முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மானசரோவர் நாவல் வாசிப்பனுபவம்

 அசோகமித்திரனின் மானசரோவர் நாவலை வாசித்தேன். மான்சரோவர் புண்ணியத் தலங்களில் ஒன்று என்பதை அறிந்திருக்கிறேன். பனிமலைச்சிகரத்திலிருக்கும் தலத்துக்குச் சென்று புனித நீரில் தீர்த்தமாடுவதன் மூலம் செய்த தீவினைகள் கழியுமென்பது நம்பிக்கை. இப்படியாக மனித மனம் கொள்கின்ற சஞ்சலங்களுக்கான தீர்வினைச் சமயங்கள் குறிப்பிடவே செய்கின்றன.  மானசரோவர் நாவலும் மனம் அடைகின்ற சஞ்சலங்களாலும் குற்றவுணர்வுகளாலும் ஏற்படுகிற சுமைக்கான கழுவாயைத் தேடியலையும் இருவேறு பாத்திரங்கள் மேற்கொள்ளும் அகப்பயணத்தையே பேசுகிறது. 



நாவலின் மையப்பாத்திரமான கோபாலன் படத்தயாரிப்பு அரங்கத்தின் கதை இலாகாவில் பணியாற்றுகிறான். கலையிலக்கிய ஆர்வமிருந்தும் வாழ்க்கைத்தேவைக்காக இதழ்கள், படங்கள் என மாறி மாறி பணிபுரிகிறான். அந்தக் கலையிலக்கிய ஆர்வம் சினிமா என்னும் பெரும்புகழும் பணத்தையும் தரக்கூடிய ஊடகத்தில் சாத்தியமான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேற்கொள்ளக்கூடிய போலி முயற்சிகளை நிராகரிக்கச் செய்கிறது. அதன் விளைவாகக் குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது. இந்த ஊசலாட்டத்தில் மனைவி ஜம்பகத்துக்கு ஏற்படும் மனப்பிறழ்வு, மகனின் இறப்பு என மனம் அலைகழிகின்றது. இத்தனை அலைகழிவையும் உடனிருக்கும் யாருடனும் பகிர்ந்து கொள்ள அவன் அகம் ஒப்பவில்லை. அவனுடைய தன்னிலை விவரிப்புகளிலே கூட நிகழ்கின்ற சிக்கல்களை மனம் ஒன்றும் நடவாததைப் போலவே சொல்லிச் செல்கிறது. அவனைத் தேடித்தேடி வரும் நடிகன் சத்யன்குமாரிடம் கூட அதனை முழுவதுமாய் அவனால் சொல்லிவிடமுடியவில்லை. முன்னரே அறிமுகமாகியிருந்த சித்தரொருவரிடம் அடைக்கலமாகிறான்.

ஒன்றுபட்ட இந்தியாவின் பெஷாவாரில் பிறந்து பம்பாய்க்கு வந்து இந்திப்படங்களில் நடித்து யூசுப் எனும் சத்யன் குமார் புகழ்பெறுகிறான். நாட்டுப் பிரிவினையால் பிரிந்து போய்விட்ட பெற்றோர், இளவயது நினைவுகள், சினிமா நடிகர் வாழ்வின் போலியான ஆடம்பரங்களின் மீது யூசுப்புக்குச் சலிப்பிருக்கிறது. இலக்கிய ஆர்வமே கோபாலனையும் சத்யன் குமாரையும் ஒன்று சேர்க்கிறது. அவனுக்குமே மெஹபூப் எனப்படும் ஞானி மீது பற்றிருக்கிறது. அந்த ஞானிக்கும் கோபாலனுக்கும் ஒற்றுமை இருப்பதாகவே எண்ணுகிறான். அவனுடைய வீண் ஆடம்பர வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோபாலனுடன் இணக்கத்துடன் இருக்க அவனைத் தேடி நாவல் முழுதும் அலைகிறான். கோபாலனும் யூசுப்பும் தாங்கள் அகத்தைக் காட்டுகிற வகையில் இருவரின் தன்னிலை விவரிப்புகளில் நாவல் நகர்கிறது. இந்தப் பயணத்தின் ஊடேதான் அவர்களின் அகம் உள்ளூர என்னவாக இருக்கிறது, அது அணிந்து கொள்ளும் தோற்றங்களையும் கண்டு கொண்டு எல்லாமே களையும் புள்ளிக்குச் செல்கிறது.

ஜம்பகம் கோபாலனின் மீது சந்தேகம் கொண்டு அவனைக் கண்ட மாதிரியாக ஏசுகிறாள். குடும்பத்தை நிராதரவாய் விட்டுத் தன் போக்கில் சுற்றிக் கொண்டிருப்பவன் மீதாக உள்ளூர இருந்து வரும் சினம்தான் அப்படியாக வெளிப்படுகிறது. அதன் உச்சமாய், காய்ச்சலில் இருக்கும் மகனையும் தலையணையில் அழுத்திக் கொல்கிறாள். அவளின் மனம் அப்படி விகாரப்படுவதற்கு உள்ளூர கோபாலனும் காரணமாகவே இருந்திருக்கிறான். நடிகனாகி அதனால் பெரும் செல்வாக்கும், ஆடம்பரமான வாழ்வு கிடைத்தாலும் யூசுப்பால் அதில் மனம் ஒன்ற முடியவில்லை. அவை அத்தனையும் பொருளற்றவை என்றே எண்ணுகின்றான். இளவயதின் நினைவுகளும் பெற்றோர் பிரிவும் அப்படியாக அவனை உணரச் செய்கிறது. அந்தச் சலிப்பைக் கடக்க காமம், மது எல்லாவற்றிலும் திளைக்கிறான். எல்லாமே, அவன் மனம் எண்ணுகின்ற பொருளற்ற வாழ்வென்னும் எண்ணத்தையே மிகைப்படுத்துகின்றன. மனப்பிறழ்வுற்றிருக்கும் ஜம்பகத்துக்கும் அவனுக்குமான சந்திப்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாலியல் விழைவும் குற்றவுணர்வை அவனுக்குள் ஆழமாக ஏற்படுத்துகிறது.  இந்த இருபாத்திரமும் உணரும் வெறுமையும் குற்றவுணர்வுமே வாழ்வின் மீதான விமர்சனமாக நாவல் முழுதும் விரவிக்கிடக்கிறது. இந்த ஆழமற்ற வாழ்விலிருந்து விலகிப் பற்றிக் கொள்ளத்துடிக்கும் அனுபவம் சாத்தியப்படும் இடத்தையே இருவரும் தேடுகிறார்கள்.

 அசோகமித்திரன் சிறிய விவரிப்புகளிலே பாத்திரத்தைக் கோட்டுச்சித்திரமாக வரைந்து காட்டிவிடக்கூடியவர். மனப்பிறழ்வுற்ற ஜம்பகமும் ஒருகாலத்தில் கணவரின் துணையில்லாமல் நன்கு நிர்வாகம் புரிந்தவள். வீடு காலி செய்யும் போது வீட்டில் நிறைய பொருட்கள் சேர்ந்திருக்கின்றன. கணவனின் சினிமாதொடர்பும் கலையிலக்கிய ஆர்வமும் குடும்பத்துக்கு ஒன்றுமே சேர்க்கவில்லை. எல்லாமே சேர்ந்து அவனை ஒவ்வாமையுடன் சகித்து வாழச்செய்கிறது. அந்த உணர்வழுத்தமே மனப்பிறழ்வாக வெளிப்படுகிறது. கொடுமைக்கார கணவனிடம் இருந்து விலகி ஒலிப்பதிவு உதவியாளர் ராமநாதனின் வீட்டில் துணைநடிகை சியாமளா தன் கைக்குழந்தையுடன் அடைக்கலமாகிறாள். கோபாலனின் மகன் இறந்து மனைவி மனப்பிறழ்ந்த சூழலில் அவனுக்கு ஆதரவாய் அங்கு வருபவள் பிணம் கிடத்தப்பட்டிருக்கிற வீட்டில் மகனுக்குப் பாலூட்டுகிறாள். சிறிய விவரிப்புகளில் உயிர்ப்பான சித்திரிப்புகளை அசோகமித்திரன் அளிக்கிறார். நெருக்கடியில் இருந்தும் ஒன்றுமே நடக்காத்தைப் போல வெறுமையுற்றிருக்கும் கோபாலனின் அறிமுகமே கறவை மாட்டின் பாலில் கலந்திருக்கும் மடியில் இருக்கும் புண்ணிலிருந்து வடியும் ரத்தம் கலந்து வருவதைக் கண்டு ‘ இன்றாவது புண் ஆறியிருக்க வேண்டும்’ என்பதில்தான் தொடங்குகிறது.

வாழ்க்கையின் தருணங்களைத் தழுவி எடுக்கப்படும் சினிமா தொழிலின் நுணக்கத்தில் இருக்கும் சாரமின்மை நாவலில் பல இடங்களில் சொல்லப்படுகிறது. இந்திய சினிமா எப்படி உண்மையான வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தது என்பதை பொருத்தமில்லாத ஒப்பனை, மிகை நடிப்பு என மெல்லிய பகடியாக நாவல் முழுதும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். கரைந்த நிழல்கள் நாவலில் சினிமாவின் இன்னொரு முகத்தை இன்னுமே கூர்மையாக சித்திரித்திருப்பார்.

மானசரோவரில் குளித்து எழுந்தால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு. மனம் சுத்தமானால் போதாதா’ எனச் சித்தர் யூசுப்பைப் பார்த்து கேட்கிறார். எதிலும் ஆர்வ்மற்று அலைந்து கொண்டிருக்கும் கோபாலனின் வீட்டைப் பார்த்து அவனையும் அவனது குடும்பச் சிக்கலையும் உணர்ந்தவராக அவன் கன்னத்தில் அறைகிறார். மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற விழிப்பு ஏற்படுவதாக உணர்கிறான். வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே அதன் சாரமின்மையிலிருந்து வெளியேறிவிடவே இருவரும் அலைகின்றனர். ஆனால், அப்படி முற்றிலும் விலகி விட முடியாத சூழலிலே இருவரும் இருக்கின்றனர். அகத்தைக் கூர்ந்து சாத்தியத்துக்குட்பட்ட எல்லையில் அதனைச் சுத்தி செய்து கொண்டு வாழ்வில் நீடிக்க முடியுமென்ற நம்பிக்கையே மானசரோவர் நாவலின் தரிசனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...