முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடலுக்கு அப்பால்; வாழ்வென்னும் சோர்வுக்கு அப்பால்

 

ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலை வாசித்தேன். மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஜப்பானியாராட்சிக் காலக்கட்டத்தில் எழுந்த சுபாஸ் சந்திரபோஸ் தோற்றுவித்த ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவம் உண்டாக்கிய எழுச்சி குறிப்பிடத்தக்கது. அதனை மையப்படுத்தித் தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நாவல்களாக இமயத்தியாகம், கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய நாவல்களைக் குறிப்பிட முடியும்.

கடலுக்கு அப்பால் நாவல் ஜப்பானியராட்சியின் வீழ்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. ஜப்பானியருடன் நல்லுறவைப் பேணிய இந்தியத் தேசிய ராணுவத்தினர் பர்மா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் சென்று இந்திய விடுதலையைப்  பெற்றுத் தந்துவிட வேண்டுமென முனைந்தனர். அந்தப் பயணத்தையும் அம்முயற்சியின் வீழ்ச்சியையும் இமயத்தியாகம் நாவல் பேசியது. அந்த முயற்சி தோல்வி கண்டதற்கு ஒருவகையில் ஜப்பானிய ராணுவத்தினரின் ஆதரவின்மையும் காரணமாக இருந்தது. கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் தொடங்குகிறது. அச்சமயத்தில் மலாயாவில் ஜப்பானியர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஜப்பானின் ராணுவக்கட்டமைப்பு சிதறியிருந்த சூழலை நன்கு பயன்படுத்தி சின் பெங் தலைமையிலான கம்யூனிஸ்டு இயக்கத்தினர் காட்டிலிருந்து வெளியேறி  மலாயாவின் பல பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போர் புரிந்து கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் இந்தியத் தேசிய ராணுவம் பர்மாவிலிருந்து பின்வாங்கி மலாயாவுக்குள் நுழைகிறது. மேடானிலிருந்த இ.தே.ராணுவத்தில் பணியாற்றிய கதையின் மையப்பாத்திரமான செல்லையா பினாங்கு திரும்புகிறான். தமிழர்களின் எழுச்சி வெள்ளமென திரண்டு அரசியல், போர் காரணங்களால் சிதறிப்போய் வடிந்து கொண்டிருக்கும் சோர்வு சூழல்தான் நாவலின் களம்.

பினாங்கில் வட்டித்தொழில் நடத்தி வரும் வயிரமுத்துப்பிள்ளையின் கடையில் அடுத்தாளாகப் பணியாற்றிய செல்லையா சுபாஸ் சந்திரபோஸால் ஈர்க்கப்பட்டு இ.தே.ராணுவத்தில் பங்கேற்ற தமிழர்களில் ஒருவன். இளமைத்துடிப்பும் உற்சாகமும் நிரம்பிய பருவத்தை இ.தேசிய ராணுவ பங்கேற்பு இன்னுமே முறுக்கேறச் செய்கிறது. செல்லையாவும் அவனுடைய ராணுவ நண்பர்களும் ஆயுதங்களைத் தாங்கி தலைமையின் அடுத்தக்கட்ட நகர்வுக்காகக் காத்திருக்கின்றனர். ராணுவத்தில் எதைக் குறித்தும் சிந்திக்காமல் உற்சாகமாக இருந்த பொழுதுகள் வடிந்து கொண்டிருக்கும் சோர்வும் அச்சமுமே செல்லையா தன் நண்பர்களுடனான உரையாடலில் வெளிப்படுகிறது. சுபாஸ் சந்திரபோஸ் இறந்துவிட்டார் எனத் தெரிகின்ற போது அவர்களின் எஞ்சிய உற்சாகமும் முற்றாக வடிகின்றது.  போஸின் மரணத்துக்கு ஜப்பானியர்களே காரணமென செல்லையா சினமடைகிறான். ஜப்பானியர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பு மையம் கொள்ளும் காரணப்புள்ளியாக போஸின் மரணச்செய்தி விளங்குகிறது. தம் தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் இடைமறிக்கும் ஜப்பானிய ராணுவத்தினருடன் பொருதிச் சிலரைக் கொல்கின்றனர். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், தம் தம் ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.

