முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

அன்னப்பூர்னா மலை அடிவார உச்சிக்குச் சென்றதும் ஹெலிக்ஸை மீண்டும் சந்தித்தேன். எங்களுக்கு முன்னரே உச்சியை அடைந்து விட்டிருந்தான். ஸ்விஸ்ட்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறியிடம் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் பதிலுக்குத் தலையசைத்து உரையாடலில் மூழ்கிப் போனான். நான், ஜெகதீசன், சண்முகநாதன் ஆகிய மூவரும் ஓரறையில் தங்கி கொண்டோம். கடுங்குளிருக்கு எதையும் செய்ய முடியவில்லை. அப்படியே நான்கடுக்கு ஆடை பாதுகாப்புடன் கனத்த கம்பளியைப் போர்த்திக் கொண்டேன். கண்களை மூடிக்கொண்டால் அலையலையாக வெள்ளிக்கம்பிகளைப் போல அருவிகள் ஆர்பரித்து இறங்குவது தெரிகிறது. அருவிகளின் சத்தமும் காதை நிறைப்பதைப் போலிருந்தது. தூக்கம் வரமால் திரும்பி திரும்பி படுத்தேன். கொஞ்ச நேரத்தில் மற்ற அறைகளில் பரபரப்பான பேச்சொலி எழுவதைக் கேட்டு வெளியே சென்றேன். 


குளிரில் நடுங்கியவாறே வெளியே பேசிக் கொண்டிருந்த கோவிந்தன், லெட்சுமணன், ஆனந்தி ஆகியோரின் உரையாடலைக் கேட்டேன். எங்களுடன் வந்த வசந்தி மேல் வந்ததும் இரு முறை வாந்தியெடுத்திருக்கிறார். உயிர்வளியின் அளவும் ஆபத்தான அளவான 70 ஐத் தொட்டிருப்பதால் அவரை உடனடியாகக் கீழே அழைத்துச் செல்வதைப் பற்றி தலைமை வழிகாட்டி அபிநாஷ் பேசிக் கொண்டிருந்தார். அதில் ஒரு தேர்வாக, அனைவரும் கீழே இறங்கலாம் என்றார். அதற்கு, லெட்சுமணன் உடனடியாக மறுப்பு சொன்னார். நடந்து வந்த களைப்பால் பலரும் உறங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அவர்களை எழுப்புவது சரியாக இருக்காது. சிக்கல் உள்ளவர்களை மட்டும் எழுப்பி அல்லது தூக்கிக் கொண்டு கீழிருக்கும் மச்சபுச்சாரே முகாமுக்கு அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு அபிநாஷ் வந்தார். ஆனால், வசந்தி அங்கிருந்து இறங்கமாட்டேன் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார். இங்கு இவ்வளவு தூரம் நடந்து வந்தது இந்த மலையைக் காணத்தான். இதைவிட்டு நான் கீழிறங்கமாட்டேன் என காய்ச்சலில் முனகிக் கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்று, நாளைக்கு இன்னொரு குரூப் மேலேறி வருவாங்க…நீங்க இன்னிக்கு இவங்க கூட இறங்கிட்டு நாளைக்கு மறுபடியும் ஏறி வந்துருங்க,…உடம்பு சரியானதும் என இரண்டு மூன்று முறை சொன்னேன். என்னால மறுபடியும் ஏற முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திரும்ப திரும்ப சிறுவர்களை ஆறுதல் படுத்துவதைப் போல நான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னேன். ஒரு கட்டம் அவரைக் கைதாங்கலாகப் படுக்கையிலிருந்து எழுப்பி அமர வைத்தேன். அபிநாஷிடம் இவரைத் தூக்கிச் சென்று விடுங்கள் என்று சொன்னதும் பழைய கம்பளியைக் கிழித்து அவருடைய இரு அண்டையிலும் கட்டி அவரின் கைகளை அதில் நுழைத்து  உப்புமூட்டை தூக்குவதைப் போல தூக்கிக் கொண்டு சரசரவென நடக்கத் தொடங்கினார். மழையிருள் சூழ்ந்ததைப் போல வெறித்திருந்த மேகத்தில் பனிப்போர்த்திய மலைகள் மட்டும் ஏகாந்தமாகத் தெரிந்தன. தூக்கம் கெட்ட இரவுடன் அன்றையப் பொழுது கழிந்தது.


வசந்தி
மறுநாள் காலையில் நவீன், கோகிலவாணி, யோகாம்பிகை, சிவலெட்சுமி என நால்வர் கொண்ட  இன்னொரு குழு சுரேஷுடன் வந்திருந்தனர். நான் அங்கு நன்கு ஆங்கிலம் தெரிந்த வழிகாட்டியான இந்திராவுடன் நேற்றே பேசத் தொடங்கியிருந்தேன். நேபாள இலக்கியத்தில் இளங்கலை பயின்றிருந்த இந்திராவின் அண்ணன்தான் இந்த நிறுவனத்தின் இணைத்தோற்றுநரான சின் தாப்பா. திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகச் சொன்னார். வேலை இல்லாத நேரங்களில் காட்மாண்டிலிருக்கும் தன்னுடைய உருளைக்கிழங்கு தோட்டத்தில் பணிபுரிவதாகச் சொன்னார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன்னுடைய குழந்தையை ஒரு நடுத்தரமான தனியார் பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து பத்து நிமிடத் தொலைவில் முழுமையாகப் பனி கரையாமல் இருக்கும் மேட்டுப்பகுதியில் படம் பிடிக்க அழைத்துச் சென்றேன். அங்கமர்ந்து ஆசைதீர பனிமனிதனை பனியில் உருட்டி உருட்டி விளையாடினேன். பனிப்பாறையிலமர்ந்து மனம் விரும்பியதைப் போல படங்களை எடுக்கச் செய்தேன். இங்கு நெடுநேரம் இருக்கமாட்டோம் என்பதால் பனியின் வெண்மை கண்களில் நெருடக் கூடாது என அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியைக் கழற்றி ஆசைதீர கண்களில் பனியை நிறைத்துக் கொண்டேன். கண்களில் நீர்த்துளி கோத்துக் கொள்ளத் தொடங்கியதும் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு நானும் இந்திராவும் மலையிலிருந்து கீழிறங்கி முகாமுக்குச் சென்றோம். 


அங்குச் சென்ற பின்னர்தான் தலையில் அணிந்திருந்த குல்லாவைப் பாறையின் கீழ் கழற்றி வைத்தது நினைவுக்கு வந்தது. மறுபடியும் அந்த இடத்திற்குச் சென்று இருமுறை தேடியும் குல்லா கிடைக்கவில்லை. அதை அன்னபூர்னா என்னிடமிருந்து எடுத்துக் கொண்டாள் என நினைத்துச் சமாதானம் செய்து கொண்டேன். நவீன் நான் முதலில் மேலேறி வந்ததை அறிந்ததும் மிக மகிழ்ச்சியடைந்தார். கோகிலா முன்னரே முதலில் ஏறிவிடுவீர்கள்தானே என ஒவ்வொரு சந்திப்பிலும் கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருந்தது. நவீன் எடுத்து வந்திருந்த வல்லினம் கொடியுடன் மலையுச்சியில் இரு படங்களை எடுத்துக் கொண்டோம். அந்த மலையுச்சிக்குப் பின்னால் புழுதி போல சேர்ந்திருப்பது நூறடிக்கும் மேலான தடிமனான பனிப்புழுதி, அதில் விழுந்தால் உள்ளே புதைந்து போவது நிச்சயம் என வழிகாட்டிகள் முன்னரே எச்சரித்திருந்தனர். கால்களில் கொஞ்சமாய் நடுக்கமிருந்தும் படமெடுக்கும் ஆர்வத்தில் கொஞ்சம் மறந்திருந்தோம். அதே பகுதியில், அன்னபூர்னா மலைப்பகுதியில் ஏறச் சென்று இறந்து போனவர்களின் நினைவாக எழுப்பப்பட்டிருந்த நினைவுத்தூணைப் பார்த்தேன். வெவ்வேறு நாட்டினர். இளவயதினர். ஏறச் சென்று மறைந்தவர்கள்; இறந்தவர்களின் படங்கள் பிறந்த ஆண்டுடன் குறிக்கப்பட்டு இருந்தது. எதிரில் உயர்ந்திருந்த பனிச்சிகரங்களையும் பின்புறத்தில் வால் சுழற்றி நின்றிருந்த மச்சபுச்சாரே மலையையும் பார்த்துக் கொண்டேன். மாயம் காட்டி நிற்கும் இயற்கையழகும் அதனழகில் தொலைந்து போனவர்களும் ஒருசேர நினைவிலெழுந்தனர். 




மலையேறிகளுக்கான நினைவுத்தூண்

அங்கே கொஞ்ச நேரமர்ந்து கதிரெழுகையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சூரிய உதயம் உண்மையில் சரியாகத் தெரியவில்லை. எல்லா நேரமும் வெளிச்சம் கொண்டிருப்பதைப் போலவே பனிச்சிகரங்கள் அமைந்திருந்தன. கொஞ்சம் உற்று கவனிக்கத் தொடங்கியதும் பனிச்சிகரங்களில் அலையலையாக சூரிய ஒளி படிவதைப் பார்க்க முடிந்தது. அதற்கருகில் மெல்லியப் புகைப்படலமாகத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் பனிப்பொறுக்குகள் கீழிறங்கி பனிப்புயலாக மாறுவதைப் பார்த்தேன். அதற்கருகில் இருப்பவர்களை அப்படியே பனியில் இழுத்துச் சென்று பள்ளத்தில் புதைத்து விடும் பேராற்றல் கொண்ட புயல் அழகாகத் தெரிந்தது. அன்னாப்பூர்னாவின் அழகு மாயம் நிறைந்ததுதான். மலையேறச் சென்று இறந்தவர்கள் உடல் பலவீனப்பட்டதால் மட்டும் இறந்திருக்க நியாயமில்லை. இயற்கையின் மாயத்தில் தங்களை மறைத்துக் கொண்டவர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடும் என நினைக்கிறேன். குழுவினர் கீழிறங்கத் தயாரானார்கள். சுரேஷ் எடுத்த காணொளியில் என்னுடைய அனுபவத்தை ஒட்டிப் பேசினேன். உடலும் மனமும் உரையாடுவதாக மலையேற்ற அனுபவம் அமைந்திருப்பதையும் சுமைத்தூக்கிகளின் அயராப்பணியையும் பற்றியும் சுருக்கமாகப் பேசிக் கீழிறங்கினேன். வழியெல்லாம், மறுபடியும் பனிமலைகளை ஆசைத்தீர பார்த்துக் கொண்டே நடந்தேன். வழியில் தென்பட்ட ஆற்றங்கரையில் நான் அடுக்கி வைத்திருந்த தட்டைக் கற்களில் மேலிரண்டு கற்கள் காற்றுக்குச் சரிந்திருந்தன. அதனைக் களைத்து விடலாம் என எண்ணமெழுந்தது. அதனையும் அன்னப்பூர்னாவே சரித்துக்கொள்வாள் எனத் தோன்றியது பயணத்தைத் தொடர்ந்தோம்.


சூரிய உதயம்

மச்சாபுச்சாரே முகாமில் நவீன் கடுமையான முதுகு வலியாக இருப்பதாகச் சொன்னார். முன்னரே முதுகு வலிக்காகச் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குச் சென்றிருந்தார். நான்காண்டுகளுக்குப் பின்னர், அதைப் போல கடும் வலியால் இறங்க சிரமப்பட்டார். இன்னும் டியுராலி முகாமிலிருந்தே வானூர்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், வேறு வழியின்றி இன்னும் சிரமப்பட்டு இறங்கினார். நாங்கள் அங்கிருந்து இன்னும் கொஞ்ச தூரம் இறங்கி மேல் டோபனில் அன்றைய நாள் பயணத்தை நிறைவு செய்தோம். அன்றைய முகாமில் தங்கியப் போதுதான் இரண்டரை நாட்களுக்குப் பின்னர் இணைய வசதி கிடைத்தது. ஈரச்சட்டையைக் கழற்றாமல் வீட்டில் உள்ளவர்களுக்குக் காணொளி அழைப்பு செய்து நலமாக இருப்பதையும் மலையை ஏறி இறங்கி கொண்டிருப்பதையும் சொன்னேன். அப்பொழுதுதான், மலையேறிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். 

அன்றைய நாள்தான், சுடுநீரில் குளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு கலன்களைக் கொண்டே நீரைச் சூடாக்கித் தருகிறார்கள். நானும் சுரேஷும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டோம். மேலே உங்களுக்கு ஏதாவது விசித்திரமான கனவு வந்ததா எனக் கேட்டார். நான் கண்களை மூடினால் அருவிகள் கொட்டுவதைச் சொன்னேன். உயரமான பகுதிகளில் தங்கும் போது விசித்திரமான கனவுகள் வருவது இயல்பு எனத் தன்னுடைய கனவைச் சொன்னார். எனக்கு அவ்வாறான கனவு இயல்பாகவே வந்திருக்கிறது. அன்றிரவு மேகி மீ அவித்து சூப் சாப்பிட்டேன். அந்த முகாம்க்கு அருகில் இருந்த சிறிய கொட்டகையில் சுமைத்தூக்கிகள் ஒன்றாக அமர்ந்து விறகுகளை எரித்துக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். சுமைத்தூக்கிகள் உள்ளூர் மக்கள் காய்ச்சும் ராக்சி எனப்படும் நொதிக்க வைக்கப்பட்ட சோளத்திலிருந்து காய்ச்சப்படும் சாராயத்தைப் பருகிக் கொண்டிருந்தனர். என்னிடமும் நீட்டினர். நான் மறுத்து விட்டேன். இந்திராவும் அங்கு அமர்ந்திருந்தார். நவீன் தான் அவரை இலக்கிய வாசகர் என அன்னப்பூர்னாவில் அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் ஹருகி முரகாமி போன்ற எழுத்தாளர்களை வாசித்திருக்கிறார். அவருடைய கதைகளில் பூனைகள் அதிகம் இடம்பெறும் காரணத்தைப் பேசிக் கொண்டோம். தனிமையின் அடையாளமாய் அவைக் கருதப்படுவதால் இருக்கலாம் என்றேன். வெளிநாட்டில் பணி புரியும் நேப்பாளிகளின் வாழ்க்கையை யாராவது எழுதியிருக்கிறார்களா எனக் கேட்டேன். தனக்கு தெரிந்து யாரும் அவ்வாறு எழுதவில்லை என்றார். அவரே ஐந்தாண்டுகள் தென் கொரியாவிலிருந்த பண்ணையில் பணியாற்றியிருக்கிறார். தென் கொரியாவில் அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் எந்த வேலையும் இயல்பாக நடைபெறாது என்றார். நீங்கள் ஏன் அதை எழுதக்கூடாது என்றேன். மெல்லிய புன்னகையுடன் இப்பொழுதுதான் வாசிக்கின்றேன். பிறகு எழுதலாம் என்றார். நேபாள மொழியில் எழுதும் சில எழுத்தாளர்களின் பெயர்களையும் முக்கியமான இலக்கிய ஆக்கங்களையும் என் கைப்பேசியில் தட்டச்சிட்டு காட்மாண்டில் தேடினால் புத்தகங்கள் கிடைக்குமென்றார். காலையில் விரைவில் எழுந்து கொண்டதால் உறங்கவேண்டுமென்றார். நானும் உறங்கச் சென்றேன். மறுபடியும் வெள்ளியலையாக அருவிகள் ஆர்பரித்துக் கொட்டுகின்றன. நடுவில் மச்சாபுச்சாரேவின் வால் முனை மிளிர்ந்து கொண்டிருந்தது. அதனைச் சுற்றிப் பார்க்கும் தொலைவே தூக்கம் நீண்டது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற