முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

நினைவுச்சின்னம் நாவல் வாசிப்பனுபவம்

அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவலை வாசித்தேன். மலாயாவில் நிகழ்ந்த ஜப்பானியப் படையெடுப்பின் போது பர்மாவுக்கும் சயாம் (தாய்லாந்து) இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 1942 இல் தொடங்கிய பணிகள் 1944 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய பதினான்கு மாதங்கள் நீண்டன. முறையான உணவு, இட, சுகாதார வசதியின்றி ரயில் பாதை அமைக்க அழைத்துச் செல்லப்பட்ட மலாயாத் தமிழர்கள், ஆங்கிலேயப் போர்க்கைதிகள் உட்பட நூறாயிரத்துக்கும் அதிகமானோர் நோய்களாலும் ஜப்பானியரின் அடக்குமுறையான பணிச்சூழலாலும் இறந்து போயினர். இந்தக் கொடும் வரலாற்றை மையப்படுத்தியே ரெங்கசாமி நினைவுச்சின்னம் நாவலை எழுதியிருக்கிறார்.

சிலாங்கூரில் இருக்கும் புரூக்லேன்ஸ் தோட்டத்தில் இருந்து ரயில் கட்டுமானப்பணிக்கு அழைத்துச் செல்லப்படும் 30 தொழிலாளர்கள் கொண்ட குழுவொன்றே நாவலில் முதன்மையாக இடம்பெறுகிறது. அந்தக் குழுவில் உடல் வலிமையும் துணிவும் மிக்க இளைஞனான இடும்பனே நாவலின் நாயகன். அந்த 30 தொழிலாளர்களும் கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் திறந்த வெளி சரக்கு ரயில் வண்டிகளில் சியாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 15 பேர் மட்டுமே அமர முடிந்த ரயில் வண்டியில் 30 தொழிலாளர்கள் நெருக்கியடித்துப் பயணம் செய்கின்றனர். தோட்டத்து கங்காணியான காடப்பன், காவல்காரர் கந்தன், வெத்தியப்பன், வெள்ளையம்மாள், பரட்டையன், பாஞ்சாலை, தொப்ளான், கூளையன், சொக்கன் இப்படியாக 30 பேர் அந்த பயணத்தில் இணைந்திருக்கின்றனர். ரயில் பயணத்தின் போதே நோய்களால் ஒவ்வொருவராக இறக்கத் தொடங்குகின்றனர். சயாமுக்குச் சென்று சேர்ந்த பின்னால், காட்டுப் பகுதியில் தண்டவாள இரும்புகளைத் தூக்கிக் கொண்டு போம் போங் எனும் இடத்திற்கு நடந்து செல்கின்றனர். மூங்கில் கட்டுமானத்தால் ஆன திறந்தவெளிக் குடியிருப்புகள் (பூத்தாய்கள்) மோசமான உணவுகள், அடிப்படை வசதிகள் இன்மை, அடக்குமுறையான பணிச்சூழலில் ஒவ்வொருவராக இறக்கின்றனர். நாவலின் பெரும்பகுதியென்பதே அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தொழிலாளர்களின் உயிரை எவ்வாறு காவு வாங்கிறதென்பதன் சித்திரமே. அடுத்தடுத்து மரணங்களும் இழப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் கொடும் சூழலுக்குப் பழகிப் போன தொழிலாளர்கள் போர் முடிந்து ஜப்பானியர்கள் சரணடைந்தபின் மலாயாவுக்குத் திரும்புகின்றனர்.



ரெங்கசாமியின் நாவல்களின் அடிப்படையான பலமென்பதே அவரின் விரிவான தேடலிலும் முயற்சியாலும் திரட்டிய தகவல்களும் நேரடி அனுபவப்பதிவுகளும்தான். அறிந்த வரலாற்றைச் சட்டகமாக்கி அதற்குள் தான் பெற்ற கேட்ட பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் சம்பவங்களாகக் கோர்த்துச் சொல்லும் நுட்பம் ரெங்கசாமிக்கு வாய்த்திருக்கிறது. ஜப்பானிய படை கைபற்றிய மலாயாவின் அடிப்படைக் கட்டமைப்புகளான சாலை வசதி, நீர், தொடர்பு வசதிகள் ஆகியவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் தகர்த்தெறியப்பட்டிருந்தது. தோட்டங்களிலும் பணிகள் முடங்கியிருந்த சூழலில்தான் ஜப்பானியர்கள் ரயில் பாதை அமைப்புக்காக நாடு முழுவதும் தமிழர்களைக் கட்டாயப்படுத்தியும் நாள் கூலியைச் சொல்லியும் திரட்டுகிறார்கள். அவ்வாறாகத் திரட்டப்பட்ட தமிழர்கள் ரயிலேறி சியாமுக்குச் சென்றது தொடங்கி திரும்பி வருவது வரையிலான காலக்கோட்டில் இடங்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் கொண்டு தன்னுடைய தகவல்களையும் அனுபவங்களையும் ரெங்கசாமி மிகச் சரளமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். உதாரணத்துக்கு, சயாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தங்கவைக்கப்பட்ட மூங்கில்களால் கட்டப்பட்ட பூத்தாய்கள் எனப்படும் குடியிருப்புகளை ரெங்கசாமி விவரிக்கின்ற இடம் அதனைக் கற்பனையால் நிகழ்த்திக் காட்டுகிறது. முப்புறமும் திறந்த வெளி மூங்கில் கொட்டகைகளில் தாழ்வாக கூரைகள் கொண்ட குடியிருப்புகள் என அதனை வாசிப்பில் காட்சியாகக் கற்பனை செய்ய முடிகிறது. அரிசி மூட்டைகளை உயர அடுக்கி யானைகள் தூக்கி வரும் மரக்கட்டைகளைச் சீராக அடுக்கி இரும்பு கொக்கிகளால் இணைக்கப்படும் குவாய் பாலக் கட்டுமானத்தையும் சொல்லலாம். அப்படியே, பாலக் கட்டுமானம், உணவுகள், நோய்கள் என எல்லாவற்றின் பின்னும் சீரான தகவல்கள் தொகுப்பு தெரிகிறது. இந்த நாவலை வாசிக்கும் போதே, தமிழர்களின் துயரைப் பதிவு செய்யவே நாவல் எழுதப்பட்டிருக்கிறதென்பதை நாவலில் நேரடியாக வெளிப்படுகின்ற ஆசிரியர் குரல் தொடங்கி அவர் காட்டும் சித்திரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதனைத் தெளிவான கால, இட, வரலாற்றுத் தருணங்களின் வரையறைகளோடு ரங்கசாமியில் தர முடிந்திருக்கிறது.

