முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

அசோகமித்திரனின் இரண்டு கதைகள்

அசோகமித்திரனின் இந்திராவுக்கு வீணை கற்று கொள்ள வேண்டும், இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை ஆகிய இரண்டு சிறுகதைகளுக்குமான கால இடைவெளி 21 ஆண்டுகள். முதல் கதை 1959 இல் வெளிவந்திருக்கிறது.  ஒரு இளம்பெண்ணுக்கு உருவாகின்ற வீணை கற்கும் ஆசையின் வழியே நடுத்தரக் குடும்பத்தில் பெண்களின் நிலை தெரிய வருகிறது. இரண்டாம் கதை, அந்த ஆசை ஈடேறாமல் மனதுக்குள் ஏற்படுத்தி விடும் அந்தரங்கமான வடுவொன்றைப் பேசுகிறது. இரு கதைகளுமே குடும்பச் சூழல், நெருக்கடிக்களுக்குள் புதைந்து போயிருக்கின்ற ஒரு பெண்ணின் அந்தரங்கமான உணர்வுகளைச் சொல்லுகின்ற முக்கியமான கதைகள்.

முதல் கதையில் குடும்பச்சூழலை நேர்த்தியான சித்திரிப்புகளால் அசோகமித்திரன் காட்டுகிறார். விற்பனைப் பிரதிநிதியான அப்பா தேர்வைக் காரணம் காட்டி மகளின் இசை வகுப்புக்குச் செல்லும் ஆர்வத்தைக் கலைக்கிறார். இசை ரசனை இல்லாத அம்மா, கோவில் கச்சேரியில் பாடவிருக்கும் கலைஞரைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள கேள்விகளால் இந்திராவைத் துளைத்தெடுத்து கச்சேரியின் போது வாய் பிளந்து தூங்குகிறார். அண்ணனோ, சீட்டு விளையாடும் ஆர்வத்தால் கச்சேரிக்கு வரவில்லை. இந்தச் சூழலில் எதிர்வீட்டு சரோஜா தன் இசை ஆசிரியரான வைத்தீஸ்வரன் கோவில் சகோதரர்களின் இசை மகிமையைச் சொல்லி அவர்களிடமே இசை கற்கச் சொல்கிறாள். அவர்களைக் காண தங்கையைத் துணைக்கழைக்கிறாள். அவளும் இவளைப் பொருட்படுத்தவில்லை. தனியாகவே சென்று இசை வகுப்பு பற்றி விசாரிக்கச் சென்று வந்தவளை அம்மா ஏசுகிறாள். அம்மாவின் ஏச்சை வாங்கியும் வீட்டு வேலைகளை அவள்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அந்தக் கோபத்தை அம்மாவுடனான படுக்கை இடைவெளியை ஒரு சாண் கூட்டுவதன் மூலம் மட்டுமே இந்திராவால் காட்ட முடிகிறது. நள்ளிரவில் மகள் விசாரித்த இசை வகுப்பைப் பற்றி அம்மா அறிந்து கொள்கிறாள். கொத்தமல்லி கொத்தைக் கூட பேரம் பேசி வாங்கும் அம்மா 20 ரூபாய் இசை வகுப்பு கட்டணத்தைக் கேட்டு அதிர்ந்த போனாலும் மகளை வகுப்புக்கு அனுப்ப சம்மதிக்கிறாள். ஆனாலும், அப்பா அனுமதிக்கமாட்டார் என இந்திரா தயங்குகிறாள்.  கட்டுச்செட்டாகக் குடும்பத்தை நடத்தியும் மாதக்கடைசியில் அக்கம் பக்கத்தாரிடம் அம்மாத்தான் கடன் வாங்குகிறாள். அந்த நெருக்கடிக்குள் மகளின் இசை ஆர்வத்தையும் அடக்கிவிட அவளின் மனம் காரணங்களைக் கண்டறிகிறது. இன்னும் ஈராண்டுகளில் திருமண வரன் கூடி வரும் போது பாடல்களைப் பாட வேண்டும். வீடு கட்ட செங்கல் சுண்ணாம்பு வாங்கும் மூலதனத்தைப் போல இசை வகுப்புக்குச் செல்வதும் திருமண வரன் கூடுவதற்கான மூலதனமே என அப்பாவிடம் சொல்வதற்கான காரணத்தைச் சொல்லி மகளை வகுப்பில் சேரச் சொல்கிறாள். மகள் இசை பயில அனுமதிக்க கலை ரசனையோ பொருளாதாரப் பலமோ அம்மாவுக்குத் தேவைப்படவில்லை. மகளின் அந்தரங்க ஆசையை அறிந்து கொள்ளும் நுண்ணுணர்வே அவளுக்குப் போதுமானதாக இருக்கிறது. அப்படி அனுமதித்த அடுத்தகணமே, அம்மா சத்தமின்றி உடல் குலுங்கி அழத் தொடங்குகிறாள். மகளின் நுண்ணுணர்வை அனுமதித்த அம்மாவுக்கு அடுத்த கணமே குடும்பச் சுமையில் கூடப்போகும் 20 ரூபாய்க்கான அலைச்சலும் அதற்காகக் கணவனிடம் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளும் சேர்ந்து அச்சுறுத்துகின்றன. மகளின் ஆசையை நிறைவேற்றிச் சற்றே பறந்து கொண்டிருந்தவளின் நுண்ணுணர்வு இறகுகளின் மீது வாழ்வின் அழுத்தங்கள் படிந்து அழத் தொடங்குகிறாள்.

உள்ளூர அம்மாவும் அப்படியான பல ஆசைகளைக் கைவிட்ட துயரை அறிந்தவளாகவே இருக்கக்கூடும். குடும்பச் சுமைகளின் முன்னே மகளின் ஆசையும் நிராகரிக்கப்படத்தான் போகிறது. அந்தத் துயரை அறிந்தவளாகத்தான் அம்மா தனக்குள்ளே அழுது கொள்கிறாள்.

 

இந்தக் கதையின் தொடர்ச்சியாக 1980 ஆம் ஆண்டு இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை எனும் சிறுகதையை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். இக்கதையில் நடுத்தர வயதை அடைந்திருக்கும் இந்திராவால் வீணையைக் கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. அவளின் மகனையாவது இசைவகுப்புக்கு அனுப்ப எண்ணுகிறாள். ஆனால், அவனுக்கும் ஆர்வமில்லாததால் இசை வகுப்புக்குச் செல்ல மறுக்கிறான். இசை வகுப்புக்குச் செல்ல முடியாத இளம்பருவத்து நினைவுகளில் ஒன்றை எண்ணிக் கொள்கிறாள். அவளுடைய அண்ணன்களுக்கு அறிமுகமான சங்கரன் எனும் நண்பன் வீட்டுக்கு வரத் தொடங்குகிறான். அசட்டுத்தனமான விவகாரங்களை வாதம் செய்கின்ற அண்ணன்களுக்கு வாய்த்த நண்பனான சங்கரன் எல்லாவற்றையும் தெளிவாக அணுகுகிறான். ஒரு நாள், இந்திராவின் மீது தனக்கிருக்கும் காதலைச் சொல்லிவிடுகிறான். ஆனால், அவனுடைய ஆசையைச் சொல்லி விட்ட சில நாட்களிலே வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொள்கிறான். இந்த நினைவு மீட்டலுக்குப் பின்னர் எதிரில் சங்கரன் தோன்றுகிறான். இந்திராவுக்கும் அம்மாவுக்கும் இருக்கின்ற நெருக்கத்தைக் காரணங்காட்டி அவளுடைய அண்ணன் தன்னைக் காத்திருக்கச் சொன்னதாக சங்கரன் கூறுகிறான். அம்மாவின் சம்மதம் கிடைக்காததாலும் இந்திராவும் தன் காதலைச் சொல்லாததாலுமே தான் ஒதுங்கி கொண்டதாகச் சொல்கிறான். அதைச் சொல்லிவிட்டுச் சட்டென வீட்டிலிருந்து வெளியேறுகிறான். மகனிடம் சொல்லி அவனை அழைத்து வரச்சொல்லித் தெருவுக்கு அனுப்புகிறாள். அங்கு யாருமே இல்லையெனச் சொல்லும் மகனை எண்ணி அவனைப் பொறுத்தவரையில் சங்கரனும் ஒன்றுத்தான் சர்தார் சிங்கும் ஒன்றுத்தான் எனச் சொல்லிக் கொள்கிறாள். கடைசியாக, சங்கரன் இறந்தே பல ஆண்டுகள் ஆகியிருந்தன என்பது இந்திராவுக்குத் தெரியாதெனக் கதையை முடிக்கின்றார்.

இசை கற்க முடியாத ஏமாற்றம் ஒருபக்கமிருக்க இன்னொருபக்கம் மனதுக்குள் இருந்த காதலும் சேர்ந்தே புதைந்து போன சோகத்தையும் நினைத்துப் பார்க்கிறாள். முதல் கதையில் அம்மா தனக்குள் குலுங்கி அழுது கொண்டதைப் போல காதலின் இழப்பையும் தனக்குள்ளே கற்பனையாக நிகழ்த்திக் கடந்து போகின்றாள். நுண்ணுணர்வு கொண்டவளான இந்திராவால் துயரைக் கற்பனையால் கடந்து போக முடிகிறதே தவிர ஏமாற்றங்களிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் தப்பிக்க முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...

அகச்சோர்வில் கரைந்த பேரோசை

  ஜகாட் திரைப்படம் குறித்து வந்த எதிர்வினைகளில் மிகமுக்கியமானதாக இயக்குநர் சஞ்ஜய் குமார் குறிப்பிடுவது, // தோட்டத் துண்டாடலின் காரணமாக இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களைப் போல பெல்டா போன்ற நிலக்குடியேற்றத்திட்டங்கள் தரப்பட்டிருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால், அவர்கள் எவ்வித மாற்றுக் குடியிருப்புகளுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்ததாக மலாய் ரசிகர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதைச் சொன்னார். சுதந்திரத்துக்குப் பிந்தைய மலேசிய இந்தியர்களின் வாழ்வில் தோட்டத் துண்டாடலும் நகரத்தை நோக்கிய நகர்வும் மிகமுக்கியமான நிகழ்வுகளாகும். இந்தியர்களின் அரசியல், சமூகப்பொருளியல் சூழலை அறிந்து கொள்ள இநத இரண்டு நிகழ்வுகளுமே மிக முக்கியமானவை. அதனை விளக்குகின்ற கட்டுரைகளும் ஆய்வுகளும் செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஜகாட் படம் காட்டும் வறுமையும் வன்முறையும் நிரம்பிய சூழலுக்குள் வளர்கின்ற சிறுவனுக்குள் நிகழ்கின்ற உளவியல் மாற்றத்தை உயிர்ப்பாகக் காட்டப்படும் போதே அந்தச் சமூகச்சூழலின் நியாயம் ஒரு வாசகனுக்குப் புரிபடுகிறது. ஒரு கல...