்கிறதா என நவீன் கேட்டார். சிலையென்பதை மலாயிலும் ஆங்கிலத்திலும் எவ்வளவு சொல்லியும் நபராஜுக்குப் புரியவில்லை. அவர் கடை வைத்திருக்கும் பீரிகுடி சந்தைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஆரஞ்சு நிற தார்பாலின் கூரையிடப்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் இருந்தன. வெய்யிலில் இருந்து இறங்கி நீலநிற மேற்கூரை அமைந்திருந்த கடைப்பகுதிக்குச் சென்றோம். சேலைகள், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் விலை மலிவான காலணிகள், சட்டைகள் நிறையவே காணப்பட்டன. அம்மாதிரியான கடையொன்றைத்தான் நபராஜ் நடத்திக் கொண்டிருந்தார். உடல் மொழி காட்டியும் நபராஜால் புரிந்து கொள்ள முடியாததால் இணையத்தில் சிலையைக் காட்டிக் கேட்டோம். அவரின் மனைவி, தம்பி ஆகியோரிடம் பேசி இன்னொரு பகுதியைக் குறிப்பிட்டார். அங்கும் இருக்கும் என்பது உறுதியில்லை என்றவுடன் அவரின் மீது சந்தேகமெழுந்தது. நாங்கள் தங்கியிருக்கும் தாமேல் பகுதியில் இருக்கும் கடையில் சிலைகளை விலை குறைத்து வாங்கி தர உதவ முடியுமா எனக் கேட்டேன். ஆமாம் என்றதும் எங்களுடனே காரில் வந்தார். அவருடைய அண்ணன், தம்பி எனக் குடும்பமே அங்கு கடை வைத்திருந்தது தெரிந்தது.



அங்கிருந்து செல்வதற்கு முன்னர் நேற்று கொடுத்ததைப் போல இன்னொரு தலையணை கிடைக்குமா எனக் கேட்டார். அவருடைய மகளுக்கும் மகனுக்கும் அதனால் சண்டை வருகிறதென்றார். விளையாட்டுப் பொருட்களுக்காக பிடிவாதமிருந்து ஆர்வமாக வாங்கி பிறகு இன்னொரு பொருளைத் தேடிப் போகும் இயல்பு சிறுவர்களிடம் இருப்பதை நினைவு கூர்ந்தேன். நபராஜ் பேச்சில் வியாபாரியின் நுணுக்கமோ வாடிக்கையாளரின் சாமர்த்தியமோ தெரியவில்லை. அதைப் போலவே கடைகளுக்குச் சென்றதும், நாங்கள் பேரம் பேசியத் தொகையிலிருந்து கூடுதலாகவே நபராஜ் சொல்கிற வியாபாரிகள் தந்தனர். அவரை அங்கிருந்து அனுப்ப வேண்டி எதையாவது பொய் சொல்ல தயங்கி கொண்டிருந்தோம். அவரும் மலேசியா வேண்டும் என மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அத்துடன், அன்றிரவு அல்லது மறுநாள் காலையில் எதாவது மது விருந்துக்குச் செல்ல நவீனைப் பலமுறை அழைத்துக் கொண்டிருந்தார். நானே, ஒவ்வொரு கடையிலும் விலையைக் குறைத்துப் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். கடைக்காரர்கள் சொல்கிற விலையிலிருந்து குறைந்த விலையைக் குறிப்பிட்டு எனக்கு தெரிந்த ஒரே ஆங்கிலச் சொல் அதுமட்டும்தான் என்பதைப் போல அதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பொருட்களை வாங்கினேன்.  நவீன், வேடிக்கையாக நபராஜிடம் நீ மலேசியாவுக்கு வந்துவிடு அரவின் இங்கேயே நேபாளப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும் என்றார். எப்படியோ ஒருவழியாக நபராஜை அனுப்பி வைத்தோம். நபராஜ் மலேசியாவுக்குச் செல்லும் ஆவலில் எங்களைத் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தார்.  அவர் சென்றதை உறுதி செய்த பின்னர் மற்ற கடைகளுக்குச் சென்று மீதியிருந்த பணத்தில் ஒரு நாள் தேவைக்கு மட்டும் மிச்சம் வைத்து மற்றதைக் கொண்டு பொருட்கள் வாங்கினோம்.



அன்றிரவு எங்களுக்கான பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியிலிருந்து பத்து நிமிடத் தொலைவில் விருந்து நடைபெறும் விடுதிக்கு நடந்தே சென்றோம். போக்கராவில் வாங்கிய கூர்க்கா பாணி ஆடைகளை அணிந்து சென்றோம். அங்கு சென்றமர்ந்தவுடன் அனைவரின் மேசை மீது சிறிய அகல்விளக்கு போன்ற குவளையை வைத்திருந்தார்கள். அதில் நீண்ட கெண்டியை மேலேற்றி மேசையில் சிறிதும் சிந்தாமல் ராக்சி எனப்படும் உள்ளூர் சாராய வகையை ஊற்றிச் சென்றாள் பெண்ணொருத்தி. அதை வேண்டாமென மறுக்கக்கூடாதென நவீன் சொன்னார். ராக்சி என்பது நேபாளில் கிடைக்கும் குதிரைவாலி அரிசி, சோளம், அரிசி போன்ற தானிய வகைகளை நொதிக்கவைத்துச் செய்யப்படும் சாராய வகை என சுரேஷ் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களே சோளச்சாராயத்தைக் காய்ச்சுகின்றனர் என  குறிப்பிட்டார். கடும் நெடி வீசிய சாராயம் தொண்டையில் இறங்கியதும் எரிச்சலான ஏப்பம் எழுந்தது.  பின்னர், டால் பாட்டின் ஒவ்வொரு வகையும் ஒன்றொன்றாக எடுத்து வரப்பட்டுப் பரிமாறப்பட்டது. டால்பாட் எனத் தெரிந்ததும் எல்லாரின் முகத்திலும் ஏமாற்றத்துடன் கேலியான குரலெழுந்தது. நாங்கள் ஆவலாக எதிர்பார்த்த உள்ளூர் நடன வகைகள் ஆரம்பமாக இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...