முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜகாட்- சூழல் மாற்றும் மனிதர்கள்

 

2015 ஆம் ஆண்டு முகநூலில் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் ம.நவீன், பாலமுருகன் ஆகியோர் எழுதிய பதிவுகளின் வாயிலாகவே ஜகாட் படத்தைப் பார்க்கும் உந்துதல் எழுந்தது. என்னுடைய நண்பர்கள் பலருக்கும் மலேசியப் படத்தைத் திரையரங்கில் பார்ப்பதில் தயக்கமிருந்தது. எனக்கும் கூட ஒரிரண்டு மலேசியப்படங்களைத் திரையரங்கில் பார்த்த கசப்பான அனுபவங்கள் இருந்தன. ஆனால், ஜகாட் படத்தின் முன்னோட்டம், போஸ்டர் வடிவமைப்பு, படத்தையொட்டி வெளியீடப்பட்ட பாடல் (ஜகாட்ன்னா நல்லா பையன்) எல்லாமே அது வரையில் நான் பார்த்திருந்த மலேசியப் படங்களைக் காட்டிலும் வித்தியாசமான படமாக ஜகாட் இருக்குமென்ற எண்ணத்தை உருவாக்கியது. அதோடு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் அதிகளவு புழங்கி தமிழ்மயப்பட்டுவிட்ட சொற்களில் ஜகாட் என்பது முக்கியமானது. ''அவன் ரொம்ப ஜகாட் புடிச்சவன், ஜகாட் காக்கி, ஜகாடானவன்'' என மிகச் சாதாரணமாக கொஞ்சம் அடாவடியான அல்லது ஒழுங்குகளைப் பின்பற்றாதவர்களைச் சுட்ட மிக இயல்பாக மலேசியத் தமிழர்களிடம் புழங்கிய சொல் அது. இப்படியாக, படத்தின் தலைப்பே மலேசியத் தமிழர்களின் வாழ்வியலுடன் நெருங்கியத் தொடர்பிருப்பதை உணர்த்தியது.


அந்த நம்பிக்கையில் கோலாலம்பூர் வந்திருந்த போது படத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். செந்தூல் திரையரங்கில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக் காட்சியில் பின் வரிசை மட்டும் முழுமையடைந்த திரையரங்கில் ஜகாட் படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன். படத்தின் முடிவு நிறைவு பெறாமல் ஏதோ தொக்கியிருப்பது போன்றிருந்தது. நானுமே தமிழர்கள் நிறைந்த கம்பத்தில் வளர்ந்திருந்ததால் படத்தின் களத்துடன் ஒன்றிப்போக முடிந்திருந்தது. அதோடு, சமூகச்சூழல், அரசியல் பின்னணி ஆகியவையும் படத்தைப் புரிந்து கொள்ள உதவியது. படம் முடிந்ததுமே ஏதோ உணர்வெழுச்சி எழுந்தது. ஒரு விமர்சனக்குறிப்பை எழுதி வைத்துக் கொண்டேன். அதனைப் பின்னாளில் முகநூலில் ஜகாட் படத்தையொட்டி நடத்தப்பட்ட விமர்சனப்போட்டிக்கு அனுப்பி வென்றேன். பின்னர், இயக்குநர் சஞ்சயின் அடுத்தடுத்த திரைப்பட முயற்சிகளை அறிந்து கொள்வது தொடங்கி அவரை நேர்காணவும் அமைந்த வாய்ப்பு எதிர்பாரதது. அப்படியாகத்தான், பத்தாண்டுகள் கழித்து ஜகாட் படத்தின் மறுவெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது.


ஜகாட் படத்தின் மையமென்பது இந்தியர்களின் சமூகச்சூழலைப் பற்றிய உரையாடல்தான். தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட இந்தியர்கள் நகரத்துக்குப் பெயர்ந்த பின்னர் ஏற்பட்ட சமூகச்சூழல்தான் படத்தின் களம். பொருளாதாரச் சூழல், கல்வி எனப் பலவற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சமூகம் வன்முறையைப் பற்றிக் கொள்கிறது. இந்தச் சமூகச்சூழலைப் பிரச்சாரமாக ஜகாட் படம் முன்வைக்கவில்லை. இரண்டு தலைமுறையைச் சேர்ந்த ஆண்களின் வாழ்வுடன் அதனைத் தேர்ந்த திரைமொழியுடன் முன்வைத்திருக்கிறது. மறுவெளியீட்டில் நான் பார்த்த ஜகாட் படத்தை வெறும் சமூகச்சூழலுடன் மட்டுமே என்னால அடையாளப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. படத்தில் இருக்கும் நான்கு ஆண் பாத்திரங்ளுக்குள் இடப்பெயர்வு செய்திருக்கும் மாற்றங்கள் குறித்ததாகப் புரிந்து கொண்டேன்.

