முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏசுவின் பிறப்பு

 

பயண நினைவுகளில் சில தருணங்கள் நேரில் உணர்ந்ததைக் காட்டிலும் பின்னர் எண்ணிப்பார்க்கும் போது இன்னுமே விரிவானதாகத் தெரிகிறது. 2023 டிசம்பரில் நிகழ்ந்த முதல் இந்தியப்பயணம் பற்றி எழுத வேண்டுமெனப் பலநாட்களாக எண்ணம் இருந்தது. அதில் சில தருணங்களைப் பற்றி மட்டும் எழுதிப் பார்க்கிறேன். 

மலேசியாவுக்குத் திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன் தான் தஞ்சையிலிருந்து ரயிலிலே சென்னையை வந்தோம். சென்னையில் முதல் நாள், எழுத்தாளர் ம.நவீனின் தாரா நாவல் அறிமுகக்கூட்டம் நிகழ்ந்தது. அந்த நாவலை ம.நவீன் எழுதத் தொடங்கி பெயரிடுவதற்கான குறியை நேபாளத்தில் பெற்றது தொடங்கி முதல் பிரதியை வாசித்தது முதலாக உடனிருந்திருக்கிறேன். நிகழ்ச்சியில் பேசுவதற்கான குறிப்புகளை எழுத்தாளர் சு.வேணுகோபால் , நானும் நவீனும் தங்கியிருந்த விடுதி அறையில்தான் தயார் செய்தார். அறையை விட்டு எங்குமே அகலாமல் கையிலிருக்கும் புத்தகத்தை மல்லாந்தும் உட்கார்ந்தும் என மாறி மாறி வாசித்துக் கொண்டிருந்தார்.  கோவையில் விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரைச் சந்தித்திருந்தேன். என் பெயரை அரவிந்து…அரவிந்து எனச் சொல்லி அழைத்துப் பேசினார். விழாவின் இடையிலே ஆட்டோவில் நானும் லதாவும் அவர் அழைத்துப் போக கோவையின் பழைமைவாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குச் சென்றோம். அங்குத்தான் சிறையிலிருந்து வெளிவந்த வ.உ.சி தேங்காய் வியாபாரம் செய்தார் என வேணுகோபால் சொன்னார். வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்ததும் அடைந்த நலிவை கப்பலோட்டிய தமிழன் படத்தில் பார்த்திருக்கிறேன். அங்கு இப்பொழுதும் இருந்த பூக்கடைகள், பழக்கடைகளைப் பார்க்கும் போது ஏனோ சோகமாக இருந்தது. அன்றிரவே, நிகழ்ச்சி முடிந்து தொண்டாமுத்தூரில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று நாட்டாடு இறைச்சிக் குழம்பும் நாட்டுக்கோழிக் குழம்பையும் குலோப் ஜாமூனையும் கொடுத்து விருந்துபசாரம் செய்தார். நாங்கள் அங்கிருந்து விடைபெற்று திருச்சி, புதுக்கோட்டை என சோழநாட்டுக் கோவில்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். இடைப்பட்ட நாட்களில் சு.வேவின் உடல்நலம் கெட்டு மெல்ல சீரடைந்து வந்திருந்தார். அதனாலே கொஞ்சம் சோர்வுடன் இருந்தார். 


                                        தங்கும் விடுதி முன்னால்  சு.வே

அவரைத் தனியே விட்டு வெளியே செல்லும் திட்டம் நவீனுக்கு இல்லையென்பதால் நான் தனியாகச் செல்ல முடிவெடுத்தேன்.ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டு திருவொற்றியூரில் இருந்த பட்டினத்தார் சமாதிக்குச் சென்றேன். நவீன் தான் பரிந்துரைத்திருந்தார். மீன்பிடித் துறைமுகம், அடுக்குமாடிக் குடியிருப்புகள் எல்லாம் கொண்ட கடற்பகுதியில் ஏகாந்தமாய்ப் பட்டினத்தார் சந்நிதி இருந்தது. சமாதியின் முன்னிருந்த மணலில் நாய்கள் புரண்டு கொண்டிருந்தன. விடுமுறை நாளென்றாலும் ஆட்கல் குறைவாகவே இருந்தனர். சமாதியைச் சுற்றும் போது, காதற்ற ஊசியும் வாராது கடைகண் வழிக்கே என்ற பட்டினத்தார் பாடல் நினைவில் வந்தது. பட்டினத்தார் சமாதியில் சிறிய நினைவு மண்டபமும் அதற்குப் பின்னால் சிறிய பேய்க்கரும்பு கொல்லையும் இருந்தது.  பட்டினத்தார் மண்டபத்தில் அமர்ந்து,  துறவு பூண்டும் தாயின் சிதைக்கு எரிமூட்டச் சென்றபோது பட்டினத்தடிகள் பாடிய பாடலைக் கைப்பேசியில் தேடியெடுத்துப் படித்தேன். தத்துவப்பாரம் இல்லாமல் தாயின் பிரிவுத்துயரைப் பாடிப்பாடி ஆற்றிக் கொள்ளும் பாடல். மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளும் போது பாரம் அழுத்தி ஆசுவாசம் தந்தது.


                                                 பட்டினத்தார் சமாதி

 

 ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

பட்டினத்தார் பாடல்

மண்டபத்துக்கு வெளியே கதம்பச்சோற்று அன்னதானம் வழங்கப்பட்டது. சாம்பாரும், பட்டாணி குர்மாவும் சேர்ந்து மிகச் சிறப்பாக இருந்தது. அங்கிருந்து, ஆட்டோவிலே மெரினாவுக்குச் சென்றேன். எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால் வரிசையாகக் கட்சியினர் கொடிபிடித்து ஊர்வலமாய் வந்து கொண்டிருந்தனர். சிறுவயதில் எம்.ஜி.ஆரின் பாடல்களைப் பலமுறை கேட்டிருப்பதால் அங்கு ஒலிக்கப்பட்ட பாடல்கள் எல்லாவற்றையும் உடன் பாடிக்கொண்டே மெரினா கடற்கரை மணலில் நடந்து வந்தேன்.

