முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பலவீனமான லட்சிய உருவகம்

எழுத்தாளர் கோ.முனியாண்டியின் ராமனின் நிறங்கள் (2010) நாவலை வாசித்தேன். எழுத்தாளர் கோ.முனியாண்டி மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில் புதுக்கவிதை மாநாடுகள் நடத்திய முன்னோடிகளில் ஒருவர். மேலும் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 


மலேசியாவில் 1950களிலே ரப்பருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட செம்பனைப்பயிர் 1980களில் தான் ரப்பருக்கு மாற்றாக அதிகளவில் பயிர் செய்யப்பட்டது. இதற்கிடையிலான காலக்கட்டத்தில், செம்பனைப்பயிர்கள் நல்ல விளைச்சலைத் தராததால் தோட்ட முதலாளிகள் செம்பனைப்பயிரை நடுவதில் தயக்கம் காட்டினர். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் தோட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Leslie Davidson என்பவர், மலேசியாவை ஒத்த தட்பவெப்ப நிலை கொண்ட கெமரூன் நாட்டில் செம்பனைப்பயிர் ஊட்டத்துடன் வளர்வதற்கான காரணத்தைக் கண்டறிய அந்நாட்டுக்குப் பயணப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இறுதியில், செம்பனைப்பயிரின் பூக்களில் கேமரூண் வீவல்ஸ் (Elaeidobius kamerunicus weevils) எனும் பூச்சியினம் நடத்தும் மகரந்தச்சேர்கையினாலே அதிக மகசூல் சாத்தியமாகிறதென்பதை அறிந்து அதனை மலேசியாவுக்கும் கொண்டு வருகிறார். இந்த ஆய்வுப்  பின்னணியை ரகுநாதன் என்ற லட்சிய மனிதனின் கனவாக மாற்றி அவனுடைய தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.2000க்கு மேல் மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியிலும் முக்கியமான பண்டமாக மாறியிருக்கும் செம்பனை எண்ணெயின் வளர்ச்சிக்குப் பின்னணியில் இருக்கும் இந்தக் கதை சுவாரசியமானதுதான்.


கேமரூன் வீவல் பூச்சி

 பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் பயிலும் ரகுநாதனின் நண்பன் ஹரி பெரிய கரும்பு தோட்ட நிர்வாகியான சஞ்சிவியின் மகன். தன்னுடன் பயிலும் தவமணியைக் காதலித்துக் குடும்ப எதிர்ப்பையும் மீறி திருமணம் பரிந்து கொள்கிறான் ரகுநாதன். தவமணி இறந்துவிடவே மகளை அழைத்துக் கொண்டு ஹரியின் தோட்டத்தில் பணியாற்ற செல்கிறான். அங்கு, ஹரியின் அக்காவான அழகு நிரம்பிய அனுசயா ரகுவைப் பார்த்தவுடன் காதலிக்கிறாள். ரகுநாதனின் மகளை அனுசயா தன் மகளாக வளர்க்கிறாள். தன் தோட்டத்தில் நடப்படும் செம்பனைப்பயிரின் மகசூலைக் கூட்ட கெமரூன் நாட்டுக்கு ரகுவை அனுப்பி வைக்கிறார். அங்கு ஆய்வு செய்த பின்னர், கெமரூன் வீவல்ஸ் பூச்சியின் மகரந்தச் சேர்க்கையைக் கண்டறிந்து அதனை மலேசியாவுக்கு எடுத்து வருகிறான். அனுசயாவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் சஞ்சீவி ஈடுபடுகிறார். தந்தையின் முயற்சியை முறியடித்து இவர்களின் லட்சியக்காதலை ஹரி சேர்த்து வைக்கிறான்.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ரகுநாதனை லட்சியப்புருசனாகக் காட்ட ஆசிரியர் முயல்கிறார். ஆனால், அந்தச் சித்திரிப்புகள் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றன. . நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற நாவலாசிரியர்கள் படைத்த லட்சிய கதைநாயகன்களின் சாயலில் குறைவுபட்ட அச்சாகவே ரகுநாதன் படைக்கப்பட்டிருக்கிறான் அழகும், அறிவும் நிரம்பிய ரகுநாதனை லட்சிய நாயகனாகக் காட்டுகிறார். இலட்சியம் என்பதைத் தான் நம்பிய இலக்கொன்றுக்காகச் சோராமல் உழைத்தல். அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தல் ஆகிய பொருள்களில் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். ரகசியக் காதலியான தவமணி வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமண ஏற்பாட்டை எதிர்த்து நஞ்சருந்துகிறாள். அவளின் காதலைப் புரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக வேதனைப்பட்டு அவளைத் திருமணம் செய்கிறான் ரகுநாதன். நண்பனின் வேண்டுகோளினால், அவன் தந்தையின் தோட்டத்தில் கடும் விசுவாசியைப் போல வேலை செய்கிறான். அவனைத் தொழிலாளியாக மட்டுமே நடத்தும் சஞ்சீவியை எதிர்க்காமல், அவருக்கு விசுவாசம் செலுத்துகிறான். இங்கும் தன் அழகுக்காகவும் அறிவுக்காகவும் மெச்சும் அனுசயாவின் காதல் தொந்திரவுகளால் காதல் வயப்பட்டுக் காதலிக்கிறான். இன்னொரு பக்கம், ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக நாவலாசிரியர் காட்டும் அவன் பெரும்பகுதி நேரம் தன் சொந்த வாழ்க்கைத் துயர்களிலும் குழப்பங்களும் மூழ்கியவனாகவே இருக்கிறான். இந்தப் பின்னணியில் இருக்கும் பலவீனமான இலட்சிய நாயகனைச் சராசரியான மனிதனாகவே எண்ண முடிகிறது.

அத்துடன், ஆய்வுகளில் ஈடுபடுவதாகச் சொல்லி காட்டப்படும் ரகுநாதன் ஈடுபடும் ஆய்வு நடைமுறைகளைக் காட்டுவதற்கான தகவல்களையும் நுட்பத்தையும் ஆசிரியர் தவறவிட்டிருக்கிறார் என்றே எண்ண முடிகிறது. ஆய்வு தொடர்பான சித்திரிப்புகளில், அது சார்ந்த சுருக்கங்களை மட்டுமே செய்திகளைப் போல சொல்லிச் செல்கிறார். செம்பனை நடவு சிக்கல்கள், அதன் பின்னணியில் நடக்கும் முயற்சிகள், ஆய்வுகள் என அனைத்திலும் செய்தித்தாளின் நடையில் சொல்லப்படும் சுருக்கங்களையே வாசிக்க முடிகிறது. கேமரூன் வீவல் எனும் பூச்சியினம்தான் செம்பனைப் பழங்கள் மிகுந்த சாரத்துடன் வளர்வதற்கான மகரந்தச் சேர்க்கை நடத்தியிருக்கிறது. அந்தப் பூச்சி எப்படி இருந்தது என்ற சித்திரிப்புகூட நாவலில் விரிவாக இல்லை. செம்பனைத்தோட்டம், கரும்பு தோட்டம் என நாவலில் வருகின்ற முக்கியமான களங்கள் கூட அந்தளவே மிகத்தட்டையாக விவரிக்கப்படுகிறது. கேமரூன் நாட்டுச் செம்பனைத் தோட்டத்தில் இருளில் தான் சிறுவயதில் படத்தில் கண்டே பயந்த செளகாட் சிறுத்தையை வேட்டையாடப்பட்டுச் செத்துக்கிடப்பதை ரகுநாதன் காண்கிறான். தன் கால்கள் அதன் மீது உரச உள்ளுக்குள் அதனைப் பற்றிய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறான். அதிலுமே, நினைவில் வைத்திருக்கும் தகவல்களையே நினைத்துப் பார்க்கிறான். அறியா நிலத்தில் இருளில் செத்துக்கிடக்கும் சிறுத்தையைத் தொட்டுப்பார்ப்பதென்பது பயமும் பரவசமும் அளிக்கும் நிகழ்வு. அதிலும் புனைவாசிரியன் தவறவிடக்கூடாத சித்திரிப்புடைய இடம். அதனைத் தகவல்களால் நிரப்பி எளிதில் ஆசிரியர் கடக்கிறார். இப்படியாக எந்த நுண்விவரணையிலும் கவனம் செலுத்தாமல் இந்நாவல் உருவாகியிருக்கிறது.