ராணுவப்பயிற்சி அளித்திருந்த மதர்ப்பு நிலை மாறி வட்டிக்கடையில் பணியாளராக மீண்டும் சேர்வதென்பது செல்லையாவுக்கு உள்ளூர சிரமமாக இருக்கிறது. ஆனால், முதலாளி மீதான விசுவாசம், முதலாளி மகள் மரகதம் மீது கொண்ட காதலால் வேறுவழியின்றிட் வேலையில் நீடிக்கிறான். ஆனால், போர்ச்சூழலில் ஈடுபட்ட அவனுடைய சாகசங்கள் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முதலாளியைக் கலங்கடிக்கிறது. அதனையே காரணமாகக் காட்டி அவனுக்குப் பெண் தரவும் வேலையில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளவும் மறுக்கிறார். மரகதத்துக்கும் செல்லையாவுக்குமான காதல் முறிகிறது. இந்தச் சூழல் செல்லையாவின் உற்சாகம், துடிப்பு எல்லாவற்றையும் குலைத்துப் போடுகிறது. போரின் முடிவில் உபரியாய் மனதில் எஞ்சிய உணர்வெழுச்சி அத்தனையும் கலைந்து காதல் பிரிவு ஏற்படுத்தும் துயர், வாழ்க்கைத் தடுமாற்றங்கள் ஏற்படுத்தும் அலைகழிவாக செல்லையா எனும் தனிமனிதனைக் கொண்டு போருக்குப் பிந்தைய வாழ்வை இந்நாவல் பேசுகிறது.

                                               இந்தியத் தேசிய ராணுவத்தினர்

ஜப்பானியர் மலாயாவைப் படையெடுத்துப் பெருநாசம் செய்தே கைபற்றுகின்றனர். அவர்கள் நடத்தும் குண்டுவெடிப்பில் வைரமுத்துப்பிள்ளையின் ஒரே ஆண்மகனுடன் பலரும் இறந்து போகின்றனர். அதற்குப் பிந்தைய ஜப்பானியரின் வெற்றி அணிவகுப்பில் உள்ளூர் மக்கள் ஆரவாரத்துடன் ஜப்பானியர்களை வரவேற்றத்தைப் பின்னாளில் ஜப்பானின் சரணடைதலுக்குப் பின் பிரிட்டன் வரவேற்புக்கூட்டச் சூழலுடன் ஒப்பீட்டுப் பார்த்துச் செல்லையா உணர்கிறான். மனிதர்கள் தாங்கள் அடையும் துயர்களை மறந்து சூழலுடன் ஒன்றி வரலாற்றில் முன்னகர்ந்து வரும் சிறிய காலக்கோட்டுச் சித்திரத்தைக் கடலுக்கு அப்பால் நாவல் காட்டுகிறது. இன்னொரு புறத்தில், எதை உயர்வானது மேன்மையானது என மனம் கொள்கின்ற உணர்வுகளும் மனநிலையும் கூட மனிதன் தன் அகந்தையால் உருவாக்கிக் கொள்வதே என செல்லையா உணர்கிறான்.  இவ்வாறாக மனம் அடையும் எல்லா அதீத உணர்வுநிலைகளும் ஒருகாலத்தில் பொருளில்லாதவையாக மாறுவதை வரலாற்றையும் சாட்சியாக வைத்து இந்நாவல் பேசுகிறது.

கடலுக்கு அப்பால் நாவலின் மாணிக்கம் பாத்திரம் எல்லா வகையிலும் விடுதலைக்கான வேட்கையை நாடுகின்றவனாக இருக்கிறான். மரகதத்துடனான காதல் கைகூடாமல் போனதால் வெறுமையும் ஆற்றாமையும் கொண்டு அலைகின்ற செல்லையாவுடன் மாணிக்கம் பண்டையத்தமிழ் இலக்கியங்களில் இருக்கும் வரிகளைக் கொண்டு செய்யும் இலக்கியத் தருக்கம் நவீன மனம் இலக்கியத்தை அணுகும் தர்க்க முறைகளில் ஒன்றாகவே காண முடிகிறது. பொதுவாகவே, மரபான தமிழ்ச் சூழலில் ஆண் பெண் உறவு சார்ந்து முன்வைக்கப்படும் கற்பு, லட்சிய காதல் ஆகிய விழுமியங்களைச் சிலப்பதிகாரம், தாயுமானவர் வரிகள், திருமந்திரம் ஆகியவற்றைக் கொண்டு கேள்வியெழுப்புகிறார். பொதுவாகவே இரண்டாம் உலகப்போர் இலட்சியவாத கருத்துகளின் மீதான சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஒருவகையில் தமிழ் மனச்சான்றாக மாணிக்கம் படைக்கப்பட்டிருக்கிறான். இலட்சியவாதம், வீரம் ஆகிய விழுமியங்களின் பிரதிநிதியாக இருக்கும் செல்லையா வாழ்வில் தடுமாறி கடவுள் நம்பிக்கை, வெறுமை எனச் சோர்ந்திருக்கும் போது அவனைச் சீண்டுகிறான். ஆனால், மாணிக்கம் விடுதலை வேட்கை மிகுந்தோறும் மனது அலைபாயும் வெறுமையின் ஆபத்தையும் உணர்ந்தவனாகவே இருக்கிறான்.  அதனாலே, அந்தப் பாத்திரம் சொல்லும் மிகப்புகழ்பெற்ற வரியான ‘’மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’’ என்ற வரி இடம்பெறுகிறது.

இந்த நாவல் வரலாற்று அடிப்படையில் மூன்று முக்கியச் சித்திரங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, பினாங்கு, மலாயாவின் பல பகுதிகள், பர்மா, மேடான் எனத் தென்கிழக்காசியாவின் பலபகுதிகளிலும் குடியேறி வட்டித்தொழில் புரிந்துவந்த செட்டியார்களின் வட்டிக்கடைகளின் கட்டமைப்பைப் பற்றியத் தெளிவை இந்நாவல் தருகிறது. இரண்டாவதாக, 1940களில் இருந்த ஜார்ஜ்டவுன் எனப்படும் பினாங்கின் தலைநகரத்தைப் பற்றிய விரிவான நிலக்காட்சி சித்தரிப்பு வரலாற்று ஆவணமாகவே கொள்ளத்தக்க வகையில் துல்லியத்துடன் அமைந்திருக்கிறது. மூன்றாவதாக, ஜப்பானியர் சரணடைவதற்கு முந்தைய இருவாரக்காலமாக மலாயாவில் நடைபெற்ற சம்பவங்களின் சித்தரிப்பு. ஜப்பானியர் சரணடைவதற்கு முந்தைய பகுதிகள் மலேசியாவில் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் எழுச்சி பெற்றிருந்த காலமென்பதால் சற்றே சாம்பல் நிறப்பகுதியாகத் தெளிவில்லாமலே சொல்லப்படுகிறது. இந்நாவல், அக்காலத்தில் இ.தே.ராணுவத்தமிழர்கள் எப்படி ஜப்பானியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்கொண்டார்கள் என்பதையும் சொல்கிறது. கம்யூனிஸ்டுகள் எவ்வாறு தமிழர்களுடன் இணைந்து கொள்வார்கள் என இணக்கப்போக்குடன் நடந்து கொண்டனர் என்பதை கம்யூனிஸ்டு இயக்கக் கேப்டன் லிம் கியு உணவும் பணமும் கொடுத்து உபசரித்ததிலிருந்து உணர முடிகிறது.



இந்த நாவலின் வாசிப்பனுபவம் அளிக்கும் வரலாற்றுச்சோர்வுக்கு நிகராகவே எழுத்தாளர் ப.சிங்காரத்தின் வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ளுந்தோறும் சோர்வும் துயரும் எழுகிறது. ஜப்பானியாராட்சிக்கு முன் மேடானுக்கு வந்து வட்டிக்கடையில் பணியாற்றியப் போது பெற்ற அனுபவங்களையே நாவலில் புனைவாக்கியிருக்கிறார். அத்துடன், மேடானில் திருமணம் புரிந்து முதற் பிரசவத்தின் போது மனைவியும் மகனும் இறந்தகாரணத்தால் வாழ்வு மீது கொண்ட சலிப்பினால் தனிமையால் வாழ்ந்து இறந்திருக்கின்றார். மேலும், தமிழிலக்கியத்துக்கு மிகப்பெரும் கொடைகளாகக் கருதப்படவேண்டிய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி என்ற இருநாவல்களையும் எழுதிப் பிரசுரிக்க எடுத்துக் கொண்ட சிரமங்கள் தந்த அவநம்பிக்கையால் எஞ்சிய காலமெல்லாம் இலக்கியத்திலிருந்து விலகியே இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் என்றென்றைக்கும் தமிழ் இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பையும் இடத்தையும் மறுக்க முடியாததாக இந்நாவல்கள் செய்திருக்கின்றன எனலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற