கோவிட்
பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் வீட்டுக்குள்ளே எல்லாரும் முடங்கியிருந்த
சூழலில்தான் சிகண்டி நாவலை நவீன் உச்சவிசையுடன் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு
ஒர் அத்தியாயமென சிகண்டி நாவலை நவீன் ஊக்கத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார்.
அதை முதலில் வாசிக்க நேர்ந்த ஒரு சில வாசகர்களில் நானும் ஒருவன் என்றவகையில் ஒரு இலக்கிய
உபாசகனின் தரிசனத்தை அருகிலிருந்து பார்த்த அனுபவமாகத்தான் அதனைக் குறிப்பிட வேண்டும்.
சரியாக மதியத்துக்குள்ளாக எழுதிய அத்தியாயங்களை எனுக்கு அனுப்பிவிடுவார். அதனை உடனே
வாசித்துக் குரல்பதிவாகவோ அல்லது கட்டுரையாகவோ என்னுடைய கருத்துகளை அனுப்பிவைப்பேன்.
அதில் உடன்பாடில்லாத சிலவற்றைக் கூட துடுக்காகக் கூறியிருக்கிறேன். எல்லாவற்றையும்
பொறுமையாகக் கேட்டுவிட்டு அதனைப் பற்றிய எதிர்க்கேள்விகளுடன் எனக்கு அழைத்துப் பேசுவார்.
பல சமயங்களில் என்னுடைய எழுத்தில் இருக்கும் தெளிவு நேர்ப்பேச்சிலும் உரையாடலிலும்
இருப்பதில்லை. தேவைப்படும் நேரத்தில் கைகளுக்கு எட்டாத பாதாளக்கரண்டியாகச் சொற்கள்
பதுங்கி கொள்ளும். அப்பொழுதெல்லாம் நான் சொல்லும் உதிரிச் சொற்களைக் கொண்டு நான் சொல்ல
உத்தேசித்தவற்றை எனக்கே சொல்லி தன்னுடைய நாவலுக்கான கருத்துகளை நவீன் பெற்றுக்கொள்வார்.
சிகண்டி நாவலின் உச்சமான பல அத்தியாயங்கள் வாசிக்கும் போது எனக்குமே மனக்கொந்தளிப்பாகத்தான்
இருந்தது. அந்த மனநிலை அடங்கியப்பின்னர், அதனைக் குறித்து அவரிடம் பேசியிருக்கிறேன்.
நாவல் நிறைவுற்றப் பின்னர், நவீன் எனக்கு அழைத்தார். நாவல் வாசிப்பை விட என்னைப் பதைபதைப்பில்
ஆழ்த்தியது அவர் சொன்ன செய்தி. கோவிட் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்குக் கடுமையான மூச்சிளைப்பும் இருந்தது. கோவிட் தொற்று ஏற்படுத்தியிருந்த கடுமையான
உடற்சோர்வும் மூச்சிளைப்புமாக என்னிடம் நாவலைப் பற்றி பேசினார். அதன் முழுவரைவையும்
எனக்கு அனுப்பி வைப்பதாகவும் அதனைப் படியெடுத்து எனக்கொன்றும் எழுத்தாளர் அ.பாண்டியனுக்கு
ஒன்றும் மீதத்தை அவருக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அன்று அவர் குரலில்
இருந்தது தான் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து கொண்ட ஒரு கலைஞனின் உறுதி மட்டும்தான்.
அவர் வழியே எனக்கும் கிடைத்த தரிசனமாகத்தான் அத்தருணத்தை என் மனம் நினைவில் வைத்திருக்கிறது.
பின்னாளில், எத்தனையோ பொழுதுகளில் அவர் வழியே நான் அந்த தரிசனத்தை அடைந்திருக்கிறேன்.
நானும்
அவரும் நேபாளத்தின் உயரமான மலை அடிவாரங்களில் ஒன்றான அன்னப்பூர்னா மலை ஏற்றத்துக்குச்
சென்றிருந்தோம். மூன்றே நாட்களில் பல்லாயிரகக்கணக்கான படிகள், செங்குத்தான பாறைகள்,
பனிச்சரிவுகள் வழியே மலையேறும் சற்றே சாகசமான பயணமாகத்தான் இருந்தது. இரண்டாவது நாளிலே
நவீனுக்கு கடுமையான முதுகு வலி ஏற்படத் தொடங்கியது. மற்றவர்களை விட ஒரு நாள் பிந்தித்தான்
மலையுச்சியை வந்தடைந்தார். அவர் வந்து சேர்ந்ததுமே, நாங்கள் உச்சியிலிருந்து கீழிறங்குவதற்குத்
தயாரானோம். இன்னும் இரண்டரை நாட்கள் இடைவிடாமல் பயணித்துத்தான் மலைச்சரிவை அடைய வேண்டியிருந்தது.
அதனை எளிதில் கடந்துவிடலாம் என்று எங்களின் வழிகாட்டி உட்பட பலரும் அவரிடம் அறிவுறுத்திக்
கொண்டிருந்தார்கள்.
‘’
நான் ஒர் எழுத்தாளன். இந்தப் பயணத்தை நான் எப்பாடு பட்டேனும் கடந்துவிடுவேன். ஆனால்,
இந்தப் பயணத்தால் என்னுடைய முதுகு பாதிக்கப்பட்டு என்னுடைய எழுத்துக்குத் தடை ஏற்பட்டுவிடக்கூடாது.
என்னுடைய பிறப்பின் பொருளுக்குத் தீங்கிழைக்க விரும்பவில்லை’’ எனப் பொருள்படும்படி
நவீன் மிக உறுதியாகத் தெரிவித்தார். கடைசியாக, ஹெலிகப்டர் வாயிலாகத்தான் மலையிலிருந்து
இறங்கினார். என் முன்னால் நான்காயிர மீட்டர் உயர பனிமலைச் சிகரம் தெரிந்து கொண்டிருந்தது.
அதன் உச்சத்தைக் காண நான் மேற்கொண்ட பயணத்தைக்
காட்டிலும் ஒருபடி மேலானதாகத்தான் அவருடைய சொற்களின் உறுதி எனக்குள் பதிந்தது.
இலக்கியம்
மனிதனின் நுண்ணுணர்வான பகுதிகளையும் உணர்வுகளையும் தான் பாடம் செய்து காட்டுகிறது.
பொதுவாக, செயல்புரியும் மனிதர்கள் முதலில் இழக்க நேர்வது நுண்ணுணர்வு எனும் மனதின்
மெல்லிய இழையை. அது காலம், சூழல், மனிதர்கள் என எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் அவசத்தில்
மெல்ல அகன்றிருக்கும். ஆனால், நவீனின் உறுதி அவரை ஒரு செயல்புரியும் மனிதராக மட்டும்
நிறுத்திவிடமால் மனத்தில் இருக்கும் நுண்ணுணர்வு மிகுந்த சிறுவன் ஒருவனையும் பாதுகாத்து
வருகிறது. செயல்புரியும் மனிதர்களுக்கே உரிய இறுக்கம் அவரிடமும் சமயங்களில் இருக்கத்தான்
செய்யும். ஆனால், அது எந்தவகையிலும் சூழ இருப்பவர்களைத் தாங்கும் அவருடைய உறுதியை இழக்கச்
செய்துவிடவில்லை. அதோடு, தான் வாழும் சமூகம், மொழி, கலை, ஆளுமைகள் என அனைத்தின் மீதும்
மெய்யான ஆர்வமும் அக்கறையும் கொண்ட ஒரு கலைஞனாகவும் ஆக்கியிருக்கிறது.
இப்படியாக
நவீன் வழியே, நான் அடைய நேர்ந்த எத்தனையோ தரிசனங்கள் இருக்கின்றன. ஒருவகையில் என்னுடைய
ஞானாசிரியனாகத்தான் அவரைக் காண்கிறேன். அவர் வழியே நான் அடைய நேர்ந்த அத்தனை தரிசனங்களுக்கும்
நன்றி. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

கருத்துகள்
கருத்துரையிடுக