முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 14

குமாரி கோவிலில் இருந்து வெளியேறி நடந்து செல்லும் போதே அடுத்தப் பயணத்திட்டத்துக்குத் தயாரானோம். குமாரியாக இருப்பவர்கள் பூப்பெய்தியவுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றனர். தலேஜு தேவி, அவர்களிலே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறாள். அவ்வாறு, குமாரியாக இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சனிரா பஜராச்சாரியாவைச் சந்திக்கும் வாய்ப்பையும் கோகிலாத்தான் சாத்தியப்படுத்தியிருந்தார்.



சனிராவைப் பார்க்கும் திட்டத்தை நவீன் குறிப்பிட்டதும் உடனே மலையேற்றத்துடன் முடியவிருந்த பயணத்தை உடனே மூன்று நாட்கள் நீடிக்க சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு, கோகிலா சனிராவை பி.பி.சி வானொலிக்காகக் கண்டிருந்த நேர்காணல், அவரைப் பற்றிய கட்டுரைகளையும் புலனக்குழுவில் பகிர்ந்திருந்தார். பொதுவாக, குமாரி பண்பாட்டைப் பற்றி சொல்லப்படும் கடுமையான சோதனைகள், கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கை ஆகியவற்றில் உண்மையில்லை என நேர்காணல்களில் சனிரா தெரிவித்தார். அத்துடன் தொலைகாட்சி பார்ப்பதற்கும் நண்பர்களுடன் இருப்பதற்குமான வாய்ப்பும் தனக்கிருந்ததாகத் தெரிவித்தார். குமாரி பண்பாட்டின் இறுக்கமான வாழ்க்கைமுறை பெருமளவு தளர்ந்திருப்பதை அவரது நேர்காணலில் அறிய முடிந்தது.  சனிரா தற்போது வங்கியொன்றில் கணக்கராகப் பணிபுரிகிறார். அவரை 2.30 மணியளவில் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பேருந்து பயணத்திலே அவரைச் சந்திப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நவீன் விளக்கினார். அத்துடன், அவருடனான உரையாடலை கோகிலா வழிநடத்துவார். நண்பர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் முன்னரே சொல்லலாம். அதைக் கோகிலா குறிப்பெடுத்து கேட்பார் எனத் தெரிவித்தார். நம்முடைய அறிவையும் சாதுரியத்தையும் காட்டுவதாக உரையாடலை அமைக்கக்கூடாது. எதிரிலிருப்பவர்களைத் தடையின்றி பேச வைக்கவே நேர்காணல் அவசியமென்பதை நவீனுடன் இணைந்து முன்னர் ஆளுமைகளை நேர்காணல் செய்ததிலிருந்து அறிய முடிந்திருந்தது.

https://en.wikipedia.org/wiki/Chanira_Bajracharya


சனிராவுடன் நான்

கேள்விகளைத் தொகுக்க நானும் கோகிலாவுக்கு உதவி செய்தேன். எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்னரே சனிராவைச் சந்திக்க சென்றிருந்தோம். அவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அருகிலிருந்த பதான்பூர் குமாரி கோவிலுக்குச் சென்றோம். அங்கிருந்த குமாரியைத் தொட்டு வணங்கவும் நேரில் பேசவும் முடியுமென கோகிலா சொன்னார். குமாரிக்கான சந்திப்பு நேரம் மதிய இடைவேளை முடிந்து 2.30 மணிக்குத்தான் தொடங்கும் எனச் சொன்னார்கள். காட்மாண்டிலிருந்த ரோயல் குமாரியைப் போல இக்கோவில் பெரிதாக இல்லையென்றாலும் கூட பழைமைக்கான அடையாளத்துடன் இருந்தது. குமாரியின் அறை கோவிலின் முதற்தளத்தில் இருந்தது. அதற்குக் கீழிருந்த தளம் முழுமையாகப் பலகைத்தடுப்புகளால ஆனதாக இருந்தது. மிகக்குறுகிய இடத்துக்குப் பக்கத்திலே மாடியும் இருந்தது.

சனிராவைப் பார்ப்பதற்கான நேரம் திட்டமிடப்பட்டதற்குச் சற்று முன்னரே கிடைத்தது. அங்கிருந்து பத்து நிமிடத்தொலைவில் சனிராவின் வீடிருந்தது. சனிரா சற்றே உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் தயக்கம் கொண்டவராகவும் இருப்பார் என எண்ணியிருந்தேன். நான் எதிர்பார்த்தற்கு மாறாக, சனிரா தன்னுடைய குமாரி வாழ்க்கையைப் பற்றிய விவரிப்பை நிறைய ஊடகங்களுக்கு அளித்தளித்துச் சரளமாக அதைப் பற்றிப் பேசக்கூடியவராக இருந்தார். சரளமான மொழியும் தேர்ந்த பதில்களும் ஒருவகையில் நம் மனதில் இருக்கும் மர்மத்தையும் புதிர்களையும் கலைத்துவிடுகின்றதோ எனச் சிந்தித்துச் சிரித்துக் கொண்டேன். ஒரு கேள்வியைக் கேட்டவுடன் உடனே ஒக்கே என்று அதற்குப் பதில் சொல்லத் தொடங்கினார். முன்னரே பிபிசியில் சொன்னதைப் போல குமாரி வாழ்க்கை அந்தளவு இறுக்கமாக இருக்கவில்லை என்பதைச் சொன்னார். குமாரியாக இருந்தது தன் வாழ்வின் மகிழ்ச்சிக்கரமான தருணமென்றார். குமாரி வாழ்விலிருந்து வெலியேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியப் பின்னர் வகுப்பறையில் எல்லாருடனும் இணைந்து இயல்பாகக் கற்க மூன்று நான்கு மாதங்கள் பிடித்தன என்றார். எல்லா நாளுமே குமாரி வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென்கிற ஏக்கம் தனக்கு வருமென்றார். முதலில், பள்ளி நண்பர்கள் தன்னுடைய குமாரி வாழ்க்கையை அறிந்திருந்ததால் தன்னிடம் நன்முறையில் பழகத்தொடங்கினார்கள். அலுவலகங்களில் தன்னுடைய குமாரி வாழ்க்கையை அறிந்தவர்கள் வேறுமாதிரியாக நடந்து கொள்ளத் தொடங்குவார்கள் என்றார். தான் தவறுகள் செய்யத் தொடங்கும் போது தன் தாயார் டயரிக்குறிப்பில் எழுதி அவரிடம் காட்டுவார் என்றும் அதிலிருந்தே தன்னைக் கண்டிப்பார் என வேடிக்கையாகச் சொன்னார். உங்களுக்கு, பால்யக்காலம் தொலைந்துவிட்டதன் ஏக்கம், மற்ற சிறுவர்களைப் போல இல்லாமல் வேறுமாதிரியாக வளர்ந்ததன் ஏக்கம் இருந்ததாகக் கேட்கப்பட்டது. அதற்கு, அப்படியில்லை எனச் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். நான் அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்புறமிருந்த ஆளுயர அலமாரி முழுதும் நிறைக்கப்பட்டிருந்த பொம்மைகளைப் பார்த்துக் கொண்டேன். அத்துடன், 2001 ஆம் ஆண்டு மன்னர் பிரேந்திரா குடும்பப்படுகொலையின் போது சனிரா ஐந்து வயது குழந்தையாகக் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தருணமென்பதால் சனிராவின் குமாரிக்காலம் வரலாற்று ரிதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. படுகொலைக்கு முன்பதாக எவ்வித காரணமுமின்றி மூன்று நாட்கள் சனிரா அழுதிருக்கிறார். அதை தீய நிமித்தத்தை முன் உணர்ந்த தருணமாக சனிரா நேர்காணலில் குறிப்பிடவில்லை. மாறாக, அது தற்செயல் என்பதைப் போலவே குறிப்பிட்டார். இந்நேர்காணலை முழுமையாக  கோகிலா வல்லினம் இதழில் எழுதுவார்.


பதான்பூர் கோவில்

அவருடைய வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் சனிராவின் அத்தை தன குமாரி பஜ்ராச்சார்யாவை பார்க்கத் திட்டமிட்டோம். அவரும் சனிராவுடன் தான் தங்கியிருக்கியார். 1970 களில் குமாரியாக இருந்தவர். நேபாளில் அதிகக்காலம் குமாரியாக இருந்தவர். பருவமடையாததால் நீண்ட காலம் குமாரியாக இருந்தார். பின்னர் இளவரசர் டிபேந்திராவின் வேண்டுகோளுக்கிணங்கி மற்றவர்களுக்கு வழிவிட்டார். இருப்பினும் கூட, குமாரியாகவே வாழ முடிவு செய்தார். குமாரிக்குரிய அலங்காரத்துடன் ஒரறையில் அமர்ந்திருந்தார். முகத்தில் எவ்வித உணர்ச்சி மாற்றமும் இன்றி வணங்குபவர்களுக்கு குங்குமம் கலந்த அரிசியை நெற்றியில் திலகமிட்டு வாழைப்பழம் தந்தார். 2015 ஆம் ஆண்டு நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டப்போதுதான் சாதாரணர்களைப் போல தெருவில் தனகுமாரி நடந்தார். மற்ற எல்லா நாட்களிலும் குமாரியைப் போலவே வாழ்கிறார் என்றார்கள். அறைக்கு வெளியே தனகுமாரி குமாரியாக இருந்த போது எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப்படத்தைப் பார்த்தேன். வயதினால் முகத்தசை விரிவடைந்து தளர்ந்ததைத் தவிர பெருமளவு பழையத்தோற்றத்துடன் ஒத்திருப்பதாகவே இருந்தது.

https://en.wikipedia.org/wiki/Dhana_Kumari_Bajracharya

சனிரா
 

நேபாள மக்களுக்கே குமாரியைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. அதைச் சாத்தியப்படுத்திய கோகிலாவுக்கு கணேஷ் நன்றி தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறி பதான் கோவிலில் இருக்கும் குமாரியைச் சந்திக்கச் சென்றோம். மூக்கில் சளி ஒழுகிக் கொண்டு முகத்தில் தூக்கக்கலக்கத்துடனும் ஒவ்வொருடைய நெற்றியிலும் எரிச்சலுடன் குமாரி திலகமிட்டார். வேடிக்கையாகவும் அதே சமயத்தில் அவளுக்காக இரக்கமாகவும் இருந்தது. அங்கிருந்து வெளியேறி, நடக்கும் போது எங்களுடன் வந்த தேவஜிதாவும் சிவலெட்சுமியும் கோமளாவும் குமாரியுடனான சந்திப்பில் இணையாமல் தனியே பொருட்களை வாங்க சென்றது நினைவுக்கு வந்தது. அவர்களிடம் கைப்பேசியில் இணையவசதியும் இல்லை. அவர்களை எங்கிருந்து தேடி வருவது என எல்லாரும் பதற்றமாக இருந்தோம். தேவஜிதாவின் அம்மா ஆனந்தி மூவரையும் காணாததால் மிகுந்த கலக்கமாக இருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...