                                                                   மெரினாவில் 

                                                                 எம் ஜி ஆர் சமாதி

மெரினாவிலிருந்து சில கிலோமீட்டர் சாலையிலே நடந்து சென்றேன். மூடம் தட்டியிருந்த வானத்தில் சென்னை எதோ நிறம் மங்கி தூசுப்படலத்துக்குள் இருப்பது போல தெரிந்தது. கண்ணுக்குத் தெரியாத ஊமைவெய்யிலின் தாக்கமும் இருந்தது. கடற்கரை வழிமுழுக்க இருந்த சிலைகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சேப்பாக்கம் மைதானம் வழியே நடந்து ஆட்டோவைப் பிடித்து விடுதிக்குச் சென்றேன். இன்னுமே, சு.வேணுகோபால் நாவலின் பாதிப்பக்கங்களைத் தாண்டி நிதானமாய் வாசித்துக் கொண்டிருந்தார்.

 



நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது கூட விடுதியில் வாங்கிய கூடுதல் தாளில் தேர்வு முடிய சில நிமிடங்கள் இருக்கும் பரபரப்பான நிமிடங்களில் கடைசி வரிகளை எழுதித் தள்ளும் மாணவனின் அவசரத்துடன் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி நடக்கும் கவிக்கோ மன்றத்துக்குச் செல்லத் தயாராகி நின்று கொண்டிருந்த ம.நவீன், வேணுகோபால் தயாராகுவதை மிகுந்த பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கில் கூட, சு.வேணுகோபாலின் உரைக்காகத் தேர்வு முடிவுகள் காத்திருப்பதைப் போல நிலைகொள்ளாமலே இருந்தார். ஆனால், நிகழ்ச்சியில் வேணுகோபால் பேசிய உரை அரை நாளில் தயாராகியதைப் போல தெரியவில்லை.

நாவலின் களம் , உளவியல் ஆழம் என ஒன்றையும் விடாமல் தொகுத்துப் பேசினார். உறை நீங்கிய குத்து வாளின் பிடியைப் போல நாவலில் ஒரிடத்தை ம.நவீன் தொட்டுக்காட்டினார் எனச் சொல்லக் கேட்டதும் சிலிர்ப்பு எழுந்துவிட்டது. எழுத்தாளன் பயணிக்கும் அக ஆழமென்பது வியப்பூட்டுவது என்பதை நேரில் உணர்ந்த தருணமது.மேடையிலிருந்து இறங்கியவரிடம் நானும் எழுத்தாளர் லதா, ம.நவீன் எல்லாருமே அவரின் வழக்கமான உரைகளில் இடம்பெறும் ‘அதாவது’ இந்த உரையில் இல்லாமல் போய்விட்டது என வேடிக்கையாகச்  சொன்னோம். தனக்குள்ளே வியந்து சிரித்துக் கொண்டார்.

 சென்னையில் இன்னும் ஒருநாள்தான் இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் வந்ததும் நான் மட்டும் தனியாகக் கிளம்பி டிடிகே சாலையின் இரவு முகத்தைத் தரிசிக்க சென்று விட்டேன்.  விடுதிக்கு முன்னால் இருந்த பெரிய தேவாலயம், மறுநாள் பிறக்கும் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேராக, தேவாலயத்துக்குள் நுழைந்து முன்வரிசையில் பைபிள் வைக்கப்பட்டிருந்த மனைப்பலகையின் முன்னே உட்கார்ந்து கொண்டேன்.  மேற்கூரையிலிருந்த நீலம் பச்சையும் கொண்ட கண்ணாடிகளில் ஒளிப்பட்டு எழுந்த வெளிச்சம் சிலுவைத் தாங்கிய ஏசுவின் மீது பட்டுக் கொண்டிருந்தது.  கைகளால் சிலுவைக்குறி செய்து டிடிகே சாலைக்கு எதிர்புறம் இருந்த சாலையில் நடக்கச் சென்றேன். சாலையோரத்தில் மாதுளம், வாழைப்பழம் எனக் கூவிக்கூவிப் பழம் விற்றுக் கொண்டிருந்த பழக்கடைகள், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாடுகள், சாலையைக் கடந்து கொண்டிருந்த நாய்கள் எனச் சாலையில் மனித நடமாட்டம் குறைவாகவே இருந்தது.





                                                      ஏசுவின் பிறப்பு

அந்தச் சாலையின் ஓரத்தில் இரு குடிசைப்பகுதிகள் தெரிந்தன. உள்ளே அடியெடுத்து வைக்கும் முன்னரே நாய்கள் குரைக்கத் தொடங்கியதால் தயங்கி பின்னகர்ந்து விட்டேன். ஒரு குடிசைப் பகுதிக்கு முன்னால் குழந்தை ஏசுவைத் தாங்கிய மேரிமாதா சிலைக்கு முன்னால் வைக்கோல் பரப்பி பிளாஸ்டிக் மாடுகள் மத்தியில் ஏசு பிறப்புச் சூழலைச் சிறுவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தனர். பன்னிரண்டு மணி நெருங்கும் வேளையில் சிறப்பு வழிபாடுகளுக்காகத் தேவாலயத்தில் மணி ஒலிக்கப்பட்டது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஏசுவின் பிறப்பை வரவேற்றார்கள். இன்னொரு சிலுவைக்குறியைப் போட்டு விடுதி அறைக்குச் சென்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...