அப்போயின் அப்பாவான மணியம் கண்டிப்பு மிகுந்த தந்தை. மர ஆலையில் கடுமையான பணிகளைச் செய்கின்றார். மகனின் கல்வி முன்னேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்டவர். கல்வியைத் தவிர வேறு திசை நோக்கி அவனுடைய கவனம் திரும்பும் போது கோபப்பட்டு உடனே கண்டிக்கச் செய்கிறார். அப்போய்க்கு மைக்கேல் ஜாக்சனின் மீது இருக்கும் ஈர்ப்பை அறிந்து கொண்டு கடும் கோபத்துடன் அவனே வடிவமைத்திருக்கும் மைக்கல் ஜாக்சனின் சட்டையை ஆவேசத்துடன் கிழித்தெறிகிறார். அதற்குப் பின் இருப்பது மகனுடைய எதிர்காலத்தின் மீதான கோபம் மட்டுமில்லை. தன்னுடைய இளமைக்காலத்தில் தோட்டத்தில் திருவிழாக்களின் போது நாடகம் நடித்து கலையார்வம் அது அளிக்கும் மகிழ்ச்சியையும் மணியம் அறிந்தவர்தான். ஆனால், தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நகர வாழ்வில் கடும் பணி செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு தம்பிகள் இருவரும் வன்முறைக் குழுக்களில் திரும்பிவிட்ட ஆற்றாமை கல்வியை மட்டுமே தன்னுடைய மகனுக்கு அளிக்க வேண்டுமென்ற இறுக்கத்தை அளிக்கிறது. சென்ற காலத்துத் தந்தையர்களின் இறுக்கத்துக்குப் பின் இருப்பது சமூகச்சூழலை அறிந்து கொள்ளும் பதற்றம் மட்டுமில்லை. மாறாக, தன்னுடைய இளமையில் பறிபோன கனவுகளின் ஏமாற்றமும் கூட என்பதை மணியம் பாத்திரம் உணர்த்துகிறது.

அப்போயின் முதல் சித்தப்பாவான பாலாவும் தோட்டத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் தான். ஆனால், அவனுக்கான இடத்தை வன்முறை, போதை வஸ்துவின் வாயிலாகக் கண்டு கொள்ள முயல்கிறான். பாலாவுக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்வின் மீதான பார்வை இருப்பதை அறிவார்த்தமான உரையாடல்களால் இயக்குநர் காட்டுகிறார். அந்த நிதானமும் துணிவுமே வன்முறைக் கும்பலில் மிக உயரிய நிலையான குழுத்தலைவனின் அணுக்க உதவியாளனாக அவனை முன்னிறுத்துகிறது. ஆனால், வன்முறைக் கும்பல தன்னளவில் சட்டவிரோத வியாபாரங்களைச் செய்யும் முதலாளிக்கான பாதுகாப்பையே அளிக்கிறது. தான் அதில் ஈட்டும் உயர்வென்பது தற்காலிகமானது. காவல் துறையிடம் சிக்காத வரையில் அல்லது பலியாடாக ஆக்கப்படாத வரையில் மட்டுமே பாதுகாப்பானது. அப்படி போதையினால் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்படும் பாலா குழுவினரால் கைவிடப்படுகிறான். அதன் பின்னர் அதிலிருந்து விலகி மீனவனாக வாழ்வை அமைத்துக் கொள்கிறான். அவனுடைய போதைப்பழக்கம் உள்ளிருந்து மெல்ல அவனை அரித்துத் தின்கிறது. போதை தரும் தன்னிலையழிவுக்குள் மூழ்கி மெல்ல இல்லாமல் போகிறான்.

அப்போயின் அடுத்த சித்தப்பாவான மெக்சிக்கோவும் சீன முதலாளியின் ஆசை வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அவனின் அணுக்கனாக மாறுகிறான். ஆனால், அதன் ஆயுள் எவ்வளவு தற்காலிகமானது என்பதை விரைவாகவே உணர்கிறான். காவல் துறையால் தடுக்கப்படுகின்றவனை சீன முதலாளி கைவிடுகிறான். அவனை மீட்டெடுக்க அண்ணனே முயல்வதை உணர்ந்து வன்முறைப் பாதையிலிருந்து விலக முடிவெடுக்கிறான். குழுவிலிருந்து விலகுபவனை, குழு சட்டவிதிப்படி ரத்தம் வரும் வரையில் அடித்துத் துன்புறுத்துகின்றனர். தன்னுடைய ஆற்றலின் எல்லையை உணர்ந்து வெடித்தழுகிறான்.

அப்போய்க்குமே அவனுடைய தந்தையைப் போல கலையின் மீதான ஆர்வம் இருக்கிறது. அவன் வரைகின்ற வடிவமற்ற வடிவம், மைக்கேல் ஜாக்சன் உடைக்கான சிரத்தை, மனனக் கல்வியின் மீதான வெறுப்பு என ஒவ்வொன்றாக அவனின் மாற்றுச்சிந்தனையும் கலைப்பார்வையும் வெளிப்படுகிறது. ஆனால், மனனக் கல்வி, கேள்விகளற்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள பழக்குவது, கடிவாளமிட்ட குதிரையாகத் தயார்படுத்துவது ஆகியவற்றிலே அவனைச் சுற்றிலும் இருக்கும் சமூகம் ஈடுபடுகிறது. இந்தச் சூழலின் மீதான ஒவ்வாமையுடன் வளர்கின்றவனுக்குச் சித்தப்பாவின் வன்முறை வாழ்வு மீது ஈர்ப்பு உருவாகிறது. அவனுடைய சித்தப்பா மெக்சிக்கோ வெடித்தழுவதைக் கேட்டதும் அவனுக்குள் மாற்றாக உருவாகியிருக்கும் பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. அந்த ஆற்றாமையுடனே அவனைக் கேலி செய்தவனைத் தாக்குகிறான். தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொள்ள முனையும் அப்போய் அடையும் ஒவ்வொரு உருமாற்றத்தையும் ஜகாட் காட்டுகிறது.

ஜகாட் காட்டும் வாழ்க்கையில் பெண்களுக்கு இடமில்லையென்றே கருதவேண்டியிருக்கிறது. அப்போயின் அம்மா குடும்பப்பாங்கான பெண். வேலை, வீட்டு வேலை, கணவனின் சொற்படி நடப்பது, மகனைக் கணவனின் மூர்க்கமான தாக்குதல்களிலிருந்து காப்பது ஆகியவையே அவள் செய்யக்கூடிய பொறுப்புகள். ஆண்மயப்பட்ட குடும்பச்சூழலுக்குள் புழங்குகின்ற பெயரற்றவளாகவே படைக்கப்பட்டிருக்கிறாள்.


அடுத்ததாக, படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் மிகச்சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு காட்சியும் ஒளிப்பதிவு செய்ய தேர்ந்தெடுத்திருக்கும் இடங்கள் அபாரமாக இருந்தது. மலையுச்சியில் தன்னந்தனியனாக அப்போய் அமர்ந்திருக்கும் காட்சி, கட்டடங்களில் வேர்பற்றி உயர்ந்து நிற்கும் ராட்சத மரங்கள் இடையே நிகழும் சண்டைகள் சிறப்பாக இருந்தது. அதோடு,சிறுவன் அப்போயாக நடித்திருக்கும் அர்வின், மணியமாக நடித்திருக்கும் குபேந்திரன், தினேஷ் சாரதி எனத் தேர்ந்த நடிப்பாற்றலையும் நடிகர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.

ஒரு சமூகச்சூழல் மாற்றம் எவ்வாறு மனிதர்களை வெவ்வேறாக இயக்குகிறது என்பது குறித்து ஜகாட் முன்வைக்கும் சித்திரம் மிகமுக்கியமானது. அக்டோபர் 3 மறுவெளியீடு கண்டிருக்கும் ஜகாட் படத்தை அவசியமாகத் திரையரங்கில் பாருங்கள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...

அகச்சோர்வில் கரைந்த பேரோசை

  ஜகாட் திரைப்படம் குறித்து வந்த எதிர்வினைகளில் மிகமுக்கியமானதாக இயக்குநர் சஞ்ஜய் குமார் குறிப்பிடுவது, // தோட்டத் துண்டாடலின் காரணமாக இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களைப் போல பெல்டா போன்ற நிலக்குடியேற்றத்திட்டங்கள் தரப்பட்டிருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால், அவர்கள் எவ்வித மாற்றுக் குடியிருப்புகளுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்ததாக மலாய் ரசிகர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதைச் சொன்னார். சுதந்திரத்துக்குப் பிந்தைய மலேசிய இந்தியர்களின் வாழ்வில் தோட்டத் துண்டாடலும் நகரத்தை நோக்கிய நகர்வும் மிகமுக்கியமான நிகழ்வுகளாகும். இந்தியர்களின் அரசியல், சமூகப்பொருளியல் சூழலை அறிந்து கொள்ள இநத இரண்டு நிகழ்வுகளுமே மிக முக்கியமானவை. அதனை விளக்குகின்ற கட்டுரைகளும் ஆய்வுகளும் செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஜகாட் படம் காட்டும் வறுமையும் வன்முறையும் நிரம்பிய சூழலுக்குள் வளர்கின்ற சிறுவனுக்குள் நிகழ்கின்ற உளவியல் மாற்றத்தை உயிர்ப்பாகக் காட்டப்படும் போதே அந்தச் சமூகச்சூழலின் நியாயம் ஒரு வாசகனுக்குப் புரிபடுகிறது. ஒரு கல...