ஆனால், நாவலில் வரலாற்றுத் தருணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற அளவு வரலாற்றுணர்வு வெளிப்படவில்லை எனலாம். ரெங்கசாமி காட்டும் உலகமென்பது கொடூரமான தண்டனைகள், அடக்குமுறைகள் மூலம் தமிழர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கும் ஜப்பானியர்கள், அவர்களின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து வேலை செய்யும் அப்பாவித் தமிழர்கள், தமிழர்களைக் காட்டிலும் சற்றே மேம்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் ஆங்கிலேயர்களால் ஆனதாகவே இருக்கின்றது. முற்றிலும் புதிய, கொடும் வேலைச்சூழலைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சூழலின் சித்திரிப்பென்பதும் உயிர்பற்றிருப்பதாகவே தோன்றுகிறது. எல்லா இழப்புகளையும் நோய்களையும் உடனுக்குடன் மறக்கவும் பழகிக்கொள்ளவும் செய்கின்றனர். அதே சமயம், தமிழர்களின் பேச்சு மொழியாகக் காட்டப்படுவதிலும் பெரும்பகுதி புலம்பல்களாகவும் அச்சமும் குழப்பமும் மிகுந்த சொற்களாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதில் இருப்பது ஒரு பார்வையாளர் கோணமெனச் சொல்லலாம். நாவலின் நெடுகே கொடுந்தருணங்களை எதிர்கொள்கின்ற தமிழ் பாத்திரங்களைச் சித்திரிக்கும் போது ஊடே பழந்தமிழர் பெருமையும் அதனால் உசுப்பப்பட்டு அவர்கள் எதிர்தாக்குதல் புரிவதையும் காட்சிப்படுத்துகிறார். அந்தத் தாக்குதல்கள் யாவும் நடக்கச் சாத்தியமானவையாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இருந்தப்போதும், வீரம் செறிந்த தமிழர்கள் ஜப்பானியர்களின் கொடுங்கரங்களுக்குள் கிடந்து அல்லாடுகின்றனர் என்ற பின்னணி அதற்குள் இருக்கும் மனிதர்களின் தனித்தன்மையைச் சுருக்கியளிப்பதாக இருக்கின்றது. இதனாலே நாவல் தமிழர்களின் வாழ்வு படும் இன்னல்கள் எனும் சுருங்கிய வரலாற்றுக் கோணத்தையே அளிப்பதாக மாறுகிறது.

அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவலை வரலாற்றுத் தருணங்களைக் கொண்டு நாவல் வடிவத்துக்குள் கொண்டு வரப்பட்ட முன்னோடி முயற்சி என்ற வகையில் முக்கியமானது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...

அகச்சோர்வில் கரைந்த பேரோசை

  ஜகாட் திரைப்படம் குறித்து வந்த எதிர்வினைகளில் மிகமுக்கியமானதாக இயக்குநர் சஞ்ஜய் குமார் குறிப்பிடுவது, // தோட்டத் துண்டாடலின் காரணமாக இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களைப் போல பெல்டா போன்ற நிலக்குடியேற்றத்திட்டங்கள் தரப்பட்டிருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால், அவர்கள் எவ்வித மாற்றுக் குடியிருப்புகளுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்ததாக மலாய் ரசிகர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதைச் சொன்னார். சுதந்திரத்துக்குப் பிந்தைய மலேசிய இந்தியர்களின் வாழ்வில் தோட்டத் துண்டாடலும் நகரத்தை நோக்கிய நகர்வும் மிகமுக்கியமான நிகழ்வுகளாகும். இந்தியர்களின் அரசியல், சமூகப்பொருளியல் சூழலை அறிந்து கொள்ள இநத இரண்டு நிகழ்வுகளுமே மிக முக்கியமானவை. அதனை விளக்குகின்ற கட்டுரைகளும் ஆய்வுகளும் செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஜகாட் படம் காட்டும் வறுமையும் வன்முறையும் நிரம்பிய சூழலுக்குள் வளர்கின்ற சிறுவனுக்குள் நிகழ்கின்ற உளவியல் மாற்றத்தை உயிர்ப்பாகக் காட்டப்படும் போதே அந்தச் சமூகச்சூழலின் நியாயம் ஒரு வாசகனுக்குப் புரிபடுகிறது. ஒரு கல...