நேபாளப்பயணம் 5
ஆனந்தி அம்மா சோர்வுடன் படுத்திருப்பதைப் பார்த்து தேவஜிதாவும் மயூரியும் கலக்கமாக இருந்தனர். மயூரி மலாக்காவில் இருக்கும் அலோர்காஜா தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர்தான் தேவஜிதாவையும் அவரது அம்மாவையும் இந்தப் பயணத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அதனால்தான் கூடுதலாக வருத்தமாக இருந்தார். ஆனந்தி அம்மா எழுந்தமர்ந்தவுடன் முதலில் இருவரையும் பார்த்து 'சாப்பிட்டாச்சா' எனக் கேட்டார். எல்லா தாயும் பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் போது பிள்ளைகள் பசியுடன் சாப்பிடாமல் இருப்பார்கள் என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். அன்றிரவு, நானும் முனியாண்டி, சுப்ரமணியம், சுரேஷ் நால்வரும் ஒரே அறையில் படுத்தோம். யாருக்கும் குளிரை எதிர்த்து குளியல் போட மனம் வரவில்லை. ஈர திசுக்களைக் கொண்டு கழுத்து, முகம், நெஞ்சுப்பகுதிகளை மட்டும் வழித்தெடுத்து நான்கடுக்கு ஆடை பாதுகாப்புடன் படுத்தேன். முனியாண்டி சார் தீபரசம் தைலத்தைத் தந்தார். அதைக் கால்களில் தேய்த்துப்படுத்தேன். அந்தக் குளிரின் வாட்டத்துக்கு தீபரசத்தின் நெடியும் எரிச்சலும் உணக்கமாய்த் தெரிந்தது. காலையிலெழுந்ததும் யார் தண்ணீரில் கைவைப்பதெனக் காத்திருந்தேன். காலையில் வெளியில் நின்று பார்க்கும் போது மலைகளில் பாளம் பாளமாகக் கரும்பாறைகளில் பனி படிந்து பனிமூட்டமாய் இருந்தது.
விடுதியறையின் முன்னால் நின்று கொண்டிருந்த போது ஹெலிக்ஸைப் பார்த்தேன். திருச்சூர்க்காரர்.திருச்சூரிலிருந்து ரயில் வழியாகவே நேபாள எல்லைக்கு வந்து அங்கிருந்து பேருந்து எடுத்து இங்கு வந்து சேர்ந்திருந்தார். மொத்தச் செலவே 20000 ரூபாய்தான். வியப்பாக இருந்தது. இங்கும் சட்டை, அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தார். இன்றைக்கு இன்ஸ்டாகிராம், முகநூலில் வரும் குறுங்காணொளிகளில் அடிக்கடி தென்படும் வாசகம் நெருக்கடிகளிலிருந்து விடுபட உடனே பயணத்துக்குக் கிளம்புங்கள். பையைத் தூக்கிக் கொண்டு பயணம் செய்யும் பேக்பேக்கரஸ் வகைப் பயணங்களை ஊக்குவிக்கும் காணொளிகளை ஒருவகை ஐயத்துடன் தானே பார்ப்பேன். பயணங்கள் மீதான பித்தைக் குறுங்காணொளிகள் வளர்க்கின்றன. இம்மாதிரியாக மோஸ்தரைப் பின்பற்றி எடுக்கப்படும் காணொளிகள், படங்கள் குறிவைப்பது கவனக்குவிப்பைத்தான் என்றும் நம்புவேன். இந்தப் பயணம் எனக்கு ஏற்படுத்திய முதன்மையான கேள்வியென்பதே ஏன் தனிப்பயணங்களை மேற்கொள்ளக் கூடாது? என்பதுதான். குழுப்பயணம், தனிப்பயணம் ஆகிய இரண்டுமே அடிப்படையில் இரு வேறு மனநிலைகளை ஒட்டிச் செய்யப்படுவது. அனைவருக்கும் காத்திருந்து உடனிருப்போர் மீது கவனம் செலுத்திச் செய்யப்படுவது குழுப்பயணம். ஒருவரின் சிறு தாமதம், அலட்சியம் முழுவதுமாகக் குழுப்பயணத்தை வீணடித்து விடும். தனிப்பயணம் என்பது தனிப்பட்ட மனநிலையைப் பொறுத்து அமைத்துக் கொள்ளக் கூடியது. வாய்ப்பிருந்தால் பின்னர் தனிப்பயணம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
ஹெலிக்ஸ் விசுவல் கம்யுனிக்கேஷன் இளங்கலை பயில்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எம் டி வாசுதேவன் நாயர் ஆகியோரின் படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டோம். மலையாளத்தின் கல்ட் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்ற விதேயன், மதிலுகள், எலிப் பத்தாயம் படங்களை நானும் பார்த்திருந்ததால் அது குறித்து உரையாடினோம். மலையாளக் குடும்பங்களில் மருமக்கள் தாயம் இருந்தமையால் தன் தங்கைகள் முதிர்கன்னிகளாக வீட்டில் வைத்திருக்கும் அண்ணனைப் பற்றியக் கதை எலிப்பத்தாயம். நிலபிரபுத்துவ வாழ்க்கை முறை வீழ்ச்சியடைந்த சித்திரத்தையும் புதிய வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படாததைக் குறியீடாகக் காட்டும் முறையில் படம் முழுதும் பொறி வைத்து எலி பிடித்துச் சாகடிக்கும் காட்சிகள் இருக்கும். படமும் மெதுவாக நகரும். அந்தக் காட்சிகளைப் பற்றிப் பேசினோம். மறுபடியும் சந்திப்போம் எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு பயணத்துக்குத் தயாரானோம்.
அடுத்த குழு ஹிமாலாயாவிலிருந்து கிளம்பியது என்று தெரிந்ததும் நாங்கள் கிளம்ப அபிநாஷ் சொன்னார். அங்கிருந்து கிளம்பி, மச்சாப்புச்சாரே மலை அடிவாரத்துக்குச் சென்றோம். மச்சாபுச்சாரே என்றால் நேபாள மொழியில் மீன் வால் எனப் பொருள்படும் எனச் சொல்லியிருந்தார்கள். நடைப்பயணத்தின் போது அதனைப் பல இடங்களில் வழிகாட்டிகள் குறிப்பிட்டார்கள். அதன் உச்சி முனை மட்டும் இரண்டு மூன்று பிளவுகளாகப் பனி போர்த்திக் கிடந்தது. மீன்களைக் கையில் பிடித்தால், தன் வாலை ஆன மட்டும் வளைத்து நெளிந்து கொண்டிருக்கும் காட்சியைக் கற்பனை செய்து அதில் மின்னல் பொழுதில் அதன் வால் அலைநெளிவுகளாகத் தெரிவதைப் போல மலை முகடும் நெளிவுகளாகத் தெரிவதால் அப்பெயர் நிலைபெற்றிருக்கும் என நினைத்தேன்.
மச்சாபுச்சாரே மலை அடிவாரத்தைச் சென்றடைய நீண்டப் படிகட்டுகள் தெரிந்தன. ஒவ்வொரு இடத்தை அடைவதற்கு மேற்கொள்ளும் நீண்டப்பயணங்களைக் காட்டிலும் தங்கும் விடுதியைச் சேரும் படிக்கட்டுகளும், சிறிய குன்றுகளும் அதிகமாகவே சோதனை செய்யும். அந்தப் படிகட்டுகளை ஏறிக் கொண்டிருக்கும் போது பொந்தில் அணிலளவு உள்ள எலியொன்று ஒடி உள்நுழைவதைப் பார்த்தேன். இந்தப் பயணத்தில் காட்டில் நாங்கள் பார்த்த ஒரே காட்டுயிர் என்றால் அந்த எலியைத்தான் சொல்ல வேண்டும். பழுப்பு நிறத்தில் ரோமம் அடர்ந்திருந்த எலி, எல்லா எலிகளைப் போலவே மனிதர்களைக் கண்டதும் அச்சம் கொண்டு பட்டென பொந்தில் நுழைந்து கொண்டது. அந்த விலங்கையும் ஒரு சில நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஹெலிக்ஸிடம் பேசிய எலிப்பத்தாயம் காட்சிகள் நினைவுக்கு வந்தன. மேலேறியதும் மச்சாபுச்சாரே மலை பின்புலத்தில் தெரிய நேபாளத்தின் இரு முக்கோணம் கொண்ட கொடி பறந்து கொண்டிருந்தது. அதற்கு நேர்புறத்தில் மலை அடிவாரங்களில் பனிப்படலம் உருகி வழியும் போது நிலமும் சேர்ந்து சரிவதைத் தடுப்பதற்காகச் செங்குத்தாக மூங்கில்கள் நட்டிருப்பதை சுப்ரா சுட்டிக் காட்டினார். தமிழ் அறவாரியத்தின் உதவித்தலைவரான சுப்ரமணியம் கட்டுமான நிறுவனமொன்றில் ஆலோசகராகப் பணிபுரிகிறார். பழகுவதற்கு மிகவும் எளியவர். சிரியாவில் பணிபுரிந்திருக்கிறார். பயணத்தின் போது வெளிநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து வந்தார். அங்கிருந்து பார்க்கும் போது கீழே பறந்து கொண்டிருந்த வானூர்தியைப் பார்க்க காக்கைகள் பறப்பதைப் போல தெரிந்தன. மச்சாபுச்சாரேவில் காக்கைகளும் பறந்து கொண்டிருந்தமையால் மலை அடிவார உச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டும் இறக்கியும் வந்த வானூர்திகளும் பறவைகள் போலவே தெரிந்தன. எதாவதொரு வகையில் மலையேறிகளின் வருகை மலையின் பரப்பையும் சூழலையும் மாற்றிக் கொண்டு வருவதை உணர முடிந்தது.மச்சாபுச்சாரேவில் குளிராக இருந்தாலும் வெய்யிலின் உணக்கத்தைத் தரையில் உணர முடிந்தது. அந்த உணக்கத்துக்கு அப்படியே தரையில் படுத்துக் கொண்டோம். அங்கு மதிய உணவுண்டு விட்டு, அன்னப்பூர்னா அடிவாரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். வழிவழியே கொஞ்சம் ஒரிரண்டு நிமிடங்கள் நின்று இளைப்பாறிவிட்டு நடந்தோம். அங்காங்கே தெரிந்த கம்பங்கள், முகாம்களை அமைப்பதற்கான கற்களிலும் கட்டைகளிலும் இருந்த கட்டுமானங்களை இளைப்பாறல் இடங்களாகக் கண்டு கொண்டு நடந்தோம். வழியில் அன்னப்பூர்னா அடிவாரத்தில் அமைந்திருக்கும் இடைத்தங்கல் முகாம் இன்னும் எங்கோ எட்ட முடியாதத் தொலைவிலிருப்பதாகத் தெரிந்தது. மேலிருக்கும் பனிப்படலம் உருகி ஆறொன்று இடப்புறத்தில் ஒடிக் கொண்டிருந்தது. அங்கும் வரிசையாக, மலையிலிருந்து அறுத்துக் கொண்டு வந்து ஆற்றொழுக்கால் தேய்ந்து மென்மையடைந்த தட்டைக்கற்களை அடுக்கி வைத்திருந்தனர். நான் அங்கும் தட்டைக் கற்களை அடுக்கி வைத்தேன். அதற்கு எவ்விதமான வேண்டுதல்களையும் வைக்கவில்லை. ஒவ்வொரு கல்லையும் காற்றில் தவழவிடுவதைப் போல சமநிலையுடன் அடுக்கி வைத்துப் படமெடுத்துக் கொண்டேன்.
அன்னாபூர்னா மலை அடிவார உச்சியை அடைவதற்கு முன்னர் உடன் வந்த சுமைத்தூக்கிகள்,எப்பொழுதும் சொல்வதைப் போல இன்னும் 20 நிமிடம் என்று சொன்னார்கள். பாதை சீராகச் செல்வதால் இன்னும் 1 மணி நேரமாவது இருக்குமென நினைத்தேன். கொஞ்ச தூரத்தில் நமாஸ்த்தே அன்னாபூர்னா மலை அடிவாரம் என வண்ண எழுத்துகளால் எழுதப்பட்டப் பலகையைப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் இவ்வளவுதானா என எண்ணம் வந்தது. நாங்கள் வந்தடைந்த நேரத்தில் பலகையின் கீழ் பழுப்பு தீட்டுகளுடன் வெண்ணிறத்தில் நாயொன்று உடலை மண்ணில் பரப்பி அரைக்கண் உறக்கத்திலிருந்தது.
நாங்கள் ஆவலுடன் நமாஸ்த்தே பலகை முன்னால் நின்று படமெடுக்கும் போது நாய் அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் படுத்திருந்தது. உலகின் உயரமான மலைகளில் ஒன்று: நேபாளத்தில் எட்டாவது பெரிய மலை. அதன் முன்னால் பனிமூட்டத்தால் முழுமையாய் உணர முடியாத வெய்யிலின் உணக்கத்துக்குக் குழி பறித்து உறங்குகிறது. அதை நினைத்தவுடன் எதோ பரவசமாக இருந்தது. அதைப் படமெடுக்க பெயர் பலகை பின்னால் சென்றேன். அதைப் படமெடுக்கும் போது முன்னிருந்து மேன்...தேட் சைட் பிளிஸ்...என்ற இந்தியாவைச் சேர்ந்த மலையேறிகளின் குரல் கேட்டு ஒதுங்கினேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக