முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறைபட்ட கலை

 

விஷ்ணுபுரம் விருது விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனைச் சந்தித்தோம். விஷ்ணுபுரம் அமைப்பினர் வழங்கும் அறிவுசார் பங்களிப்பாற்றிய ஆய்வாளர்களுக்கான தூரன் விருதை 2023 ஆம் ஆண்டு பெற்றிருந்தார். தமிழறிஞர்கள் பலரையும் நேரில் சந்தித்தும் அவர்களின் குடும்பத்தினர், ஊரார், நண்பர்கள் எனப் பலரைச் சந்தித்தும் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்த அரிய பணியை அவர் செய்திருக்கிறார். மலேசியாவுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு இங்குள்ள தமிழறிஞர்களின் வாழ்வையும் தொகுத்திருக்கிறார். 

https://muelangovan.blogspot.com/ பேராசிரியர் இளங்கோவனின் வலைப்பக்கம்

நானும் நவீனும் செல்ல விரும்பிய தஞ்சைப் பயணத்துக்குச் சில உதவிகளைச் செய்தார். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் காண எங்களை அழைத்துச் சென்றார். சிறுவயதில் அவர் பார்த்த கங்கை கொண்ட சோழபுரக் கோவிலுக்கருகில் இருந்த புதர்காடுகள் பின்னர் சீரமைக்கப்பட்டதாகச் சொன்னார்.  அந்தி சாயும் நேரத்தில் சென்றிருந்ததால், இருள் கவிவதற்குள் மொத்த கோவிலையும் விரைவாகப் பார்த்துவிடவேண்டுமென விரைவாகவே சுற்றிவந்தோம். கோவிலுக்கு வெளியே இடப்புறத்தில் இருந்த வீடுகள்தான் கோவில் தேவதாசிகள், ஓதுவார்களின் குடியிருப்பாக இருந்தது. இப்பொழுது அவர்களின் வழித்தோன்றல்கள் வாழ்கின்றனர். ஆண்டுக்கொரு முறை ஒன்றுகூடி கோவிலில் பந்தலமைத்து விழா நடத்துவார்கள் என்றார். 

                                                    கங்கை கொண்ட சோழபுரம்


தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் என்பவர்களைப் பற்றி கல்லூரிக் காலத்தில் விரிவுரைஞர் தமிழ்மாறன் சொல்லித்தான் தெரியவந்தது. தேவரடியார் என்பது எப்படி வசவு சொல்லாக மாறியது என்பதைக் கோபமும் ஆற்றாமையும் பொங்க தமிழ்மாறன் சொன்னது நன்கு நினைவில் இருக்கிறது. அந்த வசவுச்சொல்லைப் பின்னாளில் கேட்கும் போதெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பின்னணியில் இருக்கும் வரலாற்றை நினைத்துக் கொள்வேன். கோவையிலிருந்து தஞ்சைக்கு வரும் பயணம் மிக நீண்டதாக இருந்தது. வழியில் இருந்த ஊர்ப்பெயர்கள், கோவில்கள் ஒட்டி எதாவது ஒரு செய்தியை ஜி.எஸ்.எஸ்.வி நவீன் சொல்ல ம.நவீனும் நானும் கேட்டு வந்தோம். எதோ ஒர் ஊரினைக் கடக்கும் இரவு பொழுதில் , ஜி.எஸ்.எஸ்.வி நவீன், தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதால் அவர்கள் பேணி வந்த கலைகள் எப்படி தடம் தெரியாமல் அழிந்தன என்பதைப் பற்றிச் சொன்னார். தேவரடியார் முறைக்குப் பின்னால் இருந்த சுரண்டல், சமூகப்பார்வை ஆகியவற்றுக்கு அப்பால் அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் கோவிலுக்கும் உரித்தானதாக இருந்த சில கலைகளின் பேணுநர்களாக இருந்தனர். தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் பொதுச்சமூகத்தின் அங்கமான போது கலைகள் பேணுநரின்றி அழிந்து போனது. பொதுச்சமூகத்துடன் இணைய முடியாமல் பொருளாதார அடிப்படையில் சீரழிந்தனர். தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த அவிநாசி லிங்கம் செட்டியார், தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் வசமிருக்கும் கலைச்செல்வங்கள் பாதுகாக்கப்படுவதையும் பொதுச்சமூகத்துடன் அவர்கள் இணைவதற்கான சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு சொன்னார் என்றும் ஜி.எஸ்.எஸ் வி நவீன் சொன்னார். ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தி அல்லது சுரண்டலுக்கு ஆளாக்கித்தான் கலைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை; காலமே எவை தங்கும் என்பதை முடிவு செய்யும் என எழுத்தாளர் ம.நவீன் சொன்னார்.  எனக்கும் அந்தக் கருத்து உடன்பாடாகவே இருந்தது.

தஞ்சைக்குச் சென்றிருந்த போது தஞ்சை பெரிய கோவிலைச் சென்று கண்டோம்.  கோவிலுக்கு வெளியே இருந்த வெளிச்சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த அறைகளில்தான் தேவதாசிக்கள் வாழ்ந்தார்கள் எனத் தான் வாசித்திருந்ததாக நவீன் சொன்னார்.  வெளியே மழை பெய்து கொண்டிருந்ததால், அறைகளுக்கு வெளியே இருந்த நடைபாதைத் தூண்களில் அமர்ந்து கொண்டோம். அங்கிருந்து பார்க்கையில், செந்நிறத்தில் பிரம்மாண்டமாய் கோவில் காட்சியளித்தது. அந்த அறைகளில் இப்பொழுது வைக்கப்பட்டிருக்கும் சந்நிதிகளிலிருந்து எலிகள் இங்குமங்குமாய் ஒடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் மராட்டியர் காலத்து ஓவியங்கள் இருந்தன. அதற்கு வெளியே சிறைக்கதவுகள் போல இரும்புக்கதவுகள் இருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தேன். மன்னராட்சிக் காலத்தில் அரசு மானியங்களுடன் பீடுற வாழ்ந்தனர் என்றே வாசித்திருக்கிறேன். அத்தகைய காலத்தில் எழுப்பப்பட்ட அறைகளில் வாழ்ந்தவர்கள் பின்னாளில் காலனித்துவத்தின் வருகையால் ஜமீந்தாரிகள், நில உடைமையாளர்களை நத்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு கோவிலின் வரலாறு, பண்பாட்டுப் பின்னணியுடன் தொடர்புடைய தனித்த கலைகளைப் பேணி இறைச்சேவை புரிந்து கொண்டிருந்தவர்கள் கால மாற்றத்தால் அதற்குள் சிறை போன வரலாற்றை நினைவுறுத்துவதாகவே அந்த இரும்புக்கதவுகளைப் பார்த்து வந்தேன். அந்த இரும்புக்கதவுகளுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கிறது.

                           சுற்றுச்சுவர் அறைகளிலிருந்து தஞ்சைக்கோவில்

பி.குறிப்பு ;- நீலி இதழில் எழுத்தாளர் சுசித்ராவின் ஒரு தலைமுறையின் விதி என்னும் கட்டுரை  தேவதாசிகளின் வாழ்வை கலை, கலைஞர்கள், வாழ்வு, கால மாற்றம் எனும் விரிவான பின்னணியில் ஆராய்கிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...