முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரிவு நிரந்தரமல்ல நாவல் வாசிப்பனுபவம்

 

பிரிவு நிரந்தரமல்ல நாவல்

நாவலில் சொல்லப்படும் உணர்ச்சிகள், கதைகள் எல்லாமே வாசக அனுபவமாக ஆவதில்தான் அதன் ஏற்பு அமைந்திருக்கிறது. வாசகனுபவமாக ஆகாதவை நுண்மையான கதைச்சட்டகத்தைக் கொண்டிருந்தாலும் தேர்ந்த இலக்கியப்படைப்பாக மாறுவதில்லை. பிரிவு நிரந்தரமல்ல நாவல் வாசகனுபவமாக புனைவை மாற்றாமல் எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும் நாவலாகவே பார்க்க முடிகிறது.


2008 ஆம் ஆண்டு மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்தில் நாவல் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற நாவல் கி.சுப்ரமணியம் எழுதிய பிரிவு நிரந்தரமல்ல என்னும் நாவல். 1940களின் பிற்பகுதி தொடங்கி 1960கள் வரையில் மலேசியாவில் தலைமறைவு இயக்கமாய்ச் செயற்பட்டுவந்த கம்யுனிஸ்டு இயக்கத்தில் தீவிரமாய்ப் பங்கேற்கின்ற இளைஞனொருவனின் அனுபவங்களையே மையமிட்டே நாவல் அமைக்கப்படுகிறது. 1940 களின் இறுதியில் பகாவ் பகுதியில் இருக்கும் தோட்டமொன்றில் பணியாற்றும் பெருமாள் என்னும் இளைஞன் தோட்டத்தில் ஒடுக்குமுறை நிலவும் பணிச்சூழல், குறைந்த சம்பளம், அடக்குமுறைகள் காரணமாய்க் கம்யுனிஸ்டு இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறான். தன்னுடன் பிறந்த எழுவரில் மூத்தவளுக்குத் திருமணம் செய்விக்கின்ற வரையில் காத்திருந்து பின்னர் நேரடியாக காட்டுக்குள் பதுங்கி கம்யூனிஸ்டு போராளியாகிறான். அவனுக்கு ஆதர்சமாய் இருக்கும் அப்பளசாமி என்னும் கம்யூனிஸ போராளியின் வழிகாட்டுதலினால் காடுகளில் பதுங்கி  வெள்ளைக்கார ராணுவத்தையும் ஆதிக்கவர்க்கத்தினரான தோட்ட முதலாளிகள், துரைகளையும் தாக்குகின்றனர்.

தலைமறைவு வாழ்க்கையின் போது எதிர்கொள்ளும் துன்பங்களில் எல்லாம் தோட்டத்து வாழ்க்கையின் ஏக்கம், குடும்பத்தின் மீதான பாசம் ஆகிய உணர்வுகளால் தவிக்கிறான். அவனுடைய தவிப்பை ஈடு செய்யும் வண்ணம் தங்கையைச் சந்தித்து ஆறுதல் கூறி மற்றொரு தங்கை திருமணத்துக்கான பணத்தைத் தருகிறான். கம்யுனிஸ்டு இயக்கத்துக்குள்ளே சீனர், இந்தியர் என இனங்களுக்குள் செயல்படும் பிரிவு அரசியல், வன்முறை தாக்குதல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளினால் மனம் நொந்து போகிறான். இறுதியாக, காவ்ல்துறையால் பிடிக்கப்பட்டு ஆறாண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று திரும்பி வருகின்றவனின் நினைவோட்டமாகவே அவனுடைய கடந்தகால வாழ்வு சொல்லப்படுகிறது.

தோட்டத்துக்குத் திரும்பியவன் இனி எந்த சூழலிலும் அங்கிருந்து அகன்று போகக்கூடாத எண்ணத்துடன் குடும்பத்துடன் ஒன்றிணைவதாகக் கதை முடிகிறது.

பிரிவுகள் நிரந்தரமல்ல நாவலின் முதன்மையான பலமாக அதன் சரளமான கதையோட்டத்தையும் மொழியையும் குறிப்பிடவேண்டும். எங்குமே தடங்கலின்றி அடுத்தடுத்து நகரும் சம்பவங்களால் ஆன சித்திரிப்பென்பது நாவல் வாசிப்பை இடரின்றி கடக்க உதவுகிறது.கம்யூனிஸ்டுகள் காட்டில் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கையைப் பற்றிய சித்திரிப்புகளில் நுண்விவரணைகள் இல்லையென்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைமுறை, உணவு, தோற்றம், சூழல் ஆகியவற்றைப் பற்றிய பொதுவான சித்திரத்தையும் நாவலாசிரியர் தருகிறார்.

பத்துப் பிள்ளைகளுக்குத் தாயான பெருமாளின் தாய், பிள்ளைகளை அணைக்கும் போது அருகிருக்கும் போதும் லஜ்ஜையின்றி மார்பு குலுங்க அணைத்துக் கொள்கிறாள் என்பதை நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். மகன் வீட்டை விட்டு ஓடி கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தபின்னர் விசாரணை என்ற பெயரில் தோட்ட நிர்வாகமும் காவல்துறையும் கொடுக்கும் நெருக்குதலால் அவமானப்பட்டுக் கணவன் தற்கொலை புரிந்து கொள்கிறான். எஞ்சிய ஆறு குழந்தைகளையும் யாருடைய துணையுமின்றி தனியே உழைத்துக் காப்பாற்றுகிறாள். சிறையிலிருந்து விடுதலை பெற்று அம்மாவைப் பார்க்க வரும் மகனிடம் உடல் மீதான கட்டுப்பாடுடன் அம்மா நடந்து கொள்கிறாள். கைலியை இறுக்கக் கட்டி சட்டை பொத்தான்களைப் போட்டுக்கொண்டு மகனைத் திட்டி தாக்குகிறாள் என அதனைச் சித்திரிக்கிறார். இப்படியாக பாத்திரங்களுக்குள் ஏற்படும் அகவுணர்வு மாற்றங்களை வெளிப்படுத்தும் இடங்களைப் புனைவில் கொண்டு வந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் சித்திரிப்பிலே சொல்லிவிட்டுக் கதையை நகர்த்திவிடுவது இந்த நாவலைப் புனைவாகப் பலவீனப்படுத்துகிறது. கம்யூனிஸ்டு இயக்கம் நடத்தும் வன்முறைகள், இனப்பாகுபாடு, சீனர்களின் இயல்பு என எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாகக் கதைசொல்லியே குறிப்பிடுகிறான். அதனை வாசக அனுபவமாக மாற்றி அளிக்கும் சம்பவங்கள், உரையாடல்கள், சூழல் சித்திரிப்புகள் எதுவுமே இல்லாமல் நாவல் நகர்கிறது. அப்படிச் சொல்லப்படும் இடங்களில் கூட பாத்திரங்களைக் கொண்டு ஆசிரியர் தம் கருத்தை வெளிப்படுத்தும் இடங்களாகவே காண முடிகிறது. நாவல் வடிவம் தாம் காட்டும் வாழ்க்கையின் ஆழ அகலங்களுக்குள் விவாதம் செய்து ஒரு சாரத்தை வாசகன் முன்வைப்பது. அதற்கு ஒவ்வொரு பாத்திரமாகவும் ஒவ்வொரு சூழலுக்குள்ளும் பயணிக்கும் கற்பனையின் விரிவு ஆசிரியனுக்கு அவசியமாகிறது., கம்யூனிஸ்டு சித்தாந்தம் தலைமறைவு ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுக்கும் போது அதனால் கவர்ந்திழுக்கப்பட்டு வருபவர்கள் நாளடைவில் தங்களுக்குள் ஏற்படும் மனமாற்றத்தால் அடையும் துயரை நாவல் பேசுகிறது

ஆனால், அந்தத் துயர் எங்குமே அழுத்தமாய்க் கடத்தப்படவில்லை. கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஊடுருவலை மட்டுப்படுத்த கடுமையான உணவு பங்கீட்டு முறை செயற்படுத்தப்படுகிறது. மக்கள் உணவு வினியோகப் பங்கீட்டு முறையால் போதிய உணவின்றி வாடுகின்றனர் என்பதை கதைசொல்லி உணவுப்பொருட்களின் அளவு குறைப்பாட்டைக் கொண்டு நேரடியாய் விளக்க முற்படுகிறான். இப்படியாக அவர்களின் விடுதலைக்கு உதவுவதாய்ச் சொல்லப்படும் இயக்கத்தினால் பல இடர்களை அனுபவிக்கின்றனர்.

அதே மக்கள் கம்யூனிஸ்டு காலத்துக்கு வெகுமுன்னரே  வெள்ளைய முதலாளிகளாளும் கறுப்புத்துரைகள் என்றழைக்கப்படும் கிராணிகளும் கங்காணிகளாளும் சுரண்டவும் அடிமைப்படுத்தவும் செய்யப்படுகின்றனர். அவர்களை எதிர்க்கும் கம்யூனிஸ்டு இயக்கம் அளிக்கும் வசீகரத்தாலே பெருமாள் அதில் இணைகிறான். அங்கும் வன்முறையும் பாரப்பட்சமும் இருப்பதால் அங்கிருப்பதிலும் அவனுக்குச் சலிப்பேற்படுகிறது. இயக்கத்திலிருந்த போது கைது செய்யப்பட்டுக் கடுங்காவல் தண்டனை பெற்று தனிமைச்சிறை, கொடுந்தண்டனைகளை அனுபவிக்கிறான். அந்தத் தண்டனைகள் எல்லாம் முடிந்து குடும்பமே சிறந்த அமைப்பு என்ற முடிவுக்கு வருகிறான். அந்த முடிவை நாவல் தரிசனமாய் முன்வைப்பது குறுகிய மனநிலையின் வெளிப்பாடாகவே காணமுடிகிறது.

ஒப்புநோக்க கம்யூனிஸ்டு இயக்கத்துடனான வாழ்வில் இன்னும் கூடுதலான பணத்தையும் தனியான சிந்தனை புரியும் சுதந்திரம் அவனுக்குக் கூடுதலாக இருக்கிறது. பெருமாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தோட்டத்துக்கு வரும் போது சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தச் சூழலில் கம்யூனிஸ்டுகளுக்கு உணவுப்பொருட்கள் சேரக்கூடாதென்பதால் தோட்ட நிர்வாகம் முன்னரைக் காட்டிலும் கூடுதல் கெடுபிடியுடன் சோற்றைத் தானே ஆக்கிப் போடும் சூழலில்தான் தோட்டத்துக்கு அவன் வந்து சேர்கிறான். அவனது வருகையை முதலில் அம்மா எதிர்க்கிறாள். பின்னர், அம்மா ஏற்றுக்கொண்டாலும், அவனது தம்பி கண்ணையா அவனை மூன்றாமவனாகவே கருதி எதிர்க்கிறான். இந்தச் சூழலில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவர்களுடனே வாழ விரும்புவனின் அகம் மிக நொய்மையானதாக இருந்திருக்கும். அந்த நொய்மையை ஆசிரியர் சரியாக உருவாக்கவில்லை. அம்மாதிரியான குடும்பத்துடனான வாழ்வு தனிமனிதனுக்கான மீட்பு என்பதைப் போன்ற தொனியில் நாவல் அதனை முன்வைப்பதும் அபத்தமாய் இருக்கிறது.

எந்தச் சித்தாந்த தெளிவுமில்லாத சூழலில் முதலாளிகள் எதிர்ப்பு என்ற வசிகரத்தால் கம்யூனிஸ்டு இயக்கத்தில் இணைந்து இளமையையும் வாழ்வையும் தொலைத்துவிட்டவனின் கதையை ஆழமின்றி நாவல் அணுகுவதாகவே நாவல் வாசிப்பனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள முடிகிறது. இந்தக் குறைபாடுகளுடன் பார்க்கின்ற போது, கூறுமுறையில் தெளிவும் கம்யூனிஸ்டு வாழ்வின் மேலோட்டமான சித்திரத்தை முன்வைத்தவகையிலும் பிரிவு நிரந்தரமல்ல நாவல் முக்கியமானதாகவே படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...