விஷ்ணுபுரம் விருது விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனைச் சந்தித்தோம். விஷ்ணுபுரம் அமைப்பினர் வழங்கும் அறிவுசார் பங்களிப்பாற்றிய ஆய்வாளர்களுக்கான தூரன் விருதை 2023 ஆம் ஆண்டு பெற்றிருந்தார். தமிழறிஞர்கள் பலரையும் நேரில் சந்தித்தும் அவர்களின் குடும்பத்தினர், ஊரார், நண்பர்கள் எனப் பலரைச் சந்தித்தும் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்த அரிய பணியை அவர் செய்திருக்கிறார். மலேசியாவுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு இங்குள்ள தமிழறிஞர்களின் வாழ்வையும் தொகுத்திருக்கிறார்.
https://muelangovan.blogspot.com/ பேராசிரியர் இளங்கோவனின் வலைப்பக்கம்
நானும் நவீனும் செல்ல விரும்பிய தஞ்சைப் பயணத்துக்குச் சில உதவிகளைச் செய்தார். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் காண எங்களை அழைத்துச் சென்றார். சிறுவயதில் அவர் பார்த்த கங்கை கொண்ட சோழபுரக் கோவிலுக்கருகில் இருந்த புதர்காடுகள் பின்னர் சீரமைக்கப்பட்டதாகச் சொன்னார். அந்தி சாயும் நேரத்தில் சென்றிருந்ததால், இருள் கவிவதற்குள் மொத்த கோவிலையும் விரைவாகப் பார்த்துவிடவேண்டுமென விரைவாகவே சுற்றிவந்தோம். கோவிலுக்கு வெளியே இடப்புறத்தில் இருந்த வீடுகள்தான் கோவில் தேவதாசிகள், ஓதுவார்களின் குடியிருப்பாக இருந்தது. இப்பொழுது அவர்களின் வழித்தோன்றல்கள் வாழ்கின்றனர். ஆண்டுக்கொரு முறை ஒன்றுகூடி கோவிலில் பந்தலமைத்து விழா நடத்துவார்கள் என்றார்.
கங்கை கொண்ட சோழபுரம்தேவதாசிகள் அல்லது
தேவரடியார்கள் என்பவர்களைப் பற்றி கல்லூரிக் காலத்தில் விரிவுரைஞர் தமிழ்மாறன் சொல்லித்தான்
தெரியவந்தது. தேவரடியார் என்பது எப்படி வசவு சொல்லாக மாறியது என்பதைக் கோபமும் ஆற்றாமையும்
பொங்க தமிழ்மாறன் சொன்னது நன்கு நினைவில் இருக்கிறது. அந்த வசவுச்சொல்லைப் பின்னாளில்
கேட்கும் போதெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பின்னணியில் இருக்கும் வரலாற்றை நினைத்துக்
கொள்வேன். கோவையிலிருந்து தஞ்சைக்கு வரும் பயணம் மிக நீண்டதாக இருந்தது. வழியில் இருந்த
ஊர்ப்பெயர்கள், கோவில்கள் ஒட்டி எதாவது ஒரு செய்தியை ஜி.எஸ்.எஸ்.வி நவீன் சொல்ல ம.நவீனும்
நானும் கேட்டு வந்தோம். எதோ ஒர் ஊரினைக் கடக்கும் இரவு பொழுதில் , ஜி.எஸ்.எஸ்.வி நவீன்,
தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதால் அவர்கள் பேணி வந்த கலைகள் எப்படி
தடம் தெரியாமல் அழிந்தன என்பதைப் பற்றிச் சொன்னார். தேவரடியார் முறைக்குப் பின்னால்
இருந்த சுரண்டல், சமூகப்பார்வை ஆகியவற்றுக்கு அப்பால் அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் கோவிலுக்கும்
உரித்தானதாக இருந்த சில கலைகளின் பேணுநர்களாக இருந்தனர். தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு
அவர்கள் பொதுச்சமூகத்தின் அங்கமான போது கலைகள் பேணுநரின்றி அழிந்து போனது. பொதுச்சமூகத்துடன்
இணைய முடியாமல் பொருளாதார அடிப்படையில் சீரழிந்தனர். தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக
இருந்த அவிநாசி லிங்கம் செட்டியார், தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின்
வசமிருக்கும் கலைச்செல்வங்கள் பாதுகாக்கப்படுவதையும் பொதுச்சமூகத்துடன் அவர்கள் இணைவதற்கான
சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு சொன்னார் என்றும் ஜி.எஸ்.எஸ் வி நவீன் சொன்னார்.
ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தி அல்லது சுரண்டலுக்கு ஆளாக்கித்தான் கலைகளை வளர்க்க வேண்டிய
அவசியம் இல்லை; காலமே எவை தங்கும் என்பதை முடிவு செய்யும் என எழுத்தாளர் ம.நவீன் சொன்னார்.
எனக்கும் அந்தக் கருத்து உடன்பாடாகவே இருந்தது.
தஞ்சைக்குச் சென்றிருந்த போது தஞ்சை பெரிய கோவிலைச் சென்று
கண்டோம். கோவிலுக்கு வெளியே இருந்த வெளிச்சுற்றுச்சுவரை
ஒட்டியிருந்த அறைகளில்தான் தேவதாசிக்கள் வாழ்ந்தார்கள் எனத் தான் வாசித்திருந்ததாக
நவீன் சொன்னார். வெளியே மழை பெய்து கொண்டிருந்ததால்,
அறைகளுக்கு வெளியே இருந்த நடைபாதைத் தூண்களில் அமர்ந்து கொண்டோம். அங்கிருந்து பார்க்கையில்,
செந்நிறத்தில் பிரம்மாண்டமாய் கோவில் காட்சியளித்தது. அந்த அறைகளில் இப்பொழுது வைக்கப்பட்டிருக்கும்
சந்நிதிகளிலிருந்து எலிகள் இங்குமங்குமாய் ஒடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் மராட்டியர்
காலத்து ஓவியங்கள் இருந்தன. அதற்கு வெளியே சிறைக்கதவுகள் போல இரும்புக்கதவுகள் இருந்தன.
ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தேன். மன்னராட்சிக் காலத்தில் அரசு மானியங்களுடன் பீடுற வாழ்ந்தனர்
என்றே வாசித்திருக்கிறேன். அத்தகைய காலத்தில் எழுப்பப்பட்ட அறைகளில் வாழ்ந்தவர்கள்
பின்னாளில் காலனித்துவத்தின் வருகையால் ஜமீந்தாரிகள், நில உடைமையாளர்களை நத்திப் பிழைக்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு கோவிலின் வரலாறு, பண்பாட்டுப் பின்னணியுடன் தொடர்புடைய
தனித்த கலைகளைப் பேணி இறைச்சேவை புரிந்து கொண்டிருந்தவர்கள் கால மாற்றத்தால் அதற்குள்
சிறை போன வரலாற்றை நினைவுறுத்துவதாகவே அந்த இரும்புக்கதவுகளைப் பார்த்து வந்தேன். அந்த
இரும்புக்கதவுகளுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கிறது.
பி.குறிப்பு ;- நீலி இதழில் எழுத்தாளர் சுசித்ராவின் ஒரு தலைமுறையின் விதி என்னும் கட்டுரை தேவதாசிகளின் வாழ்வை கலை, கலைஞர்கள், வாழ்வு, கால மாற்றம் எனும் விரிவான பின்னணியில் ஆராய்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக