நேபாளப் பயணம் 2
பசுபதிநாத் கோவில் நுழைவாயிலுக்கு வலப்புறமே முருகா...முருகா எனத் தமிழில் பெயர்ப்பலகை இருந்தது. உள்ளே நுழையும் முன்னரே காலணியுடன் உள்ளே நுழைய கூடாதென முகப்பில் இருந்த பெண் காவலர் தடுத்தார். காலணியை எடுத்து முருகா...முருகா எனப் போட்டிருந்த கடையில் வைத்துவிட்டு அங்குக் கொடுக்கப்பட்ட செருப்பை மாட்டிக் கொண்டு சென்றோம். காசுக்குத்தான் இப்படி செய்வார்கள் எனக் கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். ஆனால், பணம் கேட்காமலே செருப்பு கொடுக்கப்பட்டது.ஒருவேளை கோவிலில் இருந்து வெளிவரும் போது கேட்கலாம் என நினைத்தேன்.
பல கோவில்கள் கொண்ட கோவில் தொகுதியாகப் பசுபதிநாத் கோவில் இருந்தது. அங்கிருந்த அகோரி சாமி குங்குமம் பூசிக் கொண்டு தண்டேந்தி அமர்ந்திருந்தார். அவரைப் படமெடுக்க முயன்ற போது தண்டை ஓங்கி எஹூம் எனக் கத்தினார். அந்தக் குரல் கேட்டு பயந்து ஓடினேன்.அடுத்ததாக யாருமறியாமல் படமெடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். ஒங்களத்தான் ஒங்களத்தான் துரத்தி வர்ரார் என நவீன் பயமூட்டினார். நேபாளக் கோவில்கள் யாவும் சதுரமாகவும் மேல் கூம்பு பகுதியில் சீனக் கோவில்களான பகோடாக்களைப் போல் நான்கு பக்கமும் விரிந்த விளிம்புகளைக் கொண்டதாய் இருக்கிறது.
பசுபதி நாத் கோவில் நேபாளத்தின் புனித நதியாகக் கருதப்படும் பாக்மதி ஆற்றின்கரையில் அமைந்திருக்கிறது. மையக் கோவிலின் நான்கு வாசல்களிலும் நான்கு முகமும் உச்சியை நோக்கி ஐந்தாவது முகம் என ஐந்து முகம் காட்டி சிவ லிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.நாங்கள் சென்ற நேரத்தில், பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. முன் வாசலில் சிறிது நேரம் நின்று பார்க்கும் போது கருவறையில் விளக்கேற்றப்படாமையால் இருண்ட அறையில் வெள்ளித் தகட்டுப் பதிக்கப்பட்டு மாலைகள் சார்த்தப்பட்ட லிங்கச்சிலை இருந்த்து தெரிந்தது. அடுத்து நடைபெறும் மாலை பூசையின் விளக்கேற்றலின் போது கோவில் உள் சென்று வழிபட பக்தர் கூட்டம் நெருக்கியடித்து நின்றதால் எதையும் முழுமையாகக் காண முடியாமல் இருந்தது. கோவிலின் மேல் விளிம்பைச் சுற்றிலும் புலி,எருமை என யாளிச் சிலைகள் மரத்தால் செதுக்கப்பட்டிருந்தன. மண்டையோட்டு மாலையும் அசுரனை மிதிக்கும் கோர முகம் கொண்ட காளியின் சிலையும் தெரிந்தது. கோவிலைச் சுற்றிலும் வெள்ளித்தகட்டுப் பதிக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் வெண்கல மூலாம் பூசப்பட்ட பெரிய நந்தி சிலையொன்று திமில் சரிய அமைக்கப்பட்டிருந்தது. சிலைகள் யாவற்றிலும் பூசப்பட்ட குங்குமம் வழிந்து தேனீக்கள் மொய்க்கும் மலர்மாலைகளால் நிறைந்து கிடந்தன. குங்குமம் படிந்த சிலைகள் பார்ப்பதற்கு மோசமாகத் தெரிந்தன.கோவிலின் பின்னிருக்கும் பாக்மதி ஆற்றங்கரைக்குச் சென்றோம். பாதம் மறையும் அளவே ஒடிக்கொண்டிருந்த ஆற்றில் மணல் திட்டுகள் தோன்ற ஆற்றொழுக்கு தடைபட்டிருந்தது. அங்கு ஆற்றுக்கான ஆராத்திச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆற்றுப் படித்துறையில் அமர்ந்து நானும் நவீனும் கோகிலாவும் ஆராத்திச் சடங்கைப் பார்த்தோம். பஜனைப் பாடல்கள், துதிகள், ஒற்றை முகம், ஐந்து முக விளக்குகளால் ஆற்றுக்குப் பூசகர்கள் ஆராட்டு எடுத்தனர். ஆற்றைத் தெய்வமாக எண்ணியப் பழங்குடிப் பண்பாட்டின் எச்சமாக இந்தச் சடங்கு நிகழ்வதாய் எண்ணிக் கொண்டேன். நாங்கள் அமர்ந்திருந்த படித்துறைக்கு வந்த கோவில் பணியாளர் தர்ப்பைப் புல்லை ஆற்றில் ஊறவைத்து எடுத்துப் படியில் வீசினார். அங்கிருந்தவர்களை அகலச் சொல்லி தாமதமாக நகர்ந்ததற்குத்தான் இப்படி வீசினார். அதன் பிறகு விறகுக்கட்டைகள் ஒன்றொன்றாக வீசப்பட்டுக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் படித்துறைக்குப் பக்கத்திலே சிதை மேடை இருப்பதைப் பார்த்தேன்.
ஆராத்திச் சடங்கு
அதில் பிணத்தை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நிகழ்கின்றன எனத் தெரிந்தது. ஒரு பிணம் எப்படி எரிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. இடப்புறத்தில் ஏற்கெனவே எரிந்து கொண்டிருந்த சிதைகளைப் பார்த்தோம். முதல் சிதை முற்றிலும் எரிந்து விட்டிருந்தது. அடுத்த சிதையில் ரப்பர் போன்று உருகிவிட்ட பிணத்தைத் திருப்பிப் போட்டுக் கொண்டிந்தார் பணியாளர். மூன்றாவதில், குங்குமம் பூசப்பட்ட வெண் துணியில் போர்த்தப்பட்டிருந்த பிணம் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கருகிலே, இறந்தவரின் மகன்கள் தலைமயிர் மழிக்கபட்டு எதையோ சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து பார்த்துவிட்டு வேனுக்கு வந்துவிட்டோம். கோவிலில் இருந்து வெளியே வரும் போது செருப்பு கொடுத்து காலணி போட்டுக் கொண்டோம். எவ்வளவு என்று கேட்டதற்கு பிரி...பிரி என்று சொன்னார். அவரைப் பற்றிய தப்புக்கணக்குக்கு உள்ளூர குற்றவுணர்வாக இருந்தது.
பாக்மதி ஆறும் தர்ப்பைப்புல்லும்
இரவு தங்கும் விடுதிக்கு வந்ததும் மறுநாளுக்கான பயணப்பைகளைத் தயார் செய்தோம். மறுநாள் ஆறு மணியளவில் எழுந்து பசியாறி விட்டு அன்னப்பூர்னா மலை அடிவாரத்துக்குப் போகும் முன் தங்கப் போகும் போக்கரா பகுதிக்குச் செல்லப் பேருந்தில் ஏறினோம். 200 கிலோமீட்டர் பயணம் எழு முதல் எட்டு மணி நேரம் எடுக்குமென சுரேஷ் முன்னரே சொல்லியிருந்தார்.
அங்கிருந்து பேருந்து கிளம்பத் தொடங்கி சில மணி நேரத்தில் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது எனக் கேட்டதற்கு உடன்வந்த நேப்பாள வழிகாட்டி இரு மணி நேரம் என்றார். சுரேஷ் ஒரக்கண்ணால் சிரித்து 40 நிமிடம்தான் என்றார். அந்தப் பயணம் ஒன்றரை மணி நேரம் நீண்டது. இந்தப் பயணத்தில் எந்தவகையிலும் சூழல் ஒட்டிச் சிந்தித்து உடலைப் பலவீனப்படுத்தும் எந்த நெருக்கடிகளும் அண்டாமல் சுரேஷ் பார்த்துக் கொண்டார். போக்கராவுக்குச் சென்றடைந்த பின்னர் படிகட்டுப் பால்கனியில் அந்திச் சாயும் முன் மெல்லிய மஞ்சள் நிறம் போர்த்தி வெள்ளி மலைகள் தெரிந்தன. குளித்து முடித்து இரவுணவு உண்ண விடுதிக்கு வெளியே இருக்கும் கடைகளில் அலைந்தோம். ஒரு கடையில் அலங்கார விளக்குகளும் ஆடம்பரமானச் சூழலையும் கண்டு உள்ளமர்ந்து உணவுப் பட்டியலைப் பார்த்து சொன்னோம். எல்லா உணவுக்கும் இல்லையென நை...நேய்..எனச் சொன்னதும் கடையை விட்டு வெளியேறினோம். அடுத்தக் கடையில் நான் ரொட்டியும் தொட்டுக் கொள்ள பன்னீர் பாலாக் எனப்படும் பாலாடை கட்டிகளையும் சொன்னேன். அவை நன்றாக இருக்கவே தனியாகவே எடுத்துச் சுவைத்து உண்டேன். எங்கள் குழுவில் இணைதிருந்த வசந்தி கொடுத்த காளான் கஞ்சியும் உண்டேன். பொதுவாகவே, வெளியில் உண்ணும் போது உணவு அழற்சி ஏற்பட்ட முன்னனுபவங்களால் மிகவும் பழகிப் போன ஒரே மாதிரியான உணவுகளை உண்பேன். இம்முறை ஏதோ விருப்பத்தில் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாய் உண்டேன். விடுதிக்குச் சென்றதும் மறுநாளுக்கான பயணப்பைகளை ஒருக்கிவிட்டுப் படுத்தேன். காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பமொன்று முந்திக் கொண்டு வந்தது. அந்த மணம் நன்கு பழகிய மணம். கொஞ்ச நேரத்தில், பயமெடுக்கத் தொடங்கியது.
கருத்துகள்
கருத்துரையிடுக