இந்த நாவலில் இருக்கும் இன்னொரு மிகப்பெரும் பலவீனமாய் கதையோட்டம் பயணப்படும் மிகையுணர்ச்சி இடங்களைச் சொல்லலாம். எல்லா பாத்திரங்களும் காதல், தியாகம், அன்பு, பிரிவு எல்லா இடங்களிலும் அழுகின்றனர். ரகுநாதனின் அழகுக்கும் அறிவுக்கும் தன்னையே கொடுக்கும் அபத்தமான முடிவை எடுக்கும் அனுசயா, தவமணி போன்ற பாத்திர வார்ப்பு அபத்தமாக இருக்கிறது. ரகுநாதனை லட்சிய மனிதனாகக் காட்டுவதை நியாயப்படுத்த அவனிடம் இல்லாத நற்குணங்களைக் கூட பெண்பாத்திரங்கள் மனதுக்குள் மறுகுவதும் விதந்தோதுவதும் சலிப்பூட்டுகின்றன. தங்களால் கூட கண்டுபிடிக்க முடியாத ஆய்வுண்மையை ரகுநாதன் கண்டறிந்ததாகத் துறைசார்ந்த வல்லுனர்கள்  விதந்தோதுவது, சாதாரணப் பொருளையே தரும் பேச்சுக்காக பாராட்டுமழை பொழியும் சித்திரிப்புகளை மிகையுணர்ச்சியின் வெளிப்பாடாகவே கடக்க முடிகிறது.

ரகுநாதனின் லட்சிய வார்ப்பில் பங்கெடுக்க வரும் துணைகளாகவே மற்ற பாத்திரங்களும் உணர்ச்சிகள், கருத்துகளின் பிரதிநிதிகளாகச் சாரமற்று படைக்கப்பட்டிருக்கின்றனர். மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர் தண்டாயுதம், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கு,பத்மாநாதன் என உண்மை பாத்திரங்கள் ரகுநாதனுக்கு ஆதரவும் அறிவுரையும் நல்கும் மனிதர்களாக நாவலுக்குள் வந்து செல்கின்றனர்.

இறுதியாக ராமனின் நிறங்கள் பேசுகின்ற பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய லட்சிய மனித உருவகம் என்பது ஒற்றைப்பார்வையில் ஒரு நிகழ்வை அணுகிப்பார்த்தலின் அபத்தமாகவே காணமுடிகிறது. செம்பனை மரம் மலேசியப்பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கையாற்றியிருக்கிறது. ஆனால்,ரப்பர் மரங்கள் அகற்றப்பட்டு அதிக தொழிலாளர்கள் தேவைபடாத செம்பனைப்பயிர்கள் நடப்பட்டதால் பல தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதன் பின்னணியில், அந்நிய நாட்டவர்கள் குறைந்த கூலிக்காக வேலைக்காக அமர்த்தப்பட்டனர். சமூக அடிப்படையில் மிகப்பெரும் மாறுதல்களைச் செம்பனைப்பயிரின் ஊடுருவல் நிகழ்த்தியது. கூடுதலாக, மலேசியா நெடுக தென்படும் செம்பனைத் தோட்டங்கள் ஒருவகையில் பசுமைப்பாலைவனங்களாக மாறி நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சி காட்டூயிர்களின் வாழ்விடம் பறிக்கப்பட்ட அழிவையும் நிகழ்த்தியிருக்கிறது. செம்பனையின் பெருக்கத்துக்குக் காரணமான ஆய்வுடன் தொடர்புடைய நாவலில் இந்தப் பின்னணியும் சொல்லப்படுவது அவசியமாகிறது. பொருளாதார வளத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடும் ரகுநாதனை லட்சிய மனிதனாகக் காட்டும் முனைப்பில்  இவையனைத்தையும் நாவலாசிரியர் தவறவிட்டிருக்கிறார் என்பதையே வாசித்ததும் உணரமுடிந்தது.



தான் நம்புகின்ற வழியில் இலக்கொன்றுக்காக உழைப்பவன் எதிர்கொள்ளும் தனிமனித, சமூகச்சிக்கல்களை சாதனையாளர்களின் வாழ்வில் படித்திருப்போம். அவற்றைக் கடந்து சென்று அவர்கள் அடையும் உயரமென்பது வெற்றியாகக்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பும் அவர்கள் பெற்றுக் கொண்ட தீராத நம்பிக்கையுமே அவர்களைச் சாதனையாளர்களாக காட்டுகிறது. அதனை ஒரு பாத்திரத்தின் சித்திரிப்பில் கொண்டுவர எல்லா சிக்கல்களையும் கடந்து நிற்கின்ற ஆற்றலை அவனுக்கு அளிக்க வேண்டியிருக்கிறயது.

லட்சிய மனிதன் என்பதை மற்ற பாத்திரங்களின் உரையாடல் வாயிலாகவும் நேரடிச்சித்திரிப்புகள் வாயிலாகவும் மட்டுமே நிறுவுகின்ற முயற்சியில் பலவீனமான படைப்பாகவே ராமனின் நிறங்கள் நாவல் வெளிவந்